ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

அனைவருக்கும் வீட்டு வசதி


கோயம்புத்தூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டத்துக்காக நிலம் எடுத்ததை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர். நிலம் எடுத்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்து புதிய சிந்தனையை எழுப்பியுள்ளது. இலக்கக் கணக்கானோர் வீடற்றவர்களாக மரத்தடி, சாலையோர நடைபாதை, குழாய்கள் ஆகியவற்றில் இருப்பதையும், இலக்கக் கணக்கானோர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பதையும் கூறி நாட்டில் மலைக்கும் மடுவுக்குமான பொருளியல் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார் நீதிபதி.
இந்நிலையை மாற்ற ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போருக்குச் சொத்து வரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் ஆகியவற்றை இருமடங்காகக் கூட்டினால் என்ன எனவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்நாட்டில் வீடு நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கத் தடை விதித்தால் என்ன எனவும் வினவியுள்ளார். இவற்றில் முதல் கருத்து எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இந்தக் கட்டண உயர்வை, அந்த வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்களின் தலையிலேயே உரிமையாளர்கள் ஏற்றுவர். இதனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் மேலும் சுரண்டலுக்கு உள்ளாவார்கள். இப்போதே நூறு அலகுகள் வரை கட்டணமின்றி வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கே அலகுக்கு ஐந்து முதல் எட்டு ரூபாய் வரை கட்டணம் வாங்கி வீட்டுரிமையாளர்கள் பலர் கொள்ளையடிக்கின்றனர். இரண்டாவது வீட்டுக்கு இருமடங்கு கட்டணம் என்றால் குடியிருப்போரின் தலையில்தான் அது விழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வீட்டை வாடகைக்கு விட்டுப் பணம் ஈட்டுவோரில் பெரும்பாலோர் அதை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கவில்லை என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளதாக ஆறாயிரத்துச் சொச்சம்பேர் மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் தெரிகிறது. இரண்டாவது வீட்டுக்கு அதிக வரி விதிப்பது, இரண்டாவது வீடு வாங்கத் தடை விதிப்பது எனச் சுற்றி வளைத்து வருவதற்குப் பதில் நேராகவே முதல் நடவடிக்கைக்கு வந்துவிடலாம். வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு அந்த வீட்டைச் சொந்த வீடாக்கி விடலாம். நிலம், வீடு ஆகியவற்றுக்குச் சந்தை மதிப்பில் இல்லாமல், அரசு வழிகாட்டு மதிப்பீட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த மதிப்பை அரசே உரிமையாளருக்குக் கொடுத்துவிட வேண்டும். அந்த வீட்டுக்கு முன்பு எவ்வளவு வாடகை கொடுத்தாரோ அதே தொகையை மாதத் தவணையாக அரசின் வீட்டு வசதி வாரியத்துக்குப் புதிய உரிமையாளர் தவறாமல் செலுத்தி அதைத் தனக்கு உரிமையாக மாற்றிக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையால் அரசும் சொந்த வீடு இல்லாதவர்களும் நன்மை பெறுவர். வீட்டு வாடகை வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பது முடிவுக்கு வரும்.
அடுத்த நடவடிக்கையாக ஆளில்லாத வீடுகளைக் கண்டறிந்து, வீடற்றுச் சாலையோரத்திலும் மரத்தடிகளிலும் வாழ்பவர்களுக்கு உரிமையாகவும், உடைமையாகவும் ஆக்கி விடலாம். இதனால் வீடற்றவர்களே இல்லை என்கிற நிலை உருவாகும். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழும் அளவுக்கு வீடுகளின் எண்ணிக்கை உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போர் வாடகைக்கு விட்டிருப்பதும், அதிக வாடகைக்கு ஆள் கிடைக்காவிட்டால் வீட்டை ஆளில்லாமல் அடைத்துப் போட்டிருப்பதுமே நாட்டில் வீட்டு வசதி போதுமான அளவுக்கு இல்லை எனச் சொல்லும்படி செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு வீட்டிலும் குடியிருப்போரிடம், அவர்கள் வாழ்வது சொந்த வீடா, வாடகை வீடா என வினவி அறிந்து அதைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாடகை வீடு எனில் அந்த வீட்டு உரிமையாளரின் பெயர், ஆதார் எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்கள் நேர்மையாக அதைக் கணக்கெடுப்பில் சொன்னால், அவர்களுக்கு அரசின் வழிகாட்டி மதிப்பின்படி உரிய விலை கிடைக்கும். உரிமையாளர் ஒப்புக்கொள்ளாமல் அந்த வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் மட்டுமே தகவல் தெரிவித்தால், வீடுகளை அரசே கையகப்படுத்தி, வாடகைக்குக் குடியிருப்பவருக்கே அதைச் சொந்தமாக்கிவிட்டு, அவர்களிடம் பெறும் விலையைப் பொதுநிதியில் சேர்க்கலாம்.  பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பால் வீடுள்ளவர்கள், வீடற்றவர்கள், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பவர்கள், பல வீடுகளை வைத்துக்கொண்டு கணக்கில் காட்டாதவர்கள், வரி ஏய்த்தவர்கள் ஆகியோரை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்.
ஆதார் எண் பதியாததற்காகக் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவது, எரிவளி மானியத்தை நிறுத்துவது என்பன போன்ற சில்லறைக் குறும்புகளைச் செய்வதை விட்டுவிட்டு, பொருளியல் அடிப்படையில் மக்களிடைய ஏற்றத்தாழ்வற்ற சமநிலையை எட்ட அரசுகள் பாடுபட வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்/ படுபயனும் பார்த்துச் செயல் எனக் கூறும் திருக்குறளை எண்ணி நடுவண் மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மணிமண்டபமும் நினைவிடமும் நுழைவாயிலும் தேவையில்லை


நாடு விடுதலை பெற்றது முதல், விடுதலைக்குப் பாடுபட்ட பெரியோர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் அருஞ்செயல்களையும் தந்நலமற்ற ஈகத்தையும் மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் அவர்களுக்கு மணிமண்டபமும் நினைவிடமும் அமைக்கப்பட்டன. அண்ணல் காந்திக்குச் சென்னை கிண்டியிலும் கன்னியாகுமரியிலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபங்களில் காந்தியடிகளின் உடலை எரித்த சாம்பல் கலயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராசரின் நினைவிடம் சென்னை கிண்டியிலும் அவரின் மணிமண்டபம் கன்னியாகுமரியிலும் உள்ளன. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்குத் திருநெல்வேலியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் திருவிதாங்கோட்டில் இருந்து பிரித்துத் தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்ட மார்சல் நேசமணிக்கு நாகர்கோவிலில் மணிமண்டபம் உள்ளது.
வழித்தோன்றல்கள் இல்லாத காமராசருக்கு அரசே நினைவிடமும் மணிமண்டபமும் கட்டியதை ஏற்கலாம். காமராசருக்கு முன்னே மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரைக்குச் சென்னைக் கடற்கரையில் சதுக்கம் அமைத்தவர் கருணாநிதி. 1987ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான ம.கோ.இராமச்சந்திரனுக்கு அதிமுக அரசால் சென்னைக் கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டது. இதற்குப் பின் கடற்கரையில் இயற்கைச் சூழலைப் பாதிக்கும் வகையில் அரைக் கிலோமீட்டர் தொலைவுக்கு எந்தக் கட்டுமானத்தையும் எழுப்பக் கூடாது எனக் கூறிக் கடற்கரை மேலாண்மை விதியே கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் கடற்கரையைக் கல்லறைத் தோட்டமாக்கும் போக்கு நிற்கவில்லை. 2016ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் செயலலிதா மறைந்தபோது அவரது உடல் ம.கோ.இராமச்சந்திரன் நினைவிடத்தின் அருகிலேயே வைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு கருணாநிதி மறைந்தபோது கடற்கரையில்தான் அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு சட்டப்போராட்டமே நடைபெற்றது. இறுதியில் அரசும் நீதித்துறையும் சேர்ந்து அண்ணாதுரை சதுக்கத்தின் அருகில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய ஒப்புதல் அளித்தன. ஆகக் கடற்கரை மேலாண்மை விதிகளைக் கொண்டுவந்த பின் விதிகளை மீறிச் சென்னை மெரினா கடற்கரையில் இரு சமாதிகள் புதிதாக எழுப்பப்பட்டன. இதில் வியப்பு என்னவென்றால் உயிரோடு இருந்தபோது மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துப் பல்லாயிரம் கோடி ரூபாயையும் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் வளைத்தவர்களுக்கு அவர்களைச் சார்ந்தவர்கள் ஆறடி நிலங்கூடக் கொடுக்கவில்லை. கடற்கரைப் புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமன்றித் தன்மான இயக்கம் எனக் கூறிக்கொண்டு சிலைவழிபாட்டைக் கண்டித்தவர்கள் இன்று சமாதியை வழிபட்டு வருகின்றனர்.
வீடற்ற மனிதர்கள் கடற்கரையில் குடிசை கட்டக்கூட அனுமதிக்காத அரசு, செயலலிதாவுக்குப் பொதுப்பணத்தில் ஐம்பது கோடி ரூபாயைச் செலவிட்டு நினைவிடம் அமைத்துள்ளது. செய்ந்நன்றி கூறலைத் தவிர இதில் வேறொரு சிறப்புமில்லை. தமிழகத்தின் ஆட்சியைத் தன்னிடம் வழங்கிய அண்ணாதுரைக்குச் சதுக்கம் எழுப்பினார் கருணாநிதி. அதிமுகவைவும் அதன்வழித் தமிழகத்தின் ஆட்சியையும் தன்னிடம் ஒப்படைத்த ம.கோ.இராமச்சந்திரனுக்கு மக்கள் பணத்தில் நினைவிடம் அமைத்தார் செயலலிதா. தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பு தங்களுக்கு வரக் காரணமான அந்தச் செயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்துள்ளது பழனிசாமி பன்னீர் அரசு. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையில் கருணாநிதிக்குக் கோட்டம் அமைத்துவிடும்.
வீடற்று மரத்தடியிலும் குழாய்களுக்குள்ளும் சாலையோரத்திலும் கிடக்கும் இலட்சக்கணக்கானோர் இருக்கும் இந்த நாட்டிலே, தங்கள் நன்றிக் கடனைத் தீர்க்கப் பொதுப்பணத்தை வீணாக்கும் வீணர்கள் ஆட்சியாளர்களாக ஆனது தமிழகத்தின் இருண்ட காலங்களில் ஒன்றேயாகும். ஒரு குடும்பத்துக்கு 5 இலக்கம் ரூபாய் என்கிற கணக்கில் குறைந்தது ஆயிரம் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம் ஐம்பது கோடி ரூபாயில். மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சென்னைக் கடற்கரையில் பொதுப்பணம் வீணாவது போதாதென்று திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டப்பெற்றுள்ளது. தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழுக்குத் தொண்டாற்றியதாகக் கூறி வருகிறார்கள். தமிழால் தினத்தந்தி வளர்ந்ததேயொழியத் தினத்தந்தியால் தமிழ் ஒருகாலும் வளரவில்லை. இன்னமும் ராஷ்டிரபதி, ஜனாதிபதி, சுப்ரீம்கோர்ட், ஐகோர்ட், கலெக்டர், கவர்னர், தாலுகா, தாசில்தார், வக்கீல் என்றெல்லாம் மொழிநடையைக் கையாண்டுவரும் தினத்தந்தியா தமிழ் வளர்க்கிறது? தமிழாலும் தமிழர்களாலும் தினத்தந்தி வளர்கிறது. அதன் உரிமையாளரின் சொத்துக்கள் வளர்ந்துள்ளன. பா.சிவந்தி ஆதித்தனின் மரபினருக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்துக்கள் உள்ள நிலையில், அவருக்குப் பொதுப்பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? எல்லாம் வாக்குவங்கி அரசியல்தான். அரசின் இந்தச் செயல், இல்லாதவனிடம் உள்ள தார்ச்சீலையை உரிந்து இருக்கிறவனுக்குத் தலைப்பாகை அணிவிப்பதை ஒக்கும்.
இதேபோல் சென்னைக் கடற்கரைச் சாலையில் சட்டமன்றத்தின் பெயரிலும், ம.கோ.இராமச்சந்திரனின் பெயரிலும் அமைக்கப்பட்டுள்ள 2 வளைவுகளும் தேவையற்றவை. மக்களின் பணத்தை இப்படியெல்லாம் வீணாக்க முடியுமா என உலகமே இந்த வீணர்களைக் கண்டு வியக்கும் நகைப்புக்குரிய அடையாளங்களாகவே இவை திகழ்கின்றன. சென்னைக் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மேற்கு நுழைவாயிலில் கருணாநிதியின் பெயரால் கட்டப்பட்டுள்ள நுழைவாயிலும் பொதுப்பணத்தை வீணாக்கும் பட்டியலிலேயே சேரும். இந்த நுழைவாயில்கள் இல்லாவிட்டால் பேருந்தும் மக்களும் செல்ல முடியாதா என்ன?
நுழைவாயில்கள் அமைக்கும் செலவில் வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். ஊர்ப்புறங்களுக்குச் சாலை அமைக்கலாம். பாலங்கள் அணைகள் கட்டலாம். கால்வாய்கள் குளங்கள் வெட்டலாம். சிறு தொழிற்சாலைகள் அமைக்கலாம். ஆண்ட மரபினர் எனக் கூறித் தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் தமிழரே எண்ணிப் பார்ப்பீர். மீட்சி கொணர்வீர்..

மிகப்பெரிய ஏமாற்று


தமிழ் வழியில் படித்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது மிகப்பெரிய ஏமாற்று ஆகும். 
இந்திய ஒன்றியத்திலும் தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தவறாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்த பிராமணர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிக இடங்களைப் பிடித்திருந்ததால் பிராமணர் அல்லாதோருக்குக் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப்பட்டது. விடுதலைக்குப் பின் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலினப் பிரிவினருக்குக் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக வகை செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடும் முதல் பத்தாண்டுகளுக்குத் தான் என்றும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்கலாம் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பிராமணர் அல்லாதோருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்குக் கேடு வந்தது. இதையுணர்ந்த பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். பெருந்தலைவர் காமராசரும் வலியுறுத்தியதை அடுத்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பின் ஏராளமான திருத்தங்கள் வந்துவிட்டன.
இந்த இடஒதுக்கீட்டு முறையே தவறானதாகும். சிறுபான்மையரிடம் இருந்து பெரும்பான்மையரைக் காப்பதாகக் கூறிக்கொண்டு பெரும்பான்மையருக்குக் குறைந்த அளவு இடங்களை ஒதுக்கிவிட்டு மற்றவற்றைப் பொது இடங்களாக அறிவித்து விடுகின்றனர். இதனால் ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமே பிற்படுத்தப்பட்டோரும், பட்டியலினத்தாரும் பெறும் நிலை உள்ளது. அவற்றுக்கும் தகுதியுள்ள ஆட்கள் வரவில்லை எனக் கூறிப் பின்னடைவு இடங்களாக அறிவித்துக் காலியாக வைப்பதும், பின்னர் அதிலும் பிராமணர்களை நிரப்புவதும் பெரும்பாலான அரசு துறைகளில் வழக்கமாகவே உள்ளது. இதனால் மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டுக்குக் கீழ் உள்ள ஒரு வகுப்பினர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஐம்பது விழுக்காடு வரை பெற்று வருகின்றனர்.
இயற்கையாக இட ஒதுக்கீடு யாருக்குக் கொடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மையரிடம் இருந்து சிறுபான்மையரைக் காப்பதற்காகச் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். மீதமுள்ள இடங்களைப் பெரும்பான்மையருக்குக் கொடுத்திருக்க வேண்டும். இந்திய ஒன்றியமும் தமிழ்நாடும் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கை இதற்கு நேர்மாறாக உள்ளது.
இந்த நேர்மாறான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டு அரசின் வேலைவாய்ப்பில் தமிழ்வழியில் படித்தோருக்கு இருபது விழுக்காடு வழங்கப்படும் எனக் கருணாநிதியும் செயலலிதாவும், செயலலிதாவை அடியொற்றி வந்த பழனிசாமியும் அறிவித்துள்ளனர். இது தமிழுக்கும் தமிழருக்கும் செய்யப்படும் மிகப்பெரிய இரண்டகமாகும். ஆங்கிலம் இந்தி வழிகளில் பயின்றோருக்கு ஐந்து ஐந்து விழுக்காடு என மொத்தம் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு என வழங்கிவிட்டு மீதித் தொண்ணூறு விழுக்காடு இடங்கள் தமிழ்வழியில் படித்தோருக்கு மட்டுமே எனச் சொல்லியிருக்க வேண்டும். இப்படி இருந்தால் தமிழ் மக்களின் வேலைவாய்ப்பைப் பிற மாநிலத்தவர் தட்டிப் பறிப்பதைத் தடுக்கலாம். அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தமிழ்வழியில் பாடம் பயிற்றுவிக்கும் நிலை உருவாகும். பெரும்பான்மையராக உள்ள தமிழருக்கு (தமிழ்வழியில் படித்தவருக்கு) அரசு வேலைவாய்ப்பில் இருபது விழுக்காடு இட ஒதுக்கீடு என அறிவித்து இரண்டகம் செய்த தீராவிடக் கட்சித் தலைவர்கள், ஏதோ தமிழ் மக்களின் நலனுக்குச் செயற்கரிய செயலைச் செய்துவிட்டதைப் போலக் கொக்கரித்து வருகின்றனர்.
தமிழ்வழியில் படித்தோருக்கு இருபது விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது சரியெனப் பிற்காலத்தில் மெய்ப்பிப்பதற்காக இக்காலத்திலேயே அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தித் தமிழ் வழியில் படிப்போர் எண்ணிக்கையைத் திட்டமிட்டுக் குறைத்து வருகின்றனர்.
இந்து தீராவிட மாயைகளாலும், திரைப்படக் கவர்ச்சியாலும், சாராயக் குடிவெறியாலும், மட்டைப் பந்தாட்டத்தின் மீதான ஈர்ப்பாலும், சாதிவெறி என்னும் உட்பகையாலும் சிக்கிச் சீரழியும் தமிழ் இளைஞர்கள் இதை இதுகாறும் எண்ணிப் பார்க்கவில்லை.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்                                                                                    எண்ணுவம் என்பது இழுக்கு என்னும் வள்ளுவரின் குறளுக்கொப்பத் தமிழர்கள் எண்ணிப் பார்த்துச் செயலாற்ற வேண்டும். நம்மை ஏய்க்கும் தீராவிட ஆட்சியாளர்களைச் சாய்க்கச் சூளுரைப்போம்…
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…