சனி, 16 மே, 2026

நுங்கு தின்னும் நாம் பனை வளர்த்தோமா?

நூறாண்டு கடந்த ஓங்கி உயர்ந்த இரட்டைப்பனை

பதநீர், நுங்கு, கிழங்கு எனப் பனம்பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தும் நாம் என்றாவது அதை வளர்ப்பதற்காக ஓரிரு பனங்கொட்டைகளையாவது மண்ணில் ஊன்றியிருக்கிறோமா? என எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் அதை பற்றிய சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்...

பனை தமிழ்நாட்டின் அரசுத் தாவரம்.
வட தமிழகத்திலே பலரும் அதை மரம் என்று சொன்னாலும் அது மரம் இல்லை. புல்வகையைச் சேர்ந்தது.
தென்தமிழகத்தில் பனையைப் பனை என்றுதான் சொல்கிறார்கள். மரம் என்று சொல்வதில்லை.
தமிழ்ப் பேராசான் திருவள்ளுவரும்
தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104) என்றும்,
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (குறள் 433) என்றும் பெருமைக்கு எடுத்துக்காட்டாகப் பனையை எடுத்தாண்டுள்ளார். அதிலும் மரம் என்று கூறாததை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நீர்பாய்த்தல், உரமிடல், பேணல் ஏதுமின்றிப் பயன்தருவது பனை. புவியீர்ப்பு ஆற்றலுக்கு நேர் எதிராகச் செங்குத்தாக உயரமாக வளர்வது பனை. முடியுடை மூவேந்தர்களுள் சேரமன்னர்களுக்குரிய பூ பனம்பூ.
இந்தப் பனையில் ஆண்பனை, பெண்பனை என இரு பாலினங்கள் உள்ளதை அறிந்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும். ஆம் மனிதர்களில் ஆண் பெண் என இரு பாலினம் உள்ளதைப் போல் பனையிலும் ஆண்பனை பெண்பனை என இருபாலினம் உள்ளது.
ஆண்பனையில் வெளிவரும் அலகுவிரல் போன்ற பாளையில் மிகச்சிறிய பூக்கள் பூக்கும். இதேபோல் பெண்பனையில் வெளிவரும் பாளையில் குரும்பைகள் தோன்றும். ஆண்பனைப் பாளையில் பூக்கும் பூக்களில் உள்ள மகரந்தம் காற்றில் பரவியோ, தேனீக்கள், பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றால் பரவியோ பெண்பனைகளில் உள்ள குரும்பைகளில் படும்போதுதான் அது கருப்பிடித்து நுங்காகிறது.
மழைக்காலம் முடிந்த பிறகே பனைகளில் பாளைகள் தள்ளுகின்றன. இந்தப் பாளைகளில் பூக்கள் பூத்துக் குரும்பைகள் தோன்றி நுங்குகள் காய்ப்பது கோடைக்காலத்தில்தான். இந்த நுங்குகள் கோடைக்கேற்ற குளிர்ச்சியான சுவையான ஊட்டமுள்ள நீர்ச்சத்துள்ள உணவாகும். சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் நுங்கு தின்னலாம். எந்த வகையிலும் கலப்படம் செய்ய முடியாத, இயற்கையாகக் கிடைக்கும் உணவாக இது அமைந்துள்ளது.
இளநுங்கு நீர்ப்பாங்காக இருக்கும். சற்று விளைந்த நுங்கு துண்டு துண்டாகப் பிள்ளைகள் எடுத்துண்பதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த நுங்கைப் பதநீரிலும் சர்பத்திலும் போட்டுக் குடிக்கலாம். முற்றிய நுங்கு கடுக்காய் எனப்படுகிறது. இதைத் தோண்டி எடுப்பதற்கும், கடித்துத் தின்பதற்கும் கடினமாக இருக்கும். இதைத் தின்றால் வயிறு வலிக்கும். அதனால் கடுக்காயைத் தின்னக் கூடாது. கடுக்காயாக விளைந்த நுங்கைப் பனையில் இருந்து வெட்டாமல் விட்டுவிடுவது நல்லது.
நல்ல நுங்கை அடையாளம் கண்டு வெட்டுவது எப்படி?
தின்பதற்கேற்ற பருவத்தில் நுங்கு உள்ளதா என்பதை அடையாளம் காண்பது. நுங்குகள் குலையுடன் ஒட்டியுள்ள நெட்டுக்கும் நுங்குக்கும் இடையே வெள்ளையாக ஒரு பகுதி இருக்கும். அதைப் பொய்க்கண் என்பார்கள். அப்படி இருந்தால் நுங்குக் குலையை வெட்டலாம். பொய்க்கண் இல்லாமல் நெட்டு வரைக்கும் கருத்துக் காணப்பட்டால் நுங்கு முற்றிக் கடுக்காய் ஆகிவிட்டது. அதை வெட்டக்கூடாது. வெட்டினால் எதற்கும் உதவாமல் வீணாகப்போகும். இதையறியாமல் இக்காலத்தில் பலரும் குலைகுலையாய் நுங்குகளை வெட்டி வீணாக்கும் போக்கு உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும்.
கடுக்காய் பனங்காய் ஆகும். விளையாத பனங்காயைச் சீவினால்  உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது சீழ்க்காய் எனப்படுகிறது. இதைத் தின்றால் காறும், ஓரளவு விளைந்த பனங்காய் பழமாகும் பருவத்தில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதைக் கடித்துத் தின்னமுடியாது, அறுவாளால் சாளையாகச் சீவியோ, வெட்டியோ கொத்தியோ தின்னலாம். நன்கு கனிந்த பழம் குலையில் இருந்து நெட்டுடன் பொத்தென்று கீழே விழும். இந்தப் பழத்தில் தோலை மட்டும் உரித்துவிட்டுக் கொட்டைக்கு மேலுள்ள சதைப்பற்றைச் சவைத்துத் தின்னலாம். இதன் மணத்தாலும் இனிப்பாலும் ஆடுமாடுகள், காட்டுப்பன்றிகள், யானைகள், மான்கள் ஆகிய தாவர உண்ணிகளை இதன் சுவை பெரிதும் கவரும். அதனாலேயே இந்தப் பழத்தைத் தின்னும் விலங்குகள் இந்தப் பனங்கொட்டைகளைப் பல்வேறு இடங்களிலும் போட்டுவிட்டுச் செல்லும். பனம்பழம் சற்றுக் காறும். அதைத் தீயிலிட்டுச் சுட்டுத் தின்றால் அந்தக் காறல் சுவை போய் தேன்போன்ற இனிப்புச் சுவை கிடைக்கும். பனம்பழம் தின்பவர்கள் தும்புடன் சவைத்துச் சாற்றை விழுங்கிவிட்டுத் தும்பைத் துப்பிவிட வேண்டும்.
விலங்குகள் தின்றுவிட்டுப் பனங்கொட்டைகளைப் பல இடங்களிலும் போட்டுவிட்டுச் செல்லும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்தக் கொட்டைகளில் முளைகள் தோன்றி மண்ணில் இறங்கிக் கிழங்காகும். மண்ணின் மேல் கிடக்கும் பனங்கொட்டைகளில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் முளை ஓரடி முதல் ஒன்றரை அடி ஆழம் வரை செல்லும். மணற்பாங்கான நிலங்களில் ஈரடி ஆழம் வரை செல்லும். பூமியில் உள்ள வேறெந்தக் கொட்டைகளையும் விட மிகக் கடினமானது இந்தப் பனங்கொட்டை. இது முளைப்பதற்கும் ஆழத்துக்குச் சென்று வேரூன்றுவதற்கும் எடுத்துக்கொள்ளும் காலம் 90 நாட்கள். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகத் தொண்ணூறு நாட்கள் மண்ணில் ஈரப்பதம் இருப்பது வடகிழக்குப் பருவமழைக்காலத்தில்தான். புரட்டாசியில் மண்ணில் விழும் பனங்கொட்டைகளில் முளை இறங்கிக் கிழங்காகும். தைமாதம் பொங்கலையொட்டி இந்தக் கிழங்குகள் விளைந்துவிடும்.
பனங்கொட்டைகளில் இருந்து முளைத்துச் செல்லும் முளைகளில் உருவாவது தான் பனங்கிழங்கு. அதிக மாவுச்சத்துள்ளது. இந்தக் கிழங்கையும் பச்சையாக உண்ண முடியாது. காறும். சுட்டுத் தின்னலாம். தண்ணீர் ஊற்றிய பானைக்குள் வைத்து உப்பும் மஞ்சளும் சேர்த்து அவித்தும் தின்னலாம்.
பனையில் விளையும் நுங்கைத் தின்றால் பனம்பழமும் கிழங்கும் இல்லை. பனம்பழமாக விளையவிட்டால் பழத்தையும் தின்னலாம். கொட்டையில் இருந்து முளைத்து விளையும் கிழங்கையும் தின்னலாம். கிழங்கைத் தின்றால் பனை முளைக்காமல் போகும். பனை முளைக்க வேண்டுமென்றால் கிழங்கைப் பிடுங்காமல் விட்டுவிட வேண்டும்.
இன்று நாம் தின்னும் நுங்கும், பனம்பழமும், கிழங்கும் நாமே வளர்த்த பனையில் இருந்து கிடைத்தவை அல்ல. அவை நம் அப்பன், பாட்டன், பூட்டன், ஓட்டன் வைத்து 30 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆனவை. அப்படி நூறாண்டுகளாகப் பயன்தரும் பனைகளைச் செங்கல்சூளை விறகுக்காகவும், மனை வணிகத்துக்காகவும் வீணாக வெட்டிஅழிப்பது நம் அறியாமையும் அகம்பாவமும் ஆகும்.
இந்தப் பனை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்திருந்தால் பொன்போல் போற்றி வளர்த்துக் காத்திருப்பர். இது வெப்பமண்டலத் தாவரம் என்பதால் அந்நாடுகளில் இல்லை. இதன் அருமை பெருமைகளை அறியாமல் நாம் வெட்டியழித்து வருகிறோம்.
பனைகளை வெட்டி அழிப்பதைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டு வந்து விட்டதாக அரசு கூறினாலும் ஈவிரக்கமின்றி வேருடன் தோண்டி அழிக்கப்படுகின்றன. காய்வோலைகளுடன் நிற்கும் பனைகளைத் தீவைத்துப் பட்டுப்போகச் செய்கின்றனர்.
ஓலை, மட்டை, நார், வளை, குருத்து, பதநீர், நுங்கு, பனம்பழம், கிழங்கு எனப் பனம்பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தும் மனிதர்களே!
எண்ணிப் பாருங்கள். யாரோ பல பத்தாண்டுகளுக்கு முன் மண்ணில் ஊன்றிய பனங்கொட்டை முளைத்துப் பனையாக வளர்ந்து அதில் விளைந்த பொருட்கள் இன்று நமக்குப் பயனாகிறது. நம் பிள்ளைகள், பெயரன் பெயர்த்திகள், பூட்டன் பூட்டிகள் ஆகியோருக்காக நாம் என்றாவது ஒரு பனங்கொட்டையை மண்ணில் ஊன்றியிருக்கிறோமா? இனியாவது ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஒவ்வொருவரும் 10 பனங்கொட்டைகளையாவது மண்ணில் ஊன்றுவோம் என்று சூளுரைப்போம்!
பனை வளர்ப்போம்! பயன்பெறுவோம்!!
- கோவன்குளம் சே.பச்சைமால்கண்ணன்.

புதன், 8 ஏப்ரல், 2026

மானமும் தொழிலும் காக்க அறிவும் அறுவாளும் உதவும்



சாத்தான்குளம் ஜெயராஜையும், அவர் மகன் பென்னிக்சையும் காவல்நிலையத்தில் ஈவிரக்கமின்றி அடித்துக்கொன்ற காவல்துறையைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்த செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளியைக் காவல் சைக்கோ கோழையன் துப்பாக்கியால் சுட்டு இரண்டு கால்களையும் முடமாக்கி அட்டூழியம் செய்துள்ளான்.

தமிழ்நாடு அரசு மரம் எனக் கூறப்படுவது பனை. அதன் வேர் முதல் ஓலை வரை அனைத்துமே மக்களுக்குப் பயன்படுவது. இந்த ஓலையில்தான் பழந்தமிழரின் சங்க இலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்த மருத்துவக் களஞ்சியங்கள், வானியல், கட்டுமானக் கலை நூல்கள், நிகண்டுகள் எழுதப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன.
நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவற்றைத் தின்றவர்களுக்கு அதன் சுவையும் நன்மையும் தெரியும்.
அதேபோல் பனையில் கிடைக்கும் அருமருந்தாகவும் தேவாமிர்தமாகவும் கருதப்படுவது பதநீர். தேவாமிர்தம் என்று சும்மா சொல்லிவிட முடியாது. அதைக் குடித்துப் பார்த்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். இத்தகைய பதநீரை இறக்குவது ஒரு நாள் இருநாள் வேலை இல்லை. சிறாயுள்ள பனையில் நெஞ்சுத்தோல் கிழிய ஏறிப் பாளைக்குக் கீழ் உள்ள மட்டைகளை அறுத்து மேல்மட்டைகளில் உள்ள கருக்குகளை இணக்கிவிட்டு மட்டையில் அமர்ந்துகொண்டே தலைகீழாகத் தொங்கிப் பாளையின் நுனியைச் சீவிக் கடிப்பைக் கொண்டு இடுக்கி, அதேநேரம் அது காய்ந்து போகாமல் ஓலையைச் சுற்றிக் கட்டினால் பாளையின் நுனியில் சொட்டுச்சொட்டாக விழுவது கள். ஆம். பனம்பாளையில் இருந்து எந்தக் கலப்படமும் இன்றிக் கலயத்தில் சேகரிக்கப்படுவதுதான் கள்.
கலயத்துக்குள் நீற்றுச்சுண்ணாம்புப் பொடியைக் கலக்குமட்டையால் தடவி வைத்தால் சொட்டுச் சொட்டாக விழும் கள் சுண்ணாம்புடன் வினைபுரிந்து இனிமையாகிறது. அதுதான் பதநீர். பெயருக்கேற்றாற்போன்று சுண்ணாம்பால் பதப்படுத்தப்பட்ட கள்தான் பதநீர். பாளையின் எண்ணிக்கை, பனையின் செழிப்பைப் பொறுத்து ஒரு பனையில் இரண்டு கலயங்கள் முதல் பத்துக் கலயங்கள் வரை கட்டிப் பதநீரைச் சேகரிக்கலாம். ஒரு நாளைக்குக் காலை மதியம் மாலை என மூன்று நேரமும் பனையில் ஏறிப் பாளையின் நுனியைச் சீவிவிட்டால்தான் பதநீர் சொட்டுப்போடும். இல்லாவிட்டால் காய்ந்து பதநீர் சுரப்பது நின்றுவிடும். இப்படி ஒரு நாள் முழுவதும் விழுந்த துளிகள் சேர்ந்து சில கலயங்களில் கால்வாசியோ அரைவாசியோ நிறைந்திருக்கும். ஒருசில கலயங்கள் நிறைந்து கீழே சிந்தியும் இருக்கும். இது பனையின் செழிப்பைப் பொறுத்தது.
கள் இனிப்பு புளிப்பு துவர்ப்பு ஆகிய மூன்று சுவையும் உடையது. பதநீர் காலையில் இறக்கியதும் இனிக்கும். நேரம் செல்லச் செல்லச் சளிக்கும். அப்படிச் சளிப்பதற்கு முன் அதைத் தாழியில் ஊற்றி இரண்டுமணி நேரத்துக்கு மேல் அடுப்பில் வைத்துக் காய்த்தால் கூழ்ம நிலையை அடையும். அது கூழ்ப்பதநீர். அதனுடன் சில ஆமணக்கு முத்துக்களை இடித்துத் தூவினால் பாகுநிலையாகி உறைநிலைக்கு வரும். உறைநிலைக்கு வருமுன் ஓட்டைச் சிரட்டைகளில் பாகை ஊற்றினால் அது உறைந்து கருப்பட்டியாகும். சர்க்கரை நோயாளிகளும் அச்சமின்றித் தின்னும் பண்டம் இந்தக் கருப்பட்டி. கரும்புச் சர்க்கரை வருமுன்னும் வந்த பிறகும் தமிழ்நாட்டில் பணியாரம், புட்டு, களி, அச்சுமுறுக்கு, அதிரசம், கொழுக்கட்டை என அனைத்துப் பண்டங்களுக்கும் இனிப்பூட்டியது இந்தக் கருப்பட்டி. எண்பதுகளிலும் தொண்ணூறு வரையும் கரும்புச்சீனியைவிடக் குறைந்தவிலைக்குக் கிடைத்த இந்தக் கருப்பட்டி இன்று அரிதாகிப் போன அரிய பண்டங்களில் ஒன்றாக உள்ளது. இன்று ஒரு கிலோ சீனி 45 ரூபாய், ஒரு கிலோ கருப்பட்டி 450 ரூபாய்.
இனிமையான கருப்பட்டியின் விலை இந்த அளவுக்கு உயரக் காரணம் அது கிடைத்தற்கரிய பொருளாக மாறிவிட்டதுதான். ஒரு காலத்தில் திருநெல்வேலி (இன்றைய தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் உள்ளடங்கிய) மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் பனங்காட்டில் கோடைக்காலத்தில் காலையிலேயே எங்குச் சென்றாலும் பதநீர் காய்க்கும் மணமும், கூழ்ப்பதநீர் மணமும் நிறைந்திருக்கும். இப்படி நிறைந்திருந்த செழித்திருந்த இந்தத் தொழில் அரிதாகிப் போனதற்குக் காரணம் தமிழ்நாடு அரசு தான்.
சாராய ஆலை முதலாளிகளிடம் கோடிகோடியாகப் பணம் பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளும், சாராய ஆலைகளையே வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசின் கொள்கையைத் தங்களுக்கு ஏற்றதாக மாற்றிக் கள்ளுக்குத் தடை விதிக்கச் செய்தனர். இது நிகழ்ந்தது இன்றைக்கு நாற்பதாண்டுக்கு முன்பு. 1987ஆம் ஆண்டு சனவரி முதல் நாளில் அப்போதைய அதிமுக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் தான் கள்ளுக்குத் தடை விதித்தார்.
அன்று முதல் இன்று வரை உலகிலேயே கள்ளுக்குத் தடை விதித்துள்ள ஒரே நாடு தமிழ்நாடுதான்.
பனங்கள் ஓர் உணவு, சித்தமருந்து, கோடைக்காலத்தில் உடலுக்குக்குக் குளிர்ச்சி தருவது என்பதையெல்லாம் உணர்ந்த பின் அறிந்த பின் இவ்வாறு தடை விதித்துள்ளதில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது. அது உள்நாட்டுத் தொழில்களை அழிப்பதும், பனையேறும் நாடார்குல மக்களின் பொருளாதாரத்தை வீழ்த்துவதும் என்பதே அது.
2003ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சில்லறை விற்பனைச் சாராயக் கடைகளை மாநில அரசே நடத்தி வருகிறது. இப்படிச் சாராயக் கடை நடத்தும், சாராய ஆலை நடத்தும் இழிவான ஆட்சியாளர்களுக்குக் கள்ளுக்குத் தடை விதிக்க என்ன தகுதி உள்ளது?
இதற்கு முன் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். பனையேறும் தொழிலாளி ஒருவர் முழுவதும் பதநீரை இறக்கியோ, முழுவதும் கள்ளை இறக்கியோ ஆண்டு முழுவதும் தொழில் செய்ய முடியாது. வடகிழக்குப் பருவமழை ஓய்ந்த பின் தைமாதத்தில் பனைகளில் பாளைகள் வரத்தொடங்கும். அப்போது தொடங்கும் பதநீர்ப் பருவம் ஆடி இறுதி வரை நீடிக்கும். ஆனால் ஒரே பனை இப்படி ஆறுமாதம் எட்டு மாதத்துக்குப் பதநீர் தராது. முதலில் பாளை வரும் பனையில் மூன்று நான்கு மாதங்கள் பதநீர் வரும். பிந்திப் பாளை வரும் பனையில் அந்த நாளில் இருந்து மூன்று நான்கு மாதங்கள் நீடிக்கும். இடையில் கோடையில் காற்று அதிகம் வீசும் காலத்தில் சீவிய பாளைகள் அடிக்கடி காய்வதாலும், வெப்பமும் காற்றும் நீராவிப்போக்கை உண்டாக்குவதால் பதநீர் அளவு குறையும். தென்மேற்குப் பருவமழை பெய்துவிட்டால் மழைநீர் கலயத்தில் நிறைந்து பதநீர் இனிப்பில்லாமல் குடிக்கவும் காய்க்கவும் முடியாமல் போகும்.
இதனால் பனைத்தொழிலாளர் ஐம்பது பனையேறினால் தங்கள் சொந்தப் பனையில் உள்ள பதநீர் எந்நாளும் தங்களுக்கே எடுத்துக்கொள்வர். அடுத்தவர் பனையை ஏறினால் ஒருநாள் உரிமையாளருக்கும் மறுநாள் பனை ஏறுபவருக்கும் என்று ஒருநாள் விட்டு ஒருநாள் பதநீர் கிடைக்கும். இதனால் அன்றாடம் குடித்தது, விற்றது போகக் கருப்பட்டி காய்ப்பதற்குக் குறிப்பிட்ட அளவு பதநீர் பயன்படுத்தப்படும். இதுபோக ஒன்றிரண்டு பனைகளில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் குடிப்பதற்காகக் கள் இறக்குவதுண்டு.
பத்தாயிரம் சாராயக் கடைகளையும், அதன் கிளைகளாக முப்பதாயிரம் குடி விடுதிகளையும் திறந்து வைத்துச் சாராயம் விற்கும் அரசுக்குப் பனையேறிகள் இறக்கும் கள்ளை நச்சுக்கள் என்று சொல்ல எந்தத் தகுதியும் கிடையாது. கள்ளை ஒருவன் பெரும்பாடுபட்டு இறக்குகிறான். அதைக் குடிக்கிறான். மீதமிருந்தால் இலவசமாகக் கொடுக்கிறான். காசுக்கே விற்றுவிட்டுப் போகிறான். நன்றாக இருந்தால் வருகிறவன் குடித்துவிட்டுப் போவான். தரமில்லை என்றால் புறக்கணிப்பான். இதுதான் சந்தைப் போக்கு. வணிக நிலைமை. இதை அறியாமல் நச்சுக் கள்ளென்று கூறுவது ஆட்சியாளர்களின் நச்சு மூளையில் உதித்த நயவஞ்சக உத்தி. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசும்போது அவைத் தலைவர் அப்பாவு உள்ளிட்ட நச்சர்கள் இப்படி நச்சுக்கள் என்றுகூறி நஞ்சைக் கக்கினர்.
இந்தக் கள்ளும் பதநீரும் பாளை இருக்கும் வரைதான். அதன்பின் பாளை காய்த்துவிடும். பெண்பனையாக இருந்தால் நுங்கு, பனம்பழம் காய்க்கும். பழங்கள் பழுத்து உதிர்ந்ததும் பனையேற்று முடிவுக்கு வரும். முன்பெல்லாம் வீட்டுக் கூரைகளுக்கு வேய்வதற்கு ஓலை வெட்டுவர். அந்த ஓலையைப் பணியவைக்க மிதித்திருக்கும்போது மட்டையில் இருந்து அகணிநார் உரித்துச் சேர்த்து வைப்பர். அந்த நார்தான் புகழ்பெற்ற நார்க்கட்டில் கட்டப் பயன்படுகிறது.
பெட்டிகள் முடைவதற்குக் குருத்தோலைகள் வெட்டுவர். இப்போது அதுவும் இல்லை. கூரைக்காக ஓலை வெட்டுவதும் இல்லை. இதனால் வரும் ஓலைகள் எல்லாம் பழுத்துக் காய்வோலைகளாக உதிர்ந்து விழுகின்றன. அவற்றை எடுத்து எரிபொருளாகப் பயன்படுத்தக் கூட ஆளில்லை. மட்கியும் கறையான் அரித்தும் மண்ணுக்கு உரமாகிறது.
பழுத்த பனம்பழங்களை வெட்டவும் ஆளில்லை. தானாக உதிர்ந்தால் எடுத்துக் குழியில் போட்டுக் கிழங்கு பிடுங்குகின்றனர். ஊருக்குப் பத்து இருபது பனையேறிகள் இருந்த நிலையில் அந்தத் தொழிலைப் பெரிதும் வளர்த்தெடுத்து உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கத் துப்பில்லாத திருட்டுத் திராவிடத் திமுக அதிமுகவினர், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று கூறி உள்நாட்டில் கொள்ளையடித்த பணத்தையே வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்து பெரும் ஆதாயம் அடைகின்றனர்.
இன்னொருபுறம் நலத்திட்டங்களுக்கான வருவாய் என்று கூறிப் பத்தாயிரம் சாராயக் கடைகளைத் திறந்து வைத்துத் தமிழர்களின் மூளையை மழுங்க வைத்துத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து ஊழல் செய்யும் திராவிட அரசுகள் பனைத் தொழிலை முற்றாக அழித்துவிட்டனர். அது ஒருநாள் இருநாள் கதையல்ல. நாற்பதாண்டுகளாக நாள்தோறும் நடைபெறும் நயவஞ்சகச் செயல். தமிழர்களும் சட்டத்தை மதிப்போம் என்ற பெயரில் அந்த வஞ்சக வலையில் வீழ்ந்து எதிர்ப்பின்றி மானமின்றித் தொழிலையும் பொருளாதாரத்தையும் இழந்து உழன்று வருகின்றனர்.
முன்பு சொன்னதுபோல் சுண்ணாம்பால் பதப்படுத்தப்பட்ட பதநீரும் காலை ஆறு மணிக்கு இறக்கினால் ஒன்பது மணிக்குள் குடிக்க வேண்டும், அல்லது காய்த்துக் கருப்பட்டியாக்க வேண்டும். இல்லாவிட்டால் பத்து மணிக்குச் சளிக்கும், 12 மணிக்குப் புளிக்கும், பிற்பகல் மூன்று மணிக்குக் கள்ளாகிவிடும். இந்த உண்மைகளைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் சட்டமன்றத்தில் அவைத் தலைவர் உட்பட இருவர் நயவஞ்சகத்துடன் நஞ்சை உமிழ்ந்ததைக் காணொலியில் நாம் பார்த்தோம்.
சமூக ஊடகங்கள் பெருகி எத்தகைய செய்தியென்றாலும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவும் தொழில்நுட்பமுள்ள இந்தக் காலத்திலேயே இப்படி நஞ்சைக் கக்குகிறார்கள் என்றால், எண்பதுகளின் இறுதியில் ஆட்சியாளர்களும் அவர்களின் ஏவல்நாய்களான காவல்துறையினரும் எப்படி இருந்திருப்பர் என்பதை ஊகித்துப் பார்த்தால் அதன் கொடுமனமும் கொடுங்கோன்மையும் தெளிவாக விளங்கும்.
மதுவிலக்குத் துறை என்ற பெயரை வைத்துக் கொண்டு மதுவிற்பனையைச் செய்யும் இந்த அரசுதான் காவல்துறையில் மதுவிலக்குப் பிரிவு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு ஊர்ஊராகச் சென்று பனையேறிகளைத் தொழில்செய்யவிடாமல் கள்ளிறக்கியதாகக் கூறிப் பிடித்துக்கொண்டு வண்டியில் முறுக்குத்தடி அறுவாள்பெட்டி, தளைநார், கலக்குமட்டை, குடுவை, கலயம், பானை ஆகிவற்றுடன் ஏற்றிக்கொண்டு செல்லும். நாலைந்து நாள் தொடர்ந்து பனம்பாளையைச் சீவாமல் விட்டால் பாளை வளர்ந்துவிடும் காய்த்துவிடும். அதன்பிறகு அதிலிருந்து பதநீர் இறக்க முடியாது. வழக்குகளில் பிடிபடும் பனைத்தொழிலாளி அதிலிருந்து மீண்டுவருவதற்குள் பனம்பாளைகள் காய்த்துவிடும்.
இதை உணர்த்தும் திருக்குறள் ஒன்றும் உள்ளது.
அது,
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் - திருக்குறள் (அதிகாரம் 104 உழவு, குறள் எண் 1039)
பனைத்தொழிலாளி கள்ளிறக்குவதாகக் கூறிப் பொய்வழக்கில் காவல்துறையினர் ஒருமுறை பிடித்துச் சென்று ஒருவாரம் சிறைவைத்தால் அவர் இந்தப் பனையேற்றுப் பருவத்தில் இதுவரை செய்த முயற்சிகள், உழைப்பு எல்லாம் வீணாகிவிடும். இனிப் புதிதாகப் பாளை வரும் பானையில் மட்டையை அறுத்துப் பாளையை அறுத்துப் பதப்படுத்திப் பதநீர் இறக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். இது எத்தகையதொரு புனிதமான வேலை. உயர்ந்த அரிய கலை. வறட்சிக்காலத்திலும் உலக உயிர்களுக்கு உணவளிக்கும் கலை. இந்த உலகின் மற்ற நாடுகளில் இந்தக் கலையும் தொழிலும் இருந்தால் பொன்போல் போற்றி மகிழ்ந்திருப்பர்.
கயவர்களும் முட்டாள்களும் வஞ்சகர்களும் ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் இருந்ததால் மதிப்பில்லாமல் அழிந்துபோகும் நிலையில் உள்ளது. அதைவிட வருந்தத் தக்கது இந்தத் தொழிலை மிகவும் இழிவாகப் பார்க்கின்றனர். சாராயம் விற்பது, கஞ்சா விற்பது, சிறுநீரகத்தைக் களவாடி விற்பது, கருமுட்டையைக் களவாடி விற்பது ஆகியவற்றை இழிதொழிலாகப் பார்க்கவில்லை. பனையேறி ஓலை வெட்டுவது, நுங்கு வெட்டுவது, பதநீர் இறக்குவது, கள் இறக்குவது இழிவாகப் பார்க்கப்படுகிறது. பிறகு இங்கே உள்நாட்டுத் தொழில் எப்படி வளரும்?
இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் நான் முன்பு கூறியதுபோல் ஒருவர் தான் குடிப்பதற்காக இறக்கிய கள்ளையே அவருக்கு எதிராகப் பயன்படுத்துவதுதான். தானே குடிப்பதற்கு இறக்கிய கள் எப்படி நச்சுக் கள்ளாகும்? இதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதுபோக அவர் இறக்கியது பதநீராகவே இருந்தாலும் அதை வண்டியில் ஏற்றிப் பல ஊர்களுக்கும் சுற்றிவிட்டுப் பிற்பகலில் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்தும்போது அது கள்ளாகிவிடும். அவர்களுக்குத் தேவையான சான்று கிடைத்துவிடுகிறது. இந்தக் கள்ளைக் குறைசொல்லக் காவல்துறையினரும் வருவாய்த்துறை நீதித்துறை அதிகாரிகளும், திராவிட ஆட்சியாளர்களும் ஒன்றும் திருவள்ளுவரும் காந்தியும் கிடையாது. காவல்துறையினர் சாராயக்கடைக்காரனிடமும், அதைப் பதுக்கி வைத்து விற்பவனிடமும் மாதந்தோறும் அல்லது அடிக்கடி என்ற வகையில் பணம் வாங்குபவர்கள். வருவாய்த்துறையினர் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராயக் கடைகளை ஆள்பவர்கள். சாராயக் கடைகளை அடைக்க வேண்டும், முழு மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும், கள்ளுக்கு விதித்த தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தால் அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்று கூறிச் சமூகப் பொறுப்பில் இருந்து விலகிப் போகிறவர்கள்தான் நீதித்துறையினர்.
திராவிட ஆட்சியாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். முதலில் சாராயக் கடைகளை ஏலம்விட்டுக் காசு பார்த்தனர். பின்னர் சாராயக் கடைகளையே நடத்தினர். பிறகு சாராய ஆலைகளில் கொள்முதலில் கமிசன் பெற்றனர். இப்போது சாராய ஆலைகளையே நடத்துகின்றனர். ஆலையில் உள்ள சரக்குகளை அரசுக்கே வருவாய் வராத அளவுக்கு அதே கடையிலேயே கள்ளத்தனமாக விற்று வருவாயைப் பல பிரிவினரும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தச் சாராயக் கடைகளுக்குக் கிளைக் கடைகளாகத் தமிழ்நாடு முழுவதும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத குடிவிடுதிகளும் சில்லறை விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை ஆளுங்கட்சியினரின் அடிவருடிகளுக்கும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வீசப்படும் எலும்புத்துண்டுகள். நாட்டின் ஒட்டுமொத்தக் கொலை, கொள்ளை, சாதி வன்முறை, பெண்கள் சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றுக்கு இந்தக் குடியே முதன்மைக் காரணமாகும்.
அதை ஒப்புக்கொள்ளாத எவரும் எளிதாகத் தாக்கும் ஒன்று கள். கள்ளுண்ணாமை என்ற ஓர் அதிகாரத்தையே வள்ளுவர் எழுதியுள்ளார் என்பர். அவர்கள் விடையளிக்க வேண்டிய பல வினாக்கள் உள்ளன.
டாஸ்மாக் என்கிற பெயரில் கடைகளைத் திறந்து சாராயம் விற்க வள்ளுவர் சொன்னாரா?
ஆற்று மணலை அள்ளி விற்க வள்ளுவர் சொன்னாரா?
மலைகளை உடைத்துக் கேரளத்தின் அதானி துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கு விற்கத் தமிழ்நாட்டுக் கனிமவளத்துறைக்கும் திமுகவின் கற்கொள்ளையர்களுக்கும் உரிமம் கொடுக்கத் திருவள்ளுவர் சொன்னாரா?
மீண்டும் கதைக்கு வரலாம். கள்ளுக்கு எதிரான வேட்டை என்று தொடங்கிய காவலர்களின் போக்கு ஏழைப் பனைத்தொழிலாளர்களிடம் அதிகார அத்துமீறலுக்கு வழிவகுத்தது. அதன் நீட்சியும் இப்போதைய ஒரு நிகழ்வும் தான் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நிகழ்ந்த காவல் வன்கொடுமை. இந்தக் கொடுமை இக்காலத்தில் தெரியவந்துள்ளது. பெரும்போராட்டத்துக்குப் பிறகு இந்தக் கொடுமை உலகறிய வந்த பிறகும் தமிழ்நாட்டு ஆளுங்கட்சி அடிவருடி ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. விஜய், திரிசா, ரஜினி, நயன்தாரா என்று நாளொரு விவாதமேடைகள் வைத்துள்ள முட்டாள் தலைமைச் செய்தி ஆசிரியர்களைக் கொண்ட தரகு ஊடகங்கள் இந்தக் கொடுமை பற்றிப் பேசவில்லை. அதனாலென்ன? நாம் அதைப் பற்றி விரிவாகப் பேசலாம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் சேட் மகன் மணிகண்டன். விவசாயியான இவர் பனையேறும் தொழிலும் செய்து வருகிறார்.
ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா. இவர் காக்கிச் சட்டையுடனும் பாயுந்துடனும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு தன்னை ரியல் ஹீரோவாகவே நினைத்துக்கொள்ளும் மனநோயாளியாக உள்ளார். இவர் பணியாற்றிய காவல்நிலையங்களில் எல்லாம் சட்டத்தை மீறிய சட்டவிரோதச் செயல்கள் நடக்கவில்லை போலும். அப்படி நடக்கும்போது அங்கே தோன்றித் தீயவர்களை வதம் செய்யும் சூரசங்கார நாயகனாகத் தன்னைச் சித்தரிக்கும் காட்சிகளையும் படங்களையும் இணையத்தளத்தில் ஏராளமாக உலவ விட்டுள்ளார். ஏற்கெனவே தென்மாவட்டத்தில் சாதி மோதல்கள் நிறைய உள்ளன. இல்லை என்று இரு திராவிடக் கட்சிகளும் ஆளும் போது சொல்லும். உண்டு என்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொல்லும். இத்தகைய சூழலில் இவன்போன்ற மனநோயாளிகள், சாதிவெறி பிடித்தவர்கள் காவல்துறையில் உள்ளது சட்டம் ஒழுங்கை மேலும் சிக்கலாக்குகிறது.
மணிகண்டன் கள் இறக்கினாரோ இறக்கவில்லையோ அதை இரண்டாவது பார்க்கலாம். தமிழ்நாடு அரசு பத்தாயிரம் கடைகளிலும், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சில்லறை விற்பனையாளர்கள் வழியாகவும் விற்பது கோவிலில் கொடுக்கப்படும் புனிதத் தீர்த்தமா? அல்லது மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் சத்து டானிக்கா? நல்ல தெம்பும் அறிவும் உள்ளவனாக இருந்தால் தன் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் சாராயக்கடைகளை அடித்து நொறுக்கித் தீவைத்துக் கொளுத்திவிட்டு அதற்குப் பிறகு பனைபனையாகச் சென்று கள்ளைப் பிடிக்கிற வேலைக்குப் போயிருக்க வேண்டும்.
ஏழை எளியவர்கள், இயலாதவர்கள், தன்னுடைய அட்டூழியம் யாரிடம் செல்லும் என்று பார்த்துக்கொண்டு அத்தகையவர்களிடம் மட்டுமே அதைச் செய்யும் ஒரு கொடிய மனம் படைத்த அரக்கன் இந்த இசக்கிராஜா. இவன் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு மருதம்புத்தூருக்குச் சென்றுள்ளான். அப்போது பனைகளில் பதநீர் சேகரிப்பதற்காகக் கலயம் கட்டியுள்ளதைக் கண்ட இசக்கி ராஜா பனையின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று கள் இறக்குகிறாரா என்று விசாரணை நடத்தியுள்ளார்.
தொடர்ந்து மணிகண்டனையும் அவர் தந்தை பெருமாள் சேட்டையும் கலயம் கட்டப்பட்ட பனையுள்ள பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்றார். அந்த நேரத்தில் மணிகண்டனின் சகோதரரான சிவன் பொன்ராஜும், சிவனின் மகள், மகன் ஆகியோரும் தோட்டத்துக்குச் சென்றுள்ளனர். காவல்துறையினர் தனது தம்பியையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு வந்து விசாரித்ததைக் கண்ட சிவன் பொன்ராஜும் குடும்பத்தினரும் அருகில் சென்று என்னவென்று கேட்டுள்ளனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா அனைவரையும் சாதிப்பெயரைச் சொல்லி ஆபாச வசைச் சொற்களால் தரக்குறைவாக இழிவாக ஆணவத்துடன் ஏசியுள்ளார்.
மணிகண்டனைப் பனை மீது ஏறிக் கலயத்தை அவிழ்த்துக் கொண்டுவர வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்று மணிகண்டன் பனையில் மேலே ஏறிக் கொண்டிருக்கும்போது காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சாதிப்பெயரைச் சொல்லி ஆபாச வசைச் சொற்களால் பெருமாள் சேட்டையும் சிவனையும் தரக்குறைவாக ஆணவத்துடன் இழிவாக ஏசியுள்ளார்.
இதனைக் கண்ட மணிகண்டன் பனையிலிருந்து கீழே இறங்கி இசக்கிராஜாவிடம் நியாயம் கேட்டுள்ளார். நான் எப்படிப்பட்ட வீரப் பரம்பரையில் வந்தவன் பனையேறிப் பிழைக்கும் நீ என்னையா எதிர்த்துப் பேசுகிறாய் என்று ஆத்திரம் பொங்கியுள்ளது இந்த இழிந்த ராசாவுக்கு. இந்த ஆத்திரத்தில் இசக்கி ராஜா அருகில் கிடந்த கட்டையைக் கொண்டு மணிகண்டனை அடிக்க ஓங்கியுள்ளார். மணிகண்டன் அதை மடக்கிப் பிடித்ததில் இசக்கி ராஜாவின் தலையில் அடி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் மிக அருகில் நின்று நான்கு முறை மணிகண்டனை நோக்கிச் சுட்டதில் மணிகண்டனின் இரண்டு கால்களிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தன. தன் தோட்டம் வயல் பனை உழைப்பு வீடு என்று கள்ளமறியா உழைப்பாளியான அந்த இளைஞன் இனி எப்போதும் உழைக்கவே கூடாது. அவ்வளவு ஏன் எழுந்து நடமாடவே கூடாது என்ற தீய நோக்கில் மிகவும் வன்மம் கொண்டு செயல்பட்டுள்ளான் இந்த இழிந்த ராசா. வல்லநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் சென்று மணற்கொள்ளையர்கள் வெட்டிக்கொன்றபோது எங்கே போனது இவன் துப்பாக்கியும் வீரமும்?
பெரும்பற்றில் ஈனப்பையல்கள் ஒன்பது பேர் மூன்று வாகனங்களில் சென்று அப்பாவிகளை வெட்டிக்கொன்றபோது எங்கே போனது இவன் துப்பாக்கியும் வீரமும்? வேடநத்தத்தில் 12ஆம் வகுப்பு மாணவியைக் கொன்ற கயவனிடம் உன் வீரத்தைக் காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை.
இதையடுத்துக் காயமடைந்ததாகக் கூறி இசக்கி ராஜாவும் மருத்துவமனையில் உள்ளார். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்து இரண்டு கால்களும் நடக்க முடியாமல் போன மணிகண்டனையும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் அரசு உள்நாட்டுத் தொழிலை ஒழித்துக் கட்டும் முயற்சிகளில் ஒரு பகுதிதான் இது. ஆங்கிலேயர் காலத்தில் தீப்பெட்டிக்குள் அடைக்கும் வகையில் மெல்லிய மஸ்லின் துணிகளை நெய்த நெசவாளர்களின் பெருவிரலை வெட்டி அந்தத் தொழிலை அழித்ததாகக் கதை சொல்வார்கள். அதற்கும் இந்தப் பனைத்தொழிலாளியின் இரண்டு கால்களையும் துப்பாக்கியால் சுட்டு முடமாக்கிய இந்தக் கோழைத்தனமான கயவனின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
நாற்பதாண்டுக் காலத்தில் காவல்துறையின் பல்லாயிரக்கணக்கான அட்டூழியங்கள் வெளியுலகுக்கு வராமலே மறைந்தும் மறந்தும் போயிருக்கும். ஆனால் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடந்த காவல்துறைப் போர்வையில் உள்ள கயவனின் வன்கொடுமைச் செயல் மணிகண்டனின் உறவினர்களுக்கும் ஊர்மக்களுக்கும் தெரிய வரவே அவர்கள் ஆலங்குளம் முக்கூடல் சாலையில் காமராஜர் சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கேள்விப்பட்ட அகில இந்திய காமராஜர் ஆதித்தனார் கழகப் பொதுச் செயலாளர் சிங் நாடார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோசிடம் பேச்சு நடத்தினார்.
தேவை இல்லாமல் எளிய பனைத்தொழிலாளி மீது துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் சிங் நாடார் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் இரவு 7 மணி முதல் இரவு 1 மணி வரை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி கோட்டாட்சியர் வைஷ்ணவி பாலிடம் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வன்கொடுமை குறித்துக் கூறினார்.
அதனை அடுத்து இசக்கி ராஜா, காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இசக்கி ராஜா காவல்துறைப் பணியில் சேர்ந்த நாளில் இருந்து வேலை செய்த அனைத்துக் காவல் நிலையங்களிலும் சட்டத்துக்குப் புறம்பாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இதுபோன்ற செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், அதனால் இவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கே வேறொன்றையும் நாம் சொல்லியாக வேண்டும். மணிகண்டன் அவர் தந்தை பெருமாள் சேட், அண்ணன் சிவன் என மொத்தக் குடும்பத்தினரும் நினைத்திருந்தால் தங்கள் தோட்டத்தில் வந்து அட்டூழியம் செய்த இந்தக் கயவனைப் பாளை அறுவாளால் வெட்டி வீழ்த்தியிருக்க முடியும். சட்டத்தை மதிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தாலும் உயிர்களிடத்தில் ஈவிரக்கம் உள்ளதாலுமே அவர்கள் அதைச் செய்யவில்லை. ஈனப்பையலான இசக்கிராஜாவின் கையில் உள்ள துப்பாக்கி சுட்டால், உயரமான, அறுவாள் போன்ற கூர்மையுடைய கருக்குகள் உடைய பனையில் ஏறி வேலை செய்யும் பனையேறியின் பாளையறுவாள் வெட்டாதா என்ன? அது எதிர்த்து வெட்டும் நாளில் தான் காவல்துறையின் போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் இசக்கிராஜா போன்ற சாதிவெறியன்களின் கொட்டம் ஒடுங்கும் என்பது உண்மை.
பனை வளர்க்கிறோம் பனை வளர்க்கிறோம் என்று சொல்லிப் பொய்யான உறுதிமொழிகளைச் சொல்லிச் சாராயம் விற்று ஏமாற்றும் திராவிட ஆட்சியாளரும், திராவிட எதிர்க்கட்சியும் இதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதைத் தமிழர்களாகிய நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே இந்த வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தும் அதிகாரத்தைக் காவல்துறைக்குக் கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்துப் பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக கட்சியினர்தானே?" என்று சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் மக்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பனை வளர்ப்போம்! பயன்பெறுவோம்!!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!
தன்மானம் காக்கப் பாளை அறுவாள் எடுப்போம்!!!
- சே.பச்சைமால்கண்ணன், பனையேறியின் மகன்

செவ்வாய், 8 ஜூலை, 2025

தமிழர் வாழ்வியலைக் காட்டும் திரைப்படம் திருக்குறள்





தமிழர் வாழ்வியலைக் காட்டும் திருக்குறள் திரைப்படம்

தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு இந்நாள் வரையுள்ள சிறந்த நூல்களின் மேற்கோள்களைக் காட்டித் திரைப்படம் தொடங்குகிறது. இந்த வழிமுறையை வேறெந்தப் படத்திலும் பார்த்ததில்லை.

 

தொடக்கத்திலேயே வள்ளுவ நாட்டை நம்கண்முன் காட்டுகின்றனர். ஆங்கொரு திண்ணைப் பள்ளி அதாவது கல்விக்கூடம் நடத்தி வருகிறார் ஐயன் திருவள்ளுவர். கல்விக்கூடம், ஐயன், துவர்த்து, துண்டு, வைகறை, கருக்கல், யாமம் என்று படம் முழுவதும் தனித்தமிழ்ச் சொற்களையே செவியினிக்கக் கேட்கிறோம். கருப்பு வெள்ளைப் படக்காலத்தில் கேட்ட தீந்தமிழை பைந்தமிழை செந்தமிழை முக்கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் கேட்க நமக்கோர் அரிய வரமாக அமைந்துள்ளது திருக்குறள் திரைப்படம்.

 

நீ என்னிடம் காதல் வயப்பட்டாய் என்பதற்கு அகப்பட்டாய் என்ற சொல்லாடலை வைத்துள்ளனர். அது எவ்வளவு பொருத்தம். அகம் மனம். என்னுள் அகப்பட்டாய். மனத்துக்குள் வந்தாய். வீரமும் காதலும் தமிழரின் வாழ்வியலில் சிறந்திருந்ததாகக் கூறும் திரைப்படம் காதலை வரம்புமீறாமல் காட்டியுள்ளது அருமை. கண்டதும் காதல். உடனே கனவில் வெளிநாட்டில் பனிமலைக்கு அடியில், வானுயர்ந்த கட்டடங்களுக்கு இடையே அதிவிரைவாய்ச் செல்லும் வண்டியில் துள்ளலும் ஆட்டமும் போடும் காதல் என்றிருந்த வகைப் பாடல்களையே கண்டிருந்த தமிழர்களுக்குத் தொலைத்தொடர்புக்குச் செல்பேசி உள்ளிட்ட கருவிகள் இல்லாத சங்கக் காலத்தில் எப்படிக் காதலித்திருப்பர் என்பதைக் காட்டும் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தப் படம். அதிலும் காதலுக்குக் களவு என்கிற பெயரையே கொடுத்துள்ளனர். பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் மகள் உள்ளத்தைக் களவாடுவது களவு, காதல் என்கிறது இந்தத் தமிழர் வாழ்வியல் இலக்கணம். 

 

ஐயனின் ஆடைகளுக்கு அகில்புகை காட்டுகிறேன் என்றொரு உரையாடல். இது பருத்தி ஆடைகளை வெள்ளாவியில் வைத்து வெளுத்தபின் அதற்கு மணமூட்ட அகில்புகை காட்டுவது என்கிற நமது பண்பாட்டு வழக்கத்தைக் காட்டுகிறது. வெட்கத்தை நாணம் என்றே பல இடங்களில் கூறியுள்ளனர். பிள்ளையை மழலை என்கின்றனர்.

 

படத்தின் அரங்கக் காட்சிகளில் பண்டைத் தமிழர் முதல் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தமிழர் பயன்படுத்தி வந்த சுளகு (முறம்), தண்ணீர்க் குடுவை, மூங்கில் கீற்றுக் தடுப்பு, சுரைக்குடுக்கை ஆகியன பயன்படுத்தியுள்ளது கதையைத் திருவள்ளுவர் காலத்தில் சங்கக் காலத்தில் நடப்பதாக நமக்குக் காட்டுவதற்கு உறுதுணையாக உள்ளது.

 

வள்ளுவ நாட்டில் முல்லை நிலத்தில் ஆயர்பாடி அருகே ஐயனின் கல்விக் கூடம் அமைந்துள்ளது. அங்குச் சிறாரும் இளைஞரும் ஐயனிடம் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் ஒருவன் நெய்தல் நிலத்தைச் சேர்ந்த சங்குமாறன். ஆயர்பாடியில் இருந்து ஐயனின் வீட்டுக்குத் தயிர் கொண்டு வருகிறாள் மாடத்தி. மாடத்தியும் சங்குமாறனும் கண்களால் கவரப்பட்டுக் காதலில் ஒருவரிடம் ஒருவர் அகப்பட்டுக் கொண்டனர். 

 

உள்ளத்தைக் களவாடி அதன்வழியாகக் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்துகொள்ளும் முறையே, அதுவும் சாதி கடந்து திருமணம் செய்துகொள்வதே தமிழரின் வழக்கமாக இருந்தது என்று படத்தில் கூறப்படுகிறது. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்பது ஏற்கெனவே அறிமுகம் இல்லாத இருவரைத் திருமணம் என்னும் பெயரில் காலையில் தாலிகட்டி மாலையில் ஒரே கூட்டுக்குள் அடைப்பது போலாகும் என்கின்றனர். இத்தகைய மனங்கள் எப்படிப் பொருந்தும் என்று வினவுகின்றனர். இந்த உரையாடல்கள் ஐயன் வள்ளுவருக்கும் அம்மை வாசுகிக்கும் இடையே நிகழ்கின்றன. பொய்யும் வழுவும் தோன்றிய பின் ஐயர் யாத்தனர் கரணம் என்று கூறுகின்றனர். காதலித்து ஏமாற்றும் போக்கு தொடங்கியதால் பெண் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே திருமணம் என்ற சடங்கு வந்ததாகக் கூறுகின்றனர். மூன்று புறம் கடலால் சூழப்பட்ட நம் நாட்டில் அத்திசைகளில் இருந்து எதிரிகள் வரமுடியாது. வடக்கில் இருந்தே எதிரிகள் படையெடுத்து வந்தனர். ஆகையால் நம் தெய்வங்கள் பெரும்பாலும் வடக்குநோக்கியே வீற்றிருக்கின்றன என்றொரு விளக்கம். 

 

படத்தில் முதல் காதல் காட்சியே மாடத்தி தன் வீட்டுக்குத் தெரியாமல் சங்குமாறனைச் சந்தித்துப் பேசுவதுதான். இந்தச் சந்திப்பைப் பகல்பொழுதாகக் காட்டவில்லை. இரவுநேரத்தில் இருவரும் ஊருக்கு வெளியே மரங்களடர்ந்த பகுதியில் தனியாகப் பார்த்துக் காதலைப் பொழிகின்றனர். இதைக் களவு என்கின்றனர். இந்தக் காட்சி நம் உள்ளத்தைக் களவாடுகிறது. 

காதலிக்கு நாள்தோறும் காதலன் பூச்சூடி விடுகிறான். இந்தப் பூவைத் தந்திரமாக அவள் வீட்டுக்குச் செல்லுமுன் எடுத்துவிட்டுச் சென்றாலும் அதன் மணம் அங்கும் கமழ்கிறது. இதனால் தன் தாய் தன் மீது ஐயங்கொள்கிறாள் என்றுரைக்கிறாள் மாடத்தி. ஊடலுக்குப் பிந்தைய கூடல் மிகவும் இன்பமானது என்றும் அத்தகைய இன்பத்துக்குக் காதலர்கள் ஏங்கிக் கிடப்பதும் சங்கக் காலச்சூழலில் சுவையானவை. சங்குமாறன் மாடத்தியிடம் காதல்மொழி பேசும்போது வேட்டுவப் பெண்ணிடம் முயல்கள் இரண்டு அகப்பட்டுக் கிடக்கின்றன அவற்றை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறான். இது காதலிப்போர் இருவர் பேசும் பேச்சில் உண்டுதான் என்றாலும் திரைப்படத்தின் வழியே காட்டும்போது இருபொருள் கொண்டதாக, இல்லை இல்லை மறைமுகமாக ஒரேபொருளை உணர்த்துவதாக உள்ளது. ஆனாலும் இரவில் காட்டும் அந்தக் காதல் காட்சி மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வரம்பு மீறாதது.

 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்பது தமிழரின் வாழ்வியல். வறியோர் குப்பைக் கீரையை அவித்துக் கடைந்துண்ணும் வழக்கம் அன்றும் இருந்துள்ளது.

 

வள்ளுவ நாடு, குமணநாடு, எருமைநாடு, நடுநாடு, பாண்டியநாடு என்றெல்லாம் தமிழ்நிலங்களாகவே கதைக்களம் அமைந்துள்ளது. சேரநாடும் சோழநாடும் இங்கே காட்டப்படவில்லை.

 

குமணநாடு கொங்கு மண்டலத்தில் உள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது. குமணநாட்டில் மன்னன் குமணனைப் பார்க்கப் புலவர் ஒருவர் செல்கிறார். மன்னனைக் காண அவர் வாயிலில் நிற்பதாக வாயிற் காவலர் சொல்கிறார். சான்றோர் புலவர் ஆகியோரை வாயிலில் நிற்க வைக்கக் கூடாது என்றும், அவர்களுக்குத் தன் அரண்மனை வாயில் எப்போதும் திறந்திருக்கும் என்றும் மன்னன் கூறுவது மன்னர்கள் புலவர்களைப் புரந்து வாழ்ந்த வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. வந்த புலவர் பெருந்தலைச் சாத்தன் பசியாலும் களைப்பாலும் வந்திருப்பார் என்பதை அறிந்த குமணன் அவரை முதலில் பசியாறச் சொல்கிறார். உப்புப் போடாத குப்பைக் கீரை உண்ணுவதைப் பற்றிய அவரது பாடலைப் பெற்றுக்கொண்டு அவருக்குப் பொற்கிழி வழங்குகிறார் குமணன். இது தமிழரின் விருந்தோம்பல் பண்பைக் காட்டுகிறது. இந்த நாட்டில் பசியால் வாடியவர் எவரும் இல்லை என்பதே அந்த மன்னனின் சிறப்பைக் காட்டும் சான்றாகும் என்று புலவர்கள் பேசிக்கொள்கின்றனர். எருமை (மைசூர்) நாட்டில் பசியால் வாடிய மக்களை எங்கும் காணமுடிவதாகவும் பேச்சு வருகிறது. வந்த புலவருக்கும் இரவலருக்கும் குமணன் வாரி வழங்குவதை அவன் தம்பி இளங்குமணனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

உணவுப் பண்டங்களைச் சேர்த்து வைத்துள்ள இடத்துக்குக் கிட்டங்கி என்ற அருந்தமிழ்ச் சொல் உள்ளது. இப்போதுள்ள படங்களிலும் செய்தி அறிக்கைகளிலும் குடோன் என்று சொல்கின்றனர். அவர்கள் இனியாவது இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது கிட்டங்கி, கிடங்கு என்று எழுதும் வகையில் திருந்த வேண்டும். 

 

இந்தப் படத்தில் காணப்படும் ஓலைச்சுவடிகள் ஓர் ஓரத்தில் துளையிட்டு நூலால் கட்டியிருக்கிறது. பெரும்பாலும் நீண்ட ஓலை இலக்குகளில் நடுவில் துளையிட்டுப் பெரிய ஓலைச்சுவடிகளே வழக்கில் உள்ளன. அத்தகைய ஓலைச்சுவடியைப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

 

இந்தப் படத்தில் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் நல்ல தமிழ்ப்பெயர்களாக உள்ளன. காயல்பட்டினம், மானூர், உவரி என்பன சான்றுக்கு ஒருசிலவாகும். 

 

மாயோனை வணங்கும் முல்லைநிலத்துப் பெண்ணான ஆயர்பாடியைச் சேர்ந்த மாடத்தி ஐயன் வள்ளுவர் வீட்டுக்குத் தயிர் விற்க வரும்போது அங்கு ஐயனிடம் கல்வி கற்கும் சங்குமாறனிடம் காதல் வயப்படுகிறாள். இது அவளின் பெற்றோருக்குத் தெரியாது. அந்தச் சமயத்தில் மானூரில் இருந்து அதே இனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்மகனுக்கு மாடத்தியைப் பெண்பார்க்க வருகிறார். முதலில் மகளைக் கொடுக்க மறுக்கும் பெற்றோர் பின்பு தங்கள் காளையை அடக்கினால் பெண் தருவதாகக் கூறுகின்றனர். 

 

நெய்தல் நிலத்து மாந்தனான சங்குமாறன் காளையுடன் பழகியவன் அல்லன். அவன் எப்படிக் காளையை அடக்கி நம்மை ஊராரறியக் கைப்பிடிப்பான் என்று எண்ணிக் கலங்குகிறாள் மாடத்தி. தான் விரும்பியவனுக்குத் தன்னை மணமுடித்து வைக்காவிட்டால் அவனைக் கைப்பிடிக்க உடன்போக்கே ஒரு பெண்ணுக்குச் சிறந்தது என்று ஐயன் வள்ளுவர் உரைப்பதாக இப்படத்தில் காட்சி வைத்துள்ளனர். 

 

தான் விரும்பும் சங்குமாறனைக் கைப்பிடிக்கா விட்டால் அரளிவிதையை அரைத்துத் தின்று செத்துவிடுவேனேயொழியப் பிடிக்காத ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட மாட்டேன் என்று சூளுரைக்கிறாள் மாடத்தி.

 

ஐயனின் அறிவுரைப்படி சங்குமாறனுடன்போய் மாடத்தி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள். இதையறியாமல் ஐயன் வீட்டுக்குத் தேடி வரும் மாடத்தியின் அன்னையிடம் உங்கள் மகள் நல்ல பண்புடைய காளையைக் கைப்பிடித்துள்ளாள். ஆதலால் கலங்க வேண்டாம் என்றுரைக்கிறார் ஐயன். இதனால் அந்தத் தாய் மனம் அமைதியாகிறது. 

 

தமிழர் பண்பாட்டில் இருவருக்குத் திருமணம் நடக்க இருப்பதை உறுதிசெய்யும் சடங்காகப் பூ வைத்தல் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் காட்டும் வீடுகளில் கறிச்சட்டி, அரிவாள்மணை ஆகிய பொருட்கள் இருப்பதைப் பார்க்கவே இயல்பாக இருக்கிறது. 

 

மாடத்தியின் காதலன் சங்குமாறனைப் பரதவன் என்கின்றனர். தமிழ்ப் பண்பாட்டின்படி நெய்தல் நிலத்தில் வாழும் இனத்துக்குப் பரதவர் என்று எப்படிப் பெயர் வந்தது? பரவை என்பது கடல். அதன் மீது படகோட்டுவதாலும் அதில் மரக்கலம் செலுத்துவதாலும் பரவன் பரவர் என்று கூறுவதே சரியாகும். நெய்தல் நில மாந்தர் பரவர் பரத்தியர் ஆவர். சங்குமாறனின் ஊராகக் கூறப்படும் உவரி இன்றும் பரவர் பெரும்பான்மையாக வாழும் ஊராக உள்ளது. அந்த ஊருக்குச் சென்று படம்பிடிக்கவில்லை என்பது ஒரு குறையே. ஆனாலும் சங்கக் காலத்தைக் காட்டும் வகையில் அவ்வூர் இப்போது இல்லை என்பதால் அதைக் காட்டாதது ஒரு குறையல்ல என்றே சொல்லலாம். 

 

பிள்ளையைக் காணாமல் தேடும் மாடத்தியின் தாய் தன் மகள் சங்குமாறனைத் தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்று ஐயனிடம் கேட்டறிந்தபின் மனத்தில் ஆறுதல் கொள்கிறாள். அதேநேரத்தில்  சங்குமாறனின் ஊரில் பறையடித்து மகுடம் அடித்துத் திருமண விழா களைகட்டுகிறது. தெருவெங்கும் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின்படி மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்கின்றனர். திருமணப் பந்தலில் நிறைநாழி நெல், குலைவாழைப்பழம், தட்டிப்பந்தல், குலைவாழை ஆகியன முப்பதாண்டுகளுக்கு முன் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களில் நடைபெற்ற திருமணத்தைப் போலவே இருக்கிறது.

 

இதே சமயத்தில் குமண நாட்டில் குமணனின் தம்பி இளங்குமணன் உள்ளங் குமுறுகிறான். நண்பர்கள் அவனை இளவல் என்று அழைக்கும்போது, நான் எங்கே இளவலாக இருக்கிறேன். அண்ணனை இரந்து வாழும் இரவலனாக அல்லவா இருக்கிறேன் என்று மனம் புழுங்குகிறான். அண்ணனிடமே சென்று தனக்கு முடிசூட்டும்படி வேண்டுகிறான். குமணனும் இந்த நாட்டை நாம் ஆண்டால் என்ன? நம் தம்பி ஆண்டால் என்ன? என்ற முடிவுக்கு வந்து முடிதுறக்கிறார். இதை அரசவையில் உள்ளோர் ஏற்கவில்லை. குமணன் உங்களுக்குத் தம்பியாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டுமக்களுக்கு நல்லவராக இருக்க வேண்டுமே என்கின்றனர்.

 

இளங்குமணனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டுக் காட்டுக்கு ஏகினார் குமணன். அவர் தம்பி இளங்குமணனுக்கு முடிசூட்டப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் எல்லோரும் குமணனையே புகழ்கின்றனர். வரி வரியெனக் கசக்கிப் பிழியும் குமணனை வெறுக்கின்றனர்.  குமணனைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுச் செல்வதற்காக மூவர் உடன் வருகின்றனர். அவர்களில் அமைச்சர் சொல்கிறார். தலையை வெட்டிவிட்டு வரும்படி தான் இளங்குமணன் சொன்னான். எனினும் நாங்கள் மனமில்லாமல் விட்டுவிட்டுச் செல்கிறோம் என்கிறார். குமணனின் மெய்காப்பாளன் பரிதி மீண்டும் நாடுதிரும்ப மனமில்லாமல் குமணனுடன் இருக்கிறார். குமணனைத் தலையை வெட்ட உத்தரவிட்டுள்ளான் இளங்குமணன். அவருடன் தன்னையும் வெட்டிக்கொன்றுவிட்டதாக அமைச்சரும் படைத்தலைவரும் பொய்யுரைத்துள்ளனர். இந்நிலையில் எங்கேனும் யாரேனும் தன்னைக் கண்டால் குமணன் உயிருக்கு ஊறாகுமே எனக் கருதும் பரிதி அங்கிருந்து காட்டுவழியே வெண்ணிறப் புரவியில் செல்கிறான். 

 

இதேகாலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் வள்ளுவர் வீட்டுக்கு வருகிறார். ஐயனின் மனைவி வாசுகி அவருக்கு மட்குவளையில் மோர் கொடுக்கிறார். அவர் தமிழ்நாட்டின் விருந்தோம்பலைக் கண்டு வியக்கிறார். திருமணத்துக்கு முன்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றி வந்த தனக்குத் திருமணம் ஒரு கால்கட்டாக அமைந்து விட்டதாக வள்ளுவர் நினைக்கிறார். இவர்களுக்கு ஒரு பட்டுத் துணியைப் பரிசளிக்கிறார் வெளிநாட்டுக்காரர். அது பட்டுப்புழுவைக் கொன்று அதன் கூட்டில் இருந்து எடுத்த நூலில் நெய்தது என்பதால் அதை வாங்க மறுக்கிறார் வாசுகி. அதனாலென்ன. ஒரு பருத்தித் துணியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கொடுக்கிறார் வெளிநாட்டுக்காரர்.

 

வள்ளுவ நாட்டிலிருந்து ஐயன் வள்ளுவர் கொங்குநாட்டில் தனது நண்பரைக் காணச் செல்கிறார். வழியில் ஐயனும் பரிதியும் சந்திக்கின்றனர். குமண நாடும் தமிழ்நாடும் இருக்கும் நிலைகண்டு இருவரும் மனம் வெதும்புகின்றனர். தன் உடன்பிறப்புக்கு முடிசூட்டுவதைக் கண்டு குமணன் வருந்தவில்லை. ஆனால் பொல்லாத இளங்குமணன் முடிசூட்டியதைக் கண்டு பரிதியும் மக்களும் அமைச்சர்களும் இனி இந்த நாட்டின் நிலை என்னாகுமோ என்று கருதி அஞ்சுகின்றனர். அவர்கள் அஞ்சியதுபோலவே இளங்குமணன் கடுமையாக வரி விதித்து மக்களைக் கசக்கிப் பிழிகிறான். 

 

கதையில் வரும் மாந்தர்கள் அனைவரும் காலில் சிலம்பு கையில் காப்பு கழுத்தில் சங்குமணி எனப் பல்வேறு அணிகலன்களை அணிந்துள்ளனர். தமிழ்நாட்டு அரசியலில் எப்போதுமே சமயவாதிகள் தலையீடு இருந்ததில்லை என்கிறார்கள் இந்தக் கதையில். 

 

இப்படிக் கதை நகரும்போது வள்ளுவ நாட்டில் மூங்கில் காட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்த வீரர்கள் பின்னால் முடுக்கிச் செல்கின்றனர். அங்கு ஒரு பெண் இறந்துகிடக்கிறாள். மற்றொரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளாள். இதையறிந்த படைவீரர்கள் அந்தக் காமுகன் மேல் வேல் எறிகின்றனர். அது மூட்டுக்குக் கீழே குத்தி அவன் கீழே சரிகிறான். அவனைப் பிடித்துக்கொண்டு வந்து ஊரின் நடுவே மரத்தில் கட்டிவைக்கின்றனர். மன்னன் முன்னிலையில் அவன் மீது குற்றச்சாட்டுப் படிக்கப்படுகிறது. அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதையறிய வள்ளுவரைக் கூட்டிவரச் சொல்கிறார் மன்னர். அவரும் வருகிறார். இந்தக் கயவன் செய்த குற்றத்தைச் செவியால் கேட்க முடியாத ஐயன், கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர் என்னும் குறளுக்கொப்ப இந்தக் கழுவனுக்குக் கழுமரத்தில் ஏற்றும் தண்டனை அளிக்கலாம் என்கிறார். கழுமரத்தில் ஏற்றியதும் அவன் அழுகை ஊர்முழுவதும் கேட்கிறது. அவன் உயிர்பிரிய மூன்று நாட்கள் ஆகும் என்றும், இப்படிக் கொடிய தண்டனை அளித்தால்தான் இதைப் பார்க்கும் மற்றவர்க்குக் குற்றம் செய்யும் எண்ணம் வராது என்றும் கூறுகின்றனர். கள்குடிதான் குற்றத்துக்குக் காரணம் என்பதால் அதை இறக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மன்னனிடம் வள்ளுவர் வேண்டிக்கொள்கிறார்.

 

இந்த நாட்டில் மாட்டைக்கூடத் துன்புறுத்துவதில்லை. மூக்கில் சரடு பீறாத மாடுகளே காட்டப்பட்டுள்ளன. கதைமாந்தரின் உரையாடல்களில் பிள்ளை, திங்கள், வருத்தம், மகிழ்ச்சி, பசலை, அகப்பாடல் எனத் தமிழ்ச் சொற்களே வழங்குகின்றன. காட்சிகளில் காட்டும் காட்டிலும் மூங்கிலும் புளியமரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. குமணன் இளங்குமணன் இருவரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் ஒருதாய் மக்கள் என்றாலும் குமணன் குடிகாத்து ஓம்பி வரும் பண்பினன் என்றும், இளங்குமணன் குடிகளைக் கசக்கிப் பிழிந்து வரிவாங்கும் தீயவன் என்றும் பேசிக்கொள்கின்றனர். முத்திருக்கும் நாகத்திடம் தான் கொடிய நஞ்சும் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். 

 

காட்சியமைப்புகளில் விலங்குகளாகக் குதிரைகள் மாடுகள் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் அரங்கப் பொருட்களாகத் தொட்டில், மரப்பொம்மை, ஓலைப்பாய், மண்பானை, உரல் ஆகியன இருக்கின்றன. ஓட்டு வீடுகள், ஓலை வீடுகள் உள்ளன. முடிதுறந்து காட்டில் வாழும் குமணன் எப்படிப் பசியாறிக்கொள்கிறார் என்னும் பொழுது மேற்கு மலையில் பழங்கள், கிழங்குகள், தேன், தினை ஆகியன அளவின்றிக் கிடைக்கின்றனவே அவற்றைத் தின்று பசியாறிக் கொள்வதாகக் கூறுகின்றனர். கடல்கடந்த நாடுகளிலும் வடநாட்டிலும் அடுத்த அரசுரிமை யாருக்கு என்பதில் போட்டி வந்து ஆட்சிக்கவிழ்ப்பும், உடன்பிறந்தாரையே வெட்டிக்கொல்லும் வெறியும் உள்ளது சுட்டிக் காட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் அப்படியொரு நிலை எப்போதுமே வந்ததில்லை என்றும் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப அண்ணன் நாட்டையாள்வதும் தம்பி படைத்தலைமை ஏற்பதும் என்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கெட்டோருக்கு நட்டாரில்லை என்கின்றனர். ஆனால் சாத்தனும் ஐயனும் குமணனைப் பார்க்கும்போது அவர் வேட்டுவக் குலத்தினருடன் காட்டில் தங்கியுள்ளார். அங்கு நாவல், மா ஆகிய  பழவகைகள் மலிந்துள்ளன. குறிஞ்சி நில வேட்டுவர்கள் அவருக்குத் தேனும் தினைமாவும் கொடுக்கின்றனர். அவர் அருகில் நிற்கும் சிறாரும் பழங்களை எடுத்துக் கொடுக்கின்றனர். அப்போது பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்கின்றனர்.

 

இதே காலத்தில் குமண நாட்டில் வரிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குடிக்கக் கஞ்சி இல்லாத வீட்டில் இரவில் சென்று வரி கேட்கின்றனர். கொடுக்க முடியாத குடியானவரை அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர்.

 

குமணனுக்கும் சாத்தனுக்கும் உள்ள நட்பு கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உள்ள நட்புப் போன்றது. அண்ணன் கொல்லப்படாமல் எங்கோ காட்டில் உயிர்வாழ்வது தம்பி இளங்குமணனுக்குத் தெரிந்து விட்டது. அண்ணன் தலைக்கு விலை வைக்கிறான். வறுமையில் வரும் புலவர்க்குத் தன் உடைவாளை எடுத்துக்கொடுத்துத் தலையை வெட்டிக்கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பொற்கிழி தருவான் என்கிறார் குமணன். 

 

ஒரு நாடு செழிப்பாக இருந்தால் அங்குச் செங்கோல் இருந்தால் பட்டி பெருகிப் பாற்சோறு பொங்கும் என்கின்றனர். நன்னனும் கிள்ளியும் ஐயனும் செல்வம் நிரம்பிய நாட்டில் படைபலமும் இருந்தால்தான் அந்த நாட்டில் அமைதி நிலவும் என்கின்றனர். இந்நிலையில் கொடுங்கோல் ஆட்சியில் நாட்டைவிட்டு மக்கள் கானாடு செல்கின்றனர். அவர்களை வழிமறிக்கும் பரிதி நடுநாட்டுப் படையுடன் சேர்த்துப் போர்ப்பயிற்சி அளித்துத் தன் நாட்டைக் கொடுங்கோலனிடம் இருந்து விடுவிக்க எண்ணுகிறார். படைவீட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். இந்தப் படையெடுப்பு தன் நாட்டுக்கு எதிராக இல்லை என்றும் அதன் குடிகளின் விடுதலைக்காக என்றும் பரிதி தெளிவாக உணர்த்துகிறார். 

 

நடுநாட்டுப் படைவீட்டில் பயிற்சியளிக்கும் பரிதியைப் பார்க்க இரவில் அவன் காதலி பவளக்கொடி காட்டுப் பகுதிக்கு வந்துபோகிறாள். காதலனை எண்ணிச் சோளக்கொல்லையில் அவள் பாடும் பாட்டும் அந்தக் காட்சியும் கண்ணுக்குக் குளுமையாகவும் செவிக்கு இனிமையாகவும் இருக்கின்றன. பரிதிக்கும் பவளக்கொடிக்கும் இடையில் உள்ள காதலை ஐயனும் அறிகிறார். 

 

கதைமாந்தர்கள் காட்டில் உலவும்போது தண்ணீரைச் சுரைக்குடுக்கையில் வைத்துள்ளனர். 

 

இந்நிலையில் ஐயன் வெளியூருக்குச் சென்றதால் தனியே பிரிந்திருக்கும் வாசுகி பேச்சியிடம் அந்தத் தனிமையின் கொடுமையைச் சொல்கிறார். நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற பாடலை நினைவுகூர்கிறார். அப்போது பாடும் முல்லை வாசம் உள்ளில் ஊறி என்னை வாட்டுது என்கிற பாட்டு நமக்கும் முல்லை மணமாய்க் கமழ்கிறது. இளையராஜாவின் இசையில் மலரின் பெயரும் மணம் வீசுகிறது. அந்தப் பாட்டில் எழுத்தாணி, கேந்திப்பூ, ஐயனார் உருவம், ஆலம் விழுது ஆகியன வருகின்றன. இந்தப் படத்தின் நாயகியர் மருதோன்றி இட்ட பாதத்தைக் கொண்டிருக்கின்றனர். ஐயன் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அன்றிரவு இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வேட்கையில் ஆவல் கூடும்போது இது முன்னிரவு என்றும் பிள்ளை விழித்து விடுவான் என்றும் சொல்கின்றனர். இப்படியே பேசிக்கொண்டு போகும்போது பின்னிரவு ஆகிவிட்டது என்கின்றனர். விளக்குக் குழியில் விளக்கொளி ஒளிர்கிறது. 

 

 

இதனிடையே காட்டில் இரவில் சந்திக்கும் பரிதியும் பவளக்கொடியும் பேசிக்கொள்கின்றனர். பவளக்கொடி பூப்பதில்லை காய்ப்பதில்லை கனி வந்த மாயமென்ன? என்கிறான் பரிதி. 

 

மண்ணில் விளையாடிவிட்டு வரும் மழலை கையால் அளைந்த கூழ் அமிழ்தினும் இனிது என்கிறார் ஐயன். மக்கள் மெய் தீண்டல் இன்பம் என்கிறார். பிள்ளை பசியால் விழித்துவிடும் என்கிறார் வாசுகி. அது எப்படித் தெரியும் எனும்போது பாலூறும் மார்பகங்கள் அதை உணர்த்துவதாகக் கூறுகிறார்.

 

பரிதியும் பவளக்கொடியும் இரவில் களவுக் காதலில் பேசிக்கொள்ளும்போது உன் நாயகனுக்குப் பற்களும் நகங்களும் இல்லை எனத் தன் தோழியர் தன்னைப் பார்த்துக் கேட்பதாகக் கூறுகிறார். பார்வையை விடப் பற்களும் நகங்களும் கூர்மைதான் என்கிறான் பரிதி. நான் போர்க்களத்தில் மாண்டால் நீ என்ன செய்வாய் என்கிறான் பரிதி. அதற்கு முன் நானிறந்து உன்னை மேலுலகில் வரவேற்பேன் என்கிறாள் அவள். இது காதலன் மீது அவள் எத்தகைய அன்பு வைத்திருக்கிறாள் என்பதைக் காட்டுகிறது.

 

பாகனுக்கு யானையால் சாவு, மன்னனுக்கு மெய்காப்பாளனால் சாவு என்பது இங்கே கூறப்படுகிறது.

 

இதனிடையே ஐயன் முப்பாலை எழுதி வருகிறார். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்னும் குறட்பாவுக்குப் பொருளை விளக்குகின்றனர்.

 

கொல்லுப்பட்டறையில் உலைக்களங்கள் எப்போதும் கனன்றுகொண்டே இருக்கின்றன. வாள், வில், வேல் ஆகியன வடிக்கப்படுகின்றன. அவற்றின் தரம் பார்க்கிறான் பரிதி. அம்பு நேராக இருக்க வேண்டும், நூலளவு வளைந்தாலும் இலக்கைத் தைக்காமல் விலகிவிடும் என்கின்றனர்.  காட்டெருமைத்தோலை அவுரிச்சாற்றில் முக்கி வைத்துக் கவசமும் கேடயமும் செய்கின்றனர். 

 

இதனிடையே குமணநாட்டுக்கு உதவியாக வடுகநாட்டின் ஆறலைக்கள்வர்களும் போருக்கு வருவதாகவும், அவர்கள் போருக்கு முன் கள்ளைக் குடித்து விட்டு வருவோர் என்றும் கூறப்படுகிறது. 

 

போருக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. வீரர்களுக்குக் கருப்பட்டியும் புளியும் கரைத்த பானகம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். போரில் வீரச்சாவு அடையும் மறவர்களுக்கு நடுகல் எழுப்பக் கல்தச்சர்கள், உடலில் புண்படுவோருக்கு மருத்துவம் அளிக்க மருத்துவர்கள் எல்லோரும் அணியமாயிருக்க அறிவுறுத்துகின்றனர். 

 

தன்னுடைய முப்பாலை மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்ற மறுத்துவிட்டதாகவும் இதனால் மக்கள் மன்றத்தில் அரங்கேற்றலாம் என்று எண்ணியுள்ளதாகவும் நடுநாட்டு மன்னனிடம் ஐயன் தெரிவிக்கிறார். 

 

போருக்கான அறிவிப்பில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர் ஆகியோரைப் பாதுகாப்பான வேறிடங்களுக்குச் செல்ல அறிவுறுத்துகின்றனர். ஆடை அவிழ்ந்தவன் புறமுதுகிட்டவன் ஆகியோரைத் தாக்காதீர் என்கின்றனர். சங்கும் போர்ப்பறையும் முழங்குகின்றன. பெண்கள் வெற்றிக்காகப் பொங்கலிட்டுக் குலவையிடுகின்றனர். 

 

போர் மூள்கிறது. கடும்போர் நடக்கிறது. இந்தப் போரில் யார் வெற்றிபெற்றார்? எத்தகைய முடிவு ஏற்பட்டது? பரிதியும் பவளக்கொடியும் என்ன ஆனார்கள்? ஐயனின் முப்பால் எனப்படும் திருக்குறள் மக்கள் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டதா? மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதா? இவற்றுக்கெல்லாம் இந்தப் படத்தின் முடிவில் விடைகள் உள்ளன.

 

ஆங்கிலமும் சமஸ்கிருதமும் அரைகுறைத் தமிழும் எனக் காதில் கேட்க முடியாத கொச்சை மொழிகள் உள்ள படங்களுக்கிடையே செவிகுளிரும் வகையில் தமிழ்மொழியை அள்ளித் தெளித்து உரையாடலை வடித்துள்ளார் செம்பூர் ஜெயராஜ். இதனால் இந்தத் தமிழைக் கேட்பதற்கென்றே படத்தை ஒருமுறைக்குப் பலமுறை பார்க்க வேண்டும். தமிழ்த் திரையுலகுக்கு இளையராஜாவாக வந்தவர் திருக்குறள் படத்துக்கு இசையமைத்து இசைமன்னராகியுள்ளார். முல்லைவாசம் உள்ளில் வீசும் என்ற பாட்டு அதை மெய்ப்பிக்கிறது.

 

தமிழ்நாட்டில் அரசியலில் மதத்தின் தலையீடு இல்லை என்பது, நாட்டில் வரிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது என்பது, கள்ளைத் தடை செய்ய வேண்டும் என்பது, பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்பவனைக் கழுவிலேற்ற வேண்டும் என்பது இவையெல்லாம் இக்காலச் சூழலுக்கும் பொருந்துவனவாக உள்ளன. 

 

அதேநேரத்தில் திருவள்ளுவரை நீறில்லா நெற்றியையுடையவராகக் காட்டியுள்ளனர். அப்படியே நீறில்லாவிட்டாலும் அவர் நெற்றியில் சந்தனம் குங்குமப் பொட்டுக்கூட இல்லாமலிருக்க முடியுமா? என்னும் வினா எழுகிறது. நீறில்லா நெற்றி பாழ் என்கிறார் ஔவையார். அத்தகைய நாட்டில் வள்ளுவர் திருநீறு பூசியிருக்க மாட்டாரா என்ன? இன்று நிலவும் ஆரிய, திராவிட, தமிழ்த் தேசிய முரண்களில் வந்துள்ள கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த வள்ளுவன் (ஐயன்) மீது ஏற்றி அவரை நீறில்லா நெற்றியுடையாராகக் காட்டியிருப்பது ஒரு பெருங்குறையே. 

 

தமிழ் நிலம், தமிழ்ப் பண்பாடு, இயற்கை சார்ந்த பொருட்கள், தூய தமிழ்ப் பேச்சு, பண்பாடு மாறாத கதையமைப்பு, படம் முழுவதும் திருக்குறளை விளக்கும் வகையில் உள்ளதுகாமராஜ் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணனின் இயக்கம், செம்பூர் ஜெயராஜின் உரையாடல், இசைமன்னன் இளையராஜாவின் இசை, இவை எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கும். உலகெங்குமுள்ள தமிழர்களிடம் இதை இணைய வழியாகக் கொண்டு சேர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

- சே.பச்சைமால்கண்ணன்