“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (திருக்குறள் 43) என இல்லறத்தாரின் கடமையைக் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். மூதாதையர், தெய்வம், விருந்தினர், உறவினர், குடும்பத்தினர்
என்கிற ஐவகைப்பாட்டினரையும் பேணுவது இல்லறத்தாரின் தலையாய கடமை என்பது இதன் பொருள்.
விளைச்சலில் ஆறிலொரு பங்கை மன்னன் (இறையாக) வரியாகப் பெற்ற காலத்தில் மீதி ஐந்துப்பங்கை
எவ்வாறு செலவிட்டு வந்தனர் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. நல்லரசு வல்லரசு மக்கள்நலன்
காக்கும் அரசு என நடுவணரசும் மாநில அரசுகளும் கூறிவரும் இக்காலத்தில் பெருஞ்செல்வம்
படைத்தோர் அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பது வருமானவரி வழக்குகளின் எண்ணிக்கையில்
இருந்து தெரிய வருகிறது. பொய்க் கணக்கு எழுதியும், தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களில்
சொத்துக்களை வாங்கியும் வரி செலுத்தாமல் அரசைச் செல்வர்கள் ஏய்த்து வருவதை அந்த வழக்குகள்
காட்டுகின்றன. அதேநேரத்தில் ஊதியம் பெறும் பிரிவினரிடம் மூலத்திலேயே வருமான வரி பிடிக்கப்படுகிறது.
சொந்த வீடு, நிலம், ஊர்தி என எந்தவொரு வசதியும் இல்லாமல், வாழ்க்கைத் தேவையை நிறைவுசெய்யப்
போதிய பணமில்லாமல், வாயையும் வயிற்றையும் கட்டிச் செலவைச் சுருக்கி வாழ்வோரிடம் மூலத்திலேயே
கட்டாயமாக வருமான வரி பிடிக்கப்படுகிறது. செல்வர்களிடம் வரியைப் பெற முடியாமல் வழக்குத்
தொடுப்பதும், ஏழைகளிடம் மூலத்திலேயே வரி பிடிப்பதும் நடுவண் நேரடி வரிகள் வாரியத்தின்
செயல். உரிய செலவுக்கணக்கைக் காட்டினால் பிடித்த வரித்தொகையில் இருந்து திரும்பப் பெறலாம்
என விதி வகுத்துள்ளனர். ஆனைவாயில் சென்ற கரும்பு சாணியாக வெளிவருமா? சாறாக வருமா? என்பதற்கான
விடையை அறிந்தோருக்கு அதிகப்படியான வரியைத் திரும்பப் பெறுவதற்கான செயலும் அத்தகையதே
என்பது தெரியும். நேரடி வரி பெறுவதில் ஊதியம் பெறும் பிரிவினரே பெரும்பாலும் அடிபடுகின்றனர்.
செல்வர்கள் பொய்க் கணக்குக் காட்டி ஏய்த்து விடுவதைப் பல்வேறு வழக்குகளில் பார்த்து
வருகிறோம்.
சரக்கு சேவை வரி என்னும் மறைமுக வரி விதிப்பிலும் ஏழைகள்
கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். துணிவெளுக்கும் சலவைக்கட்டி முதல் பசியாற்றும் உணவுப்பொருட்கள்
வரை அத்தனைக்கும் வரி. உயர் வருமானப் பிரிவினருக்கு அதிக விழுக்காடும், குறைந்த வருமானப்
பிரிவினருக்குக் குறைந்த விழுக்காடும் வருமான வரி பெறப்படுகிறது. ஆனால் மறைமுக வரியான
சரக்கு சேவை வரி அனைவருக்கும் ஒரே அளவுதான். உலகச் செல்வந்தர் பட்டியலில் உள்ளவரும்,
நாட்டின் கடைக்கோடி ஏழையும் 100 நூறு ரூபாய்க்குச் சலவைக் கட்டி வாங்கினால் இருவருமே
18 ரூபாய் வரி கட்ட வேண்டும். இதில் நடுவண் மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்துகொண்டு ஏழைகளின்
வயிற்றில் அடிக்கின்றன. அதிக வரி விகிதம் உள்ளதாகக் குறைகூறுவதுடன், வரிவிகிதத்தைக்
குறைக்க வேண்டும் என்று கோரிவரும் மாநில அரசுகளும் இந்த வரிவருவாயில் சமப் பங்கைப்
பெறுவது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் உழைத்துப் பிழைப்போருக்குத் தன்னையும் தன் குடும்பத்தினரையும்
பேணுவதற்கே போதுமான பொருள் கிட்டுவதில்லை. அவர்கள் ஈட்டும் வருமானத்தில் மறைமுக வரியாக
(சரக்கு சேவை வரி) 5 முதல் 18 விழுக்காடு வரை சென்றுவிடுகிறது. வருமான வரி செலுத்தும்
வரம்புக்குள் வருவோருக்கு இரண்டரை இலட்ச ரூபாய் வரை வரி விலக்கு உள்ளது. (அவர்களும்
மறைமுக வரிவிதிப்புக்குத் தப்ப முடியாது). அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு இரண்டரை இலட்ச
ரூபாய்க்கும் 5 விழுக்காடு என்கிற அளவில் வருமான வரி உயர்ந்துகொண்டே சென்று 15 இலட்ச
ரூபாய்க்கு மேல் செல்லும்போது 30 விழுக்காடாக முடிகிறது. ஆலைக் கரும்பில் சாறுபிழிவதைப்போல்
ஏழைகளிடம் 18 விழுக்காடு வரி பெற்றால் அவர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத்
தேவைகளை எவ்வாறு நிறைவுசெய்ய இயலும்? இவற்றுக்கு அரசிடம் கையேந்த வேண்டிய தன்மானமில்லா
நிலையிலேயே தொடர்ந்து உள்ளனர். 18 விழுக்காடு சரக்கு சேவை வரி என்பது மன்னராட்சிக்
காலத்தில் விதித்த ஆறிலொரு பங்கு என்னும் விகிதத்தைவிட அதிகமாகும். ஆண்டுக்கு 15 இலட்ச
ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 விழுக்காடு வருமான வரி என்பதும் மிகவும்
அதிகப்படியான விகிதமே ஆகும். நாடுகளிடையே தடையற்ற வணிகம், வரியில்லா வணிகம் என்கிற
உடன்பாடுகளைச் செய்துகொள்ளும் அரசு உள்நாட்டில் வரிவிகிதத்தைக் கடுமையாக உயர்த்திக்
கசக்கிப் பிழிகிறது. இவ்வளவு அதிக வரி விதிக்கப்படும் நாட்டில் வளங்கள் எப்படிப் பெருகும்?
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு,
“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு” (திருக்குறள் 739) என இலக்கணம் வகுத்துள்ளார்
திருவள்ளுவர். வளங்களை நாடிச் செல்லும் நிலையில் உள்ளது நாடல்ல; தேடிச் செல்லும் நிலை
இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கும் வளங்களைக் கொண்டது நாடு என்பது அதன்பொருள். மண்,
மணல், கல், கனிமம், மரங்கள் என இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் நிலமாக உள்ள நம் நாடு, நாடு என்னும் இலக்கணத்துக்கு உட்படுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு,
“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” (திருக்குறள் 385) என இலக்கணம் வகுத்துள்ளார்
திருவள்ளுவர்.
வருமான வரி, உற்பத்தி வரி, சரக்கு சேவை வரி என்னும் பெயர்களில்
வருவாய் வழிகளை உண்டாக்கிப் பெருந்தொகையை ஈட்டும் அரசுகள், அவற்றை ஏழைகளின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் வகுத்துச் செலவிடுகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க
வேண்டும். செல்வந்தர்கள் என்னும் மேட்டை வரி விதிப்பால் வெட்டி அதைக் கொண்டு நலவாழ்வுத்
திட்டங்களைச் செயல்படுத்தி ஏழைகளின் வறுமைப் பள்ளத்தை நிரப்பி இரு பிரிவினரையும் ஏற்றத்தாழ்வற்ற
சமநிலைக்குக் கொண்டுவருவதே மக்கள்நல அரசின் இறுதிநோக்கமாக இருக்க வேண்டும். இலட்சம்
கோடி ரூபாய் வைத்திருப்போனிடமும், நூறு ரூபாய் வைத்திருப்போனிடமும், நூறு ரூபாய்ப்
பொருளுக்கு 18 ரூபாய் வரி பெறும் அரசு அதை இருவருக்குமே சமமாகச் செலவிட்டால் எப்படி
ஏற்றத்தாழ்வு ஒழியும்? மேடு மேலும் உயரும்; பள்ளம் மேலும் ஆழமாகும். இத்தகைய சுரண்டல்
வரி விதிப்பையே இந்தியா கொண்டுள்ளது. செல்வந்தர்கள் ஒருநேரத்தில் செலவழிப்பதைவிடக்
குறைவான தொகையே ஏழைகளின் மாத வருமானமாக, ஆண்டு வருமானமாக உள்ளதும் இந்த ஏற்றத்தாழ்வைக்
காட்டும் சான்றாகும்.
இந்தியாவில் உழவர்கள் பயிரிடும் நிலத்தையும், குடியிருந்த
வீட்டையும் வறுமையால் விற்பதும், கடன்சுழலில் சிக்கித் தற்கொலை செய்வதும், சிறுகுறுந்தொழில்,
குடிசைத் தொழில் செய்தோர் கடன்சுமையால் தொழில்களை விட்டு வெளியேறுவதும், செல்வந்தர்களின்
சொத்துமதிப்பு கொரோனா சூழலுக்குப் பின் பல மடங்கு உயர்ந்துள்ளதும் இதை மெய்ப்பிக்கின்றன.
மக்களை அரசுகள் சுரண்டுவதையும், எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உருப்படியாக
எதையும் செய்யாததையும் காட்டும் அடையாளங்களாகப் பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதம்
உயர்வு, வரி விகிதம் உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியன உள்ளன.
மக்களிடம் அரசு வரி வாங்குவது எப்படி இருக்க வேண்டும்? எப்படி
இருக்கக் கூடாது? என்பதைப் புறநானூற்றுப் பாடலில் புலவர் பிசிராந்தையார் எடுத்துக்காட்டுடன்
கூறியுள்ளார். வயல்நெல்லை அறுத்துச் சோறுபொங்கிக் கவளங்களாக உருட்டி யானைக்குக் கொடுத்தால்
பலநாட்களுக்கு உணவாகும் என்றும், நெல்வயலில் யானையை மேயவிட்டால் அது தின்பதைவிடக் காலால்
மிதித்து வயலை அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார். யானை வயலில் இறங்கி மேயும் வரிமுறையையே
இப்போதைய நடுவண் மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. யானை வாயில் சென்ற பயிராக வரிவிதிப்பில்
ஏழைகளின் ஊதியம் கரைகிறது. யானை காலில் மிதிபட்டதுபோல் அவர்களின் வாழ்வு அழிகிறது.
கொடுங்கோல் அரசு மக்களிடம் அளவுக்கதிகமாக இறையிறுப்பது (வரி
பெறுவது) இரவு (பிச்சை எடுத்தல்) என்றும், அது கூரிய வேலுடன் காட்டுவழியில் நின்றுகொண்டு
வழிப்போக்கர்களிடம் பொருட்களைப் பறிப்பதைப் போன்றது என்றும் கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில்
திருவள்ளுவர் கூறுகிறார்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (திருக்குறள் 552).
சரக்குப் போக்குவரத்துக்கான மின்னணு வழிச்சீட்டு, ஊர்திகளுக்கான
நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டணம் ஆகியவற்றைத் திருவள்ளுவரின் பார்வையிலேயே பார்க்க வேண்டியுள்ளது.
சுங்கக் கட்டணம் பெறுவதிலும், ஆண்டுக்காண்டு கட்டணத்தை உயர்த்துவதிலும் அரசு காட்டும்
அதே அளவு அக்கறையைச் சாலையைச் செப்பனிட்டுச் சீரமைப்பதிலும் காட்ட வேண்டும் என மக்கள்
எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றங்களாலும் பலமுறை சுட்டிக் காட்டப்பட்ட அந்த எதிர்பார்ப்பு
நிறைவேறாமலேயே உள்ளது.
சரக்கு சேவை வரி வருவாய் மாதத்துக்கு மாதம், ஆண்டுக்காண்டு
உயர்ந்து வரும் நேரத்தில், மருத்துவம், கல்வி, அடிப்படை உட்கட்டமைப்புத் திட்டங்கள்,
சமூகநலம் ஆகியவற்றுக்கான நடுவண் அரசின் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு விகிதம் குறைந்து
வருகிறது. அரசுகள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் மறந்து பல துறைகளைத் தனியார்
கைகளில் கொடுத்துவருவது மக்களிடையே ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும். அதிக வரி விதிப்பு,
நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைப்பு, அரசு பொறுப்புகளையும் கடமைகளையும் துறந்து
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல் ஆகிய போக்கால் வலியோர் வாழவும், எளியோர்
வீழவுமான சூழல் உருவாகும் என்கிற அச்சம் மக்களிடையே எழுகிறது.
சே.பச்சைமால்கண்ணன்