புதன், 10 ஏப்ரல், 2024

சாலைப் பாதுகாப்பு

புவியில் உயிர்கள் தோன்றியது முதல் இன்றுவரை கால்நடைப் பயணம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஊர்வன, தவழ்வன, நடப்பன ஆகியவற்றுடன் மனிதர்களும் நடந்து வருகிறார்கள். என்னதான் பெரும் செல்வந்தராக இருந்தாலும் சொகுசு மகிழுந்து முதல் வானூர்தி வரை வைத்திருந்தாலும் சில இடங்களுக்கு நடந்துதான் சென்றாக வேண்டும்.

நீர்வாழ் உயிரினங்கள் நீரில் நீந்துகின்றன. நிலத்தில் வாழும் பறவைகள் சில அடிகள் மட்டும் நடந்து செல்லும் இயல்புடையன. அவை பெரும்பாலும் பறந்தே செல்கின்றன. நிலவாழ் உயிரினங்கள் அனைத்துமே அவற்றின் தோற்றக் காலத்தில் இருந்து இன்றுவரை ஊர்ந்தும், நடந்தும் செல்கின்றன.

இயற்கை மீது மனிதன் ஆதிக்கம் செலுத்தாக் காலத்தில் புவியெங்கும் அடர்ந்த காடுகளாக இருந்தன. அக்காலத்தில் ஓடைகளும் ஆறுகளுமே அக்காட்டின் நடுவே வழியாக அமைந்தன. அதனால்தான் ஆறு என்கிற சொல்லுக்கு வழி என்ற பொருளும் உண்டு. அது மட்டுமல்லாமல் இன்றும் நாட்டில் உள்ள பெருவழிகள் எல்லாம் ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ளதைக் காணலாம்.

கால்நடையாகப் பாதம் பதித்து மனிதனும் ஆடுமாடுகளும் நடந்துசென்ற வழியே பாதையாகும். அது பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையாக இருக்கும். சக்கரமும் வண்டியும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இரட்டை மாடுகளை வண்டிகளில் பூட்டிப் பயணம் மேற்கொண்டபோது, வண்டியின் இருசக்கரங்களும் மண்ணில் உருண்டு அந்த வழி இரட்டைத் தடங்கொண்ட பாதையானது.

நிலவாழ் உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனது அறிவால் சக்கரத்தையும் வண்டிகளையும் கண்டுபிடித்து முதலில் கால்நடைகளின் உதவியுடன் பயணம் மேற்கொண்டான். விளைபொருட்கள், கட்டுமானப் பொருட்கள், செய்பொருட்கள் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டுசென்றான். இப்போது எந்திர ஊர்திகள் மூலம் பயணம் நடைபெற்று வருகிறது.

எறும்புகள், கறையான்கள் சாரை சாரையாக ஊர்ந்து சென்றாலும் அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளவில்லை. ஆடுமாடுகள், காட்டுவிலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்றாலும் அவை சண்டையிடும்போது ஒன்றையொன்று முட்டிக்கொள்ளுமே தவிர இயல்பாக நடந்துசெல்லும்போதும் ஓடும்போதும் ஒன்றையொன்று இடிப்பதில்லை.

மனிதனும் நடந்துசெல்லும் காலம் வரை, உடன்செல்வோரையும் எதிரில் வருவோரையும் இடிக்கவில்லை. மிதமான வேகமும் பொறுமையும் இருந்தது அதற்குக் காரணங்கள்.

நேரத்தையும் தூரத்தையும் விரைவாகக் கடக்க முயல்வதே விபத்துக்கான முதற்காரணமாகும். மிதிவண்டிகள் பயன்படுத்திய காலத்தில்கூட அனைவரும் விரைந்து சென்றாலும் மோதல் இல்லை. மிதமான வேகத்தில் செல்வதும், கால் மிதியை விட்டதும் வேகம் குறைந்துவிடுவதும் அதற்குக் காரணம்.

மோட்டார் ஊர்திகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகே விபத்துக்கள் பெருகிவிட்டன. ஒரே தடத்தில் போக்கும் வரத்தும் இருந்த காலத்தில் கூட விபத்துக்கள் அரிதாகவே நிகழ்ந்தன. இப்போது போகவும் வரவும் தனித்தனித் தடங்கள், நால்வழிச்சாலை, ஆறுவழிச்சாலை, எட்டுவழிச்சாலை எனச் சாலையின் அகலமும் அதிகரித்துள்ளது.

பொறுமையாகச் சென்றாலே விரைந்து சென்றுவிட முடியும் என்ற சூழலிலும் சாலைச் சந்திப்புகள், பிரிவுகள், கூடல்கள், நடப்போர் சாலையைக் கடக்குமிடங்கள், தொடர்வண்டிக் கடவுகள் ஆகியவற்றில் பொறுமை காக்காமல் விரைந்து செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் நேர்ந்து விலைமதிப்பில்லா உயிர்கள் இறப்பதையும், உடல்கள் புண்ணாகி உறுப்புகளை இழந்து காலமெல்லாம் துன்பத்தில் அழுந்துவதையும் பார்க்கிறோம்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ரஷ்யா, அரபுநாடுகள், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடப்போருக்கும் மிதிவண்டிகளில் செல்வோருக்குத் தனித்தடமும் விபத்தில்லாப் பாதுகாப்பும் செய்துகொடுத்துள்ளனர். இந்தியாவில் மிதிவண்டிக்குத் தனித்தடமும் இல்லை, நடைபாதையும் இல்லை. அப்படியே நடைபாதை இருந்தாலும் அதில் கடைகள் வைத்தும் வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமித்திருப்பதால், மக்கள் சாலையில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சாலையில் போவதற்கு ஒருவழி, வருவதற்கு ஒரு வழி என்று விதி இருக்கிறது. ஒவ்வொரு வழியில் இருந்தும் செல்லும் வாகனங்களும் சந்திப்புகளில் மோதாமல் கடப்பதற்குச் சைகைகள் உள்ளன. இருப்பினும் எதிர்த்திசையில் செல்லும் வாகனங்களாலும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களாலும், சைகைகளை மதிக்காமல் மீறிச் செல்லும் வாகனங்களாலும், மற்ற வாகனங்களில் செல்வோரும், நடந்துசெல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.

வாகனத்தில் செல்லும் ஓட்டுநர்கள்,

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து என்பதை நினைவிற்கொண்டால் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

விதிகளை மீறுவோரிடமும் விபத்துக்குக் காரணமானவர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டுவிடும் போக்கே விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்க முதன்மைக் காரணம். அதிகாரம் மிக்கோர், பணம் படைத்தோர் தவறாக வண்டி ஓட்டி எளியவர் மீது ஏற்றிவிட்டால், எளியவர் மீதே தவறுள்ளதாகக் காட்டி வழக்குப் பதியும் போக்கும் இங்கு உள்ளது. இரவில் உறங்காமல் தொடர்ந்து வண்டி ஓட்டுவது, குண்டும் குழியுமான சாலைகள், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது, சாலையில் சாகசங்கள் செய்வது, சரக்கு வாகனங்களில் கொண்டுசெல்லும் பொருட்கள் சாலையில் விழுந்துவிடுவது, செல்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டுதல் ஆகியனவும் விபத்துக்கான காரணங்களாகும்.

இவற்றுக்கெல்லாம் மேலே பொறுமையில்லாததும் ஒரு காரணமாகும். ஒவ்வோரிடத்திலும் வைத்துள்ள கைகாட்டிகள், சைகைகள் ஆகியவற்றைப் பார்த்து அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துப் பொறுமையாகச் சென்றால் சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக விளங்கும்.

இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பொறுத்தவரை சாலைகள் வாகனத்துக்கானவை மட்டுமே, நடப்போர் அதில் குறுக்கே வரக்கூடாது என்ற தவறான எண்ணம் வண்டி ஓட்டிகளிடம் உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். வெளிநாடுகளில் சாலையைக் கடப்பதற்கான இடம் மட்டுமன்றி எந்தவோரிடத்திலும் நடப்போர் கடந்தால் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் தொலைவிலேயே வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் முழுவதுமாகச் சாலையைக் கடந்துசென்ற பிறகே வண்டியை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.

இந்தியாவில் அப்படி இல்லை. நடப்போருக்காக வெள்ளைக்கோடுகள் போட்ட இடத்திலும் கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. ஒருசிலர் சைகையை மீறி வாகனங்களில் விரைவாகச் செல்வதே அதற்குக் காரணமாகும். வெள்ளைக்கோடுகளும் சைகையும் இல்லாத மற்ற இடங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சைகையை மீறிச் செல்வோரும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரும், சாலைச் சந்திப்புகள், நடைபாதைக் கடவுகள் ஆகியவற்றில் வேகத்தைக் குறைக்காமல் செல்வோரும் சாலையில் நகரும் தற்கொலைப் படையாகவே உலவுகின்றனர். இவர்களால் நடப்போருக்கும் மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து நேர்கின்றது.

விருதுநகரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார், காலை ஆறரை மணிக்குச் சிவரக்கோட்டையில் கடவு உள்ள இடத்தில் வந்தபோது, வேகத்தைச் சற்றும் குறைக்காததுடன், அதனுடைய தடத்திலிருந்து விலகி, ஓரத்தில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன் பிறகு வலப்புறமாக விலகிச் சென்று சாலை நடுத்தடுப்பில் பின் சக்கரம் ஏறியதால் தறிகெட்டுப் புரண்டு, அதற்கு வலப்புறமும் உள்ள தடுப்பில் மோதி, அதன் அப்பால் உள்ள அணுகுசாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கொய்யாப்பழம் ஏற்றிச் சென்ற சிறுவணிகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நிகழ்விடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். வாகனத்தின் ஓட்டுநர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். பொறுமையின்மையும், அதிவிரைவுமே இந்த விபத்துக்குக் காரணம்.

சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும். இருந்தாலும் மனிதநேயமும், உயிர்களிடத்தில் அன்புகாட்டுவதும், பொறுமையுமே விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கும். நாட்டில் அத்தகைய ஒரு சூழலை உருவாக்க லஞ்சமும் ஊழலும் இல்லாத நல்லாட்சி அமைவதே தீர்வாக இருக்கும்.

திங்கள், 26 பிப்ரவரி, 2024

கொடுமைக்கார பண்ணையாரும் பழிவாங்கிய பையனும் - சிறுகதை

தென்பாண்டி நாட்டின் திருநெல்வேலிச் சீமையில் கோவன்குளம் என்னும் ஊர் மிகவும் செழிப்பான ஊர். அவ்வூரின் தென்புறம் நம்பியாறும் வடபுறம் ஓடையும் உள்ளன. இரண்டிலும் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் பாயும் என்றாலும் அந்த நீரைத் தேக்கி வைத்து வயல்களுக்குப் பாய்க்க ஊரின் மேற்புறம் ஒரு குளமும், ஓடைக்கு வடக்கே ஒரு குளமும் உள்ளன. இதனால் மழைக்காலத்தில் பிசானப்பட்டத்தில் நெல் பயிரிடுவர். அந்த நெற்பயிரைத் தைமாதம் அறுத்த பிறகு, அறுதாளுடன் வயல்களை உழுது பருத்தி பயிரிடுவர். இதனால் அவ்வூர் எப்போதும் பச்சைப் பசேலென்று செழிப்பாக இருக்கும். இதுபோக அவ்வூரில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஓடைக்கரை, வயலின் வரப்புகள், வாய்க்காலின் இரு கரைகள், புன்செய் நிலங்கள் எங்கும் பனைகள் ஓங்கி வளர்ந்திருக்கும். இத்தகைய செழிப்பு மிக்க ஊரில் கடுவாயன் என்கிற பண்ணையார் இருந்தார். அவருக்கு அந்த ஊரில் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை நிலம் இருந்தது. பணமும் திமிரும் அதிகம் இருந்ததால் அவர் தன் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிப்பது கிடையாது. நாமில்லாவிட்டால் இவர்களுக்கெல்லாம் கஞ்சியும் காடியும் கிடைக்காது என்ற தலைக்கனம் அவருக்கு உண்டு. அவருடைய பண்ணையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் மாடுபோல் வேலை வாங்கிவிட்டு நாய்க்குக் கஞ்சி ஊற்றுவதுபோல் அரைவயிற்றுக்கு உணவுகொடுப்பார். உணவுதான் அரை வயிற்றுக்கு, வேலை ஓராளுக்குச் செய்ய வேண்டும். ஐயா நீங்கள் கொடுக்கும் வேலையை என்னால் செய்ய இயலவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லும் தொழிலாளியை ஒற்றைக் காதை அறுத்துவிட்டுவிடுவார். அவருடைய இந்த அதிகாரப் போக்கும் திமிரும், தொழிலாளர் பலரின் காதறுத்த கதையும் தெரிந்ததும் புதிதாக யாரும் அந்தப் பண்ணைக்கு வேலைக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே இருந்தவர்களும் அவரின் தொல்லையும் கொடுமையும் தாங்காமல் காதறுபட்டு வெளியேறினர். இதனால் புதிதாக வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக அவர் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி தான் சொல்கிற வேலையையெல்லாம் செய்ய நல்ல திறமையான ஆட்கள் வேண்டுமென்றும், மற்ற இடங்களில் உள்ளதைவிட அதிகக் கூலி கொடுப்போம் என்றும், வேலையைச் செய்ய இயலாமல் வெளியேறினால் ஒற்றைக் காதை அறுத்துவிடுவோம் என்றும், நாங்களாகவே தொழிலாளியை வெளியேற்றினால் எனது சொத்தில் பாதியை எழுதிக் கொடுப்போம் என்றும் பண்ணையார் அறிக்கை வெளியிட்டார். அவரின் அறிக்கையைக் கேட்ட தொழிலாளர்கள் பலரும் அஞ்சி வெருண்டோடினர். ஆனால் அதே கோவன்குளத்தைச் சேர்ந்த அன்பரசன் என்கிற இளைஞன் குடும்பச் சூழல் காரணமாக அந்தப் பண்ணையாரிடம் வேலைக்குச் சென்றான். அண்ணன் முகிலரசனும் குடும்பத்தினரும் தடுத்தும் அதை மீறிப் பண்ணையாரிடம் வேலைக்குப் போனான் அன்பரசன். உடனேயே தான் விதித்துள்ள விதிமுறைகள் பற்றி அவனிடம் பேசினார் பண்ணையார் கடுவாயன். எல்லாம் தெரியுமையா, அதை ஏற்கெனவே தெரிந்துகொண்டுதான் நான் வந்துள்ளேன் ஐயா. நீங்கள் சொல்லும் எல்லா வேலையையும் திறமையாகச் செய்வேன் ஐயா என்றான் அந்த இளைஞன் அன்பரசன். பொதுவாகவே பண்ணைகளிலும் தொழிற்சாலைகளிலும் ஒரு சொலவடை உண்டு. நன்றாக வேலை செய்பவனுக்கு நிறைய வேலையைக் கொடு, வேலையே செய்யாமல் ஏய்க்கிறவனுக்கு நிறையக் கூலியைக் கொடு என்பதுதான் அது. அதன்படி திறமையாகவும் அறிவுடனும் கடமையே கண் என்று கருதி நல்லபடி வேலையைச் செய்த அன்பரசனுக்குக் கடுவாயன் பண்ணையார் ஏராளமான வேலைகளைக் கொடுத்தார். காலையில் உறங்கி விழித்ததும் கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிட்டு மாடுகளில் பால்கறந்து குடங்குடமாய் ஊற்றி வைத்துவிட வேண்டும். அதன்பின் கன்றுக்குட்டிகளை ஓடியாடி விளையாடவிட்டுப் பசுக்களைக் குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டிய பசுக்களின் உடல் காயுமுன் அவற்றுக்குப் பசும்புல்லறுத்து இரையாகப் போட வேண்டும். ஓடி விளையாடிய கன்றுக்குட்டிகளைக் கட்டுத்தறியில் கட்டிப் போட்டுவிட்டுப் பசுக்களை மேய்க்கப் பற்றிச் செல்ல வேண்டும். அவற்றைப் புல்வெளியில் மேயவிட்டுவிட்டு வயலில் உழவு, வரப்பு வெட்டு, வாய்க்கால் வெட்டு, களைவெட்டு, காய்கறி பறித்தல், வயலுக்குத் தண்ணீர் பாய்த்தல் எனக் கடினமான வேலை. கஞ்சி குடிக்கும் நேரந்தான் சற்று ஓய்வு. அதற்குப் பிறகு கொஞ்சம் குறுக்கைச் சாய்ப்போம் என்றுகூறி ஓய்வெடுத்தால், அதற்குள் பண்ணையார் கடுவாயன் வந்து இன்னும் சில வேலைகளை ஏவிவிட்டுப் போவார். மேய்ந்துவிட்டு அந்தி நேரத்தில் வீட்டுக்கு வரும் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி அவற்றைக் கட்டுத்தறியில் கட்டிப் பால்கறந்து அவற்றுக்கு இரைபோட்டு முடிப்பதற்குள் பொழுது சாய்ந்து விடும். அதன்பிறகு சோறுதின்றுவிட்டு உறங்கினால் காலையில் கண்விழித்து எழுந்து வேலை செய்யச் சரியாக இருக்கும். இப்படி ஓய்வில்லா வேலை, உறக்கம்தான் ஓய்வு என்றிருந்ததால் இளைஞனான அன்பரசனால் பண்ணையாரின் கொடுமைகளைத் தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவன் அவரிடம் போய், ஐயா என்னதான் நான் கடுமையாக வேலை செய்தாலும் அதற்கு இரக்கப்படாமல் நீங்கள் மேலும் மேலும் கடுமையாக வேலைகளை ஏவுகிறீர்கள். இதனால் எனக்குச் சரியான ஓய்வும் உறக்கமும் இல்லாததால் என் உடல்நலன் குன்றுகிறது. இதை எண்ணி எண்ணி என் உளநலமும் பாதிக்கப்படுகிறது. அதனால் நான் வேலையில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னான். என்ன இருந்தாலும் நமக்கு இத்தனை நாள் நல்லபடியாய் வேலை செய்திருக்கிறானே என்று கொஞ்சங்கூட அந்தப் பண்ணையாருக்கு இரக்கம் இல்லை. முன்பு கூறிய விதிமுறைப்படியே ஒற்றைக் காதை அறுத்துவிட்டுப் பண்ணையை விட்டு வெளியேற்றினார் அந்த இளைஞனை. காதறுபட்டு வந்த தம்பியைக் கண்டு அண்ணன் முகிலரசனின் நெஞ்சங் கொதித்தது. இந்தப் பண்ணையானுக்குத் தக்க பாடம் கற்பித்துவிட வேண்டும். இல்லையேல் இந்த மண்ணில் பிறந்ததற்கும், இனிய தமிழைக் கற்றதற்கும் பயனில்லாமல் போய்விடும் என்று எண்ணினான் முகிலரசன். அவன் நேரே பண்ணையாரிடம் சென்று நான் உங்கள் தோட்டத்துக்கு வேலைக்கு வருகிறேன் என்று சொன்னான். இந்த வேண்டுகோளைக் கேட்டதும் பண்ணையாருக்கு வியப்பாக இருந்தது. நாம் ஏற்கெனவே இவன் தம்பியின் காதை அறுத்துவிட்டுள்ளோம். அது தெரிந்தபிறகும் இவன் நம்மிடம் வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறானே என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டார். தம்பி, உன் தம்பி அன்பரசன் என்னிடம் வேலை செய்ய முடியவில்லை என்று கூறிக் காதறுபட்டு வெளியேறிய கதை உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். இருந்தும் என்னிடம் வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறாயே. நன்றாக இன்னொரு முறை எண்ணிப் பார்த்துவிட்டுச் சொல் என்றார் பண்ணையார் கடுவாயன். ஒருமுறைக்கு நூறுமுறை எண்ணிப் பார்த்துவிட்டுத் தான் உங்களிடம் வேலைக்குச் சேர முடிவெடுத்து வந்துள்ளேன் என்று பண்ணையாரிடம் தீர்க்கமாகச் சொன்னான் அன்பரசனின் தமையன் முகிலரசன். சரி அப்படியானால் என்றைக்கு வேலைக்குச் சேர்கிறாய்? என்றார் பண்ணையார் அவனிடம். அவனோ இன்றே சேர்கிறேன் என்றான். நமக்கு மீண்டும் பண்ணையடிமை ஒருவன் கிடைத்து விட்டான் என்று அகமகிழ்ந்தார் பண்ணையார் கடுவாயன். முகிலரசனோ நம் தம்பியின் காதை அறுத்தவனைப் பழிதீர்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டான். இன்று இவனுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என்று பண்ணையார் மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருந்தபோதே, ஐயா நான் என்ன வேலை செய்ய வேண்டும் எனக் கேட்டான் முகிலரசன். அதற்குத் தானே காத்திருந்தேன் என்று மனத்தில் எண்ணிய பண்ணையார், தம்பி முகிலரசா, ஏர்மாடு கலப்பை பூட்டி வயலை உழத்தெரியுமா உனக்கு என்றார். தெரியுமையா, எந்த வயலை உழ வேண்டும் என்று சொன்னால் உழுதுவிடுவேன் என்றான் முகிலரசன். அந்தக் கொக்கு நிற்கிற வயலை உழ வேண்டும் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் பண்ணையார். முகிலரசனோ நுகத்தில் ஏர்மாட்டையும் கலப்பையையும் பூட்டிவிட்டு உழுவதற்காகக் கொக்கு நிற்கும் வயலுக்குச் சென்றான். இவன் சென்றவுடனே கொக்கு எழுந்து பறந்து அங்கிருந்து வேறொரு வயலுக்குச் சென்று அமர்ந்தது. கொக்கு நிற்கும் வயலைத்தானே உழச்சொன்னார் பண்ணையார் என்று எண்ணிய இவன் ஏர்மாடுகளுடன் அந்த வயலுக்கும் சென்றான். என்ன இவன் ஏர்மாட்டையும் கலப்பையையும் பூட்டிக்கொண்டு நாம் செல்லுமிடமெல்லாம் வருகிறானே. இன்று நம்மை இரைகொத்த விடமாட்டான்போல என்றெண்ணிய கொக்கு இன்னும் அதிகத் தொலைவுக்குப் பறந்துபோய் அங்கொரு வயலில் அமர்ந்தது. அங்கும் ஏர்மாடுகளுடன் சென்றான் முகிலசன். ஓயாமல் அங்குமிங்கும் பறந்து அலைந்த கொக்கு அந்திநேரம் வந்ததும் இறுதியாய்ச் சிறகடித்துப் பறந்து மரத்தில் உள்ள தன் கூட்டுக்குச் சென்று அமர்ந்தது. களைத்துப் போன முகிலரசனும் காளை மாடுகளை நுகத்தில் இருந்து அவிழ்த்துவிட்டான். அவை இப்போதுதான் வாய்ப்புக் கிடைத்தது என்றெண்ணி வயலின் வரப்போரத்தில் உள்ள புல்லை மேயத் தொடங்கின. பகலெல்லாம் வெயிலின் கொடுமைக்கு வீட்டில் தங்கிய பண்ணையார் அந்தி நேரத் தென்றல் காற்றின் குளுமையைப் பெறுவதற்காகத் தன் வயற்காட்டுக்கு வந்தார். அங்கே தான் சொன்ன வயல் உட்பட எந்த வயலையும் உழாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதேநேரத்தில் நுகத்தில் இருந்து அவிழ்த்துவிட்ட காளைகள், அந்தி சாய்ந்து கருக்கல் வருவதற்குள் அரைவயிற்றுக்காவது புல்லை மேய்ந்துவிட வேண்டும் என்று எண்ணி அவுக்கு அவுக்கு என்று வாய்க்கால் வரப்போர அறுகம்புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. கடுஞ்சினத்துடன் அங்கு வந்த பண்ணையார், என்ன நான் சொன்ன வயலை நீ உழவே இல்லையே என்றார் முகிலரசனைப் பார்த்து. நீங்கள் எந்த வயலை உழச் சொன்னீர்கள் என்றான் அவன். அந்தக் கொக்கு நிற்கிற வயலை உழு என்று சொன்னேன் அல்லவா என்றார் அவர். இதைக் கேட்ட முகிலரசன் விழுந்து விழுந்து சிரித்தான். என்ன இவனுக்குக் கிறுக்கு ஏதும் பிடித்து விட்டதா என்று மனத்துக்குள் எண்ணினார் பண்ணையார். இருந்தாலும் அதிர்ச்சியையும் எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல், நான் உன்னை உழச்சொன்னேன். நீ என்னவென்றால் சிரிக்கிறாய். முதலில் சிரிப்பதை நிறுத்து, ஏன் உழவில்லை என்பதற்கு உரிய விளக்கத்தைச் சொல் என்றார் பண்ணையார். அப்படியா கேளுங்கள் கோவன்குளத்துப் பண்ணையாரே, நீங்களோ கொக்கு நிற்கிற வயலை உழச்சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள். நானோ ஏர்மாடுகளையும் கலப்பையையும் நுகத்தில் பூட்டி அந்த வயலுக்குச் சென்றேன். நான் கிட்டே போகவும் கொக்கு அங்கிருந்து பறந்து மற்றொரு வயலுக்குச் சென்றது. நான் விடுவேனா? நீங்கள்தான் சொல்லி விட்டீர்களே. கொக்கு நிற்கிற வயலை உழவேண்டும் என்று. அதற்காக நான் ஏர்மாடுகளுடன் அந்த வயலுக்குச் சென்றேன். அந்தக் கொக்கு அங்கிருந்து பறந்து வேறொரு வயலுக்குச் சென்று அமர்ந்தது. இப்படிப் பகலெல்லாம் அது என்னைப் பாடாய்ப் படுத்தி விட்டது. நம் காளைகளும் களைத்துவிட்டன. நல்ல வேளை இறுதியாகப் பொழுதுசாயும் நேரத்தில் கொக்கு பறந்து கூட்டுக்குள் அடையச் சென்றுவிட்டது. அதனால் காளைக்கும் எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது என்றான் முகிலரசன். உனக்கு ஓய்வு கிடைத்து விட்டது. உன்னை வைத்து எப்படி வேலை வாங்குவது என்றெண்ணி என் மனம் ஓய்வில்லாமல் தவிக்கிறது என்று மனத்தில் எண்ணினார் பண்ணையார். சரி. இன்றிரவு நீ ஓய்வெடு நாளைக் காலையில் மீண்டும் வேலையைத் தொடங்கலாம் என்றார். முகிலரசனும் இரவில் நன்றாக உறங்கினான். காலையில் எழுந்து பல் விளக்கிக்கொண்டு வரப்பு வழியே நடந்து வயலுக்குச் சென்றான் முகிலரசன். எப்போம் வருவான் என்று காத்திருந்ததுபோல் அங்கு நின்றுகொண்டிருந்த பண்ணையார், உனக்கு உழுவதற்குத் தான் தெரியவில்லை. வயலில் களைபறிக்கத் தெரியுமா? என்றார். ஐயா பயிர் எது? களை எது? என்று நீங்கள் சொல்லித் தந்தால் நான் பறித்துவிடுவேன் என்றான் முகிலரசன். நட்டுப் பதினைந்து நாள் ஆன நெல் வயலுக்கு அவனைக் கூட்டிச் சென்ற பண்ணையார், நன்கு பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த ஐந்தாறு நெற்பயிர்களைத் தொட்டுக் காட்டி இவையெல்லாம் பயிர்கள் மற்றவை களைகள் என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். தம்பியின் காதையறுத்த பண்ணையாரைப் பழிவாங்க வந்துள்ள முகிலரசனும், பண்ணையார் தொட்டுக்கூறிய ஐந்தாறு நெற்பயிர்களை மட்டும் விட்டுவிட்டு அந்த வயலில் அவர் தொட்டுக்காட்டாத நெற்பயிர்களையெல்லாம் களையென்றெண்ணிப் பிடுங்கி எறிந்துவிட்டான். வீட்டுக்குப் போய்ச் சோறு தின்றுவிட்டுக் கையில் கஞ்சிக் கலயத்தோடு முகிலரசனைப் பார்க்க வந்தார் பண்ணையார். வயல் முழுவதும் பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த பயிர்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னப்பா முகிலரசா, உன்னைக் களை பிடுங்கச் சொன்னால் நீ பயிர்களைப் பிடுங்கி இருக்கிறாய். உனக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாதா? என்று சினந்து பேசினார் பண்ணையார். எனக்கு வேலை செய்யத் தெரியும். உங்களுக்குத் தான் வேலை ஏவத் தெரியவில்லை என்று துணிச்சலுடன் கூறினான் முகிலரசன். ஏலே என்ன சொன்னாய்? எனக்கு வேலை ஏவத் தெரியவில்லையா? எப்படி? என்றார். நீங்கள் காலையிலேயே வீட்டுக்குப் போகாமல் என்னுடனே வயலில் நின்றுகொண்டு எது எது பயிர் என்று தொட்டுத்தொட்டுச் சொல்லித் தந்தால் நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் களையை மட்டும் பிடுங்கியிருப்பேன் அல்லவா? என்றான் முகிலரசன். நீ களையைப் பிடுங்க வந்தவனில்லை. என் உயிரைப் பிடுங்க வந்தவன் என்று மனத்துக்குள் எண்ணினார் பண்ணையார். இவன் நம் உயிரை வாங்குமுன் நாம் இவனைப் பண்ணையை விட்டு வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் நாம் பாதிச் சொத்தையாவது காப்பாற்ற முடியும் என்று நினைத்தார் பண்ணையார். அதனால், உன்னைப் பண்ணையில் வைத்து வேலை ஏவ என்னால் முடியாதப்பா. நீ எனக்கு வேலைக்கு வேண்டாம். வெளியே போய்விடு, உன்னை நானே வெளியேற்றுவதால் நான் முதலில் கூறியதுபோல் என் சொத்தில் பாதியை உனக்கு எழுதித் தருகிறேன் என்றார் பண்ணையார். அதெல்லாம் எனக்கு வேண்டாமையா, தொழிலாளர்கள் மீது உங்களுக்கு இரக்கமும் அன்பும் வரவேண்டும். அவர்களை நீங்கள் மதிக்க வேண்டும். காதறுக்கும் கொடுமையைக் கைவிட வேண்டும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் நான் துணிந்து உங்களிடத்தில் வேலைக்கு வந்தேன். என் தம்பியைக் காதறுத்ததற்கு உங்களைப் பழிவாங்கவும் வந்தேன். இவ்வளவிலே உங்களைப் பழிவாங்கியது போதும் என்பதால் அந்த எண்ணம் இப்போது என்னிடம் இருந்து மறைந்து விட்டது. அதேநேரத்தில் நீங்கள் உங்கள் சொத்தில் பாதியைத் தருவதாகச் சொன்னீர்கள். அதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் தவற்றை உணர்ந்தால் போதும். இனித் தொழிலாளர்கள் எவருக்கும் கொடுமை செய்யாதீர்கள் அதுபோதும் என்றான் முகிலரசன். முன்பு சொன்னது சொன்னதுதான். ஒப்புக்கொண்டபடி உனக்கு என் சொத்தில் பாதியை எழுதித் தருகிறேன். அப்போதுதான் உன் தம்பியின் காதறுத்த குற்றத்துக்கு நீ என்னை ஒறுத்ததாக (தண்டித்ததாக) இருக்கும் என்றார் பண்ணையார் கடுவாயன். அவரிடம் பாதிச் சொத்தைப் பெற்ற முகிலரசன் அதில் பாதியைத் தன் தம்பிக்கு எழுதிக்கொடுத்தான். இருவரும் வயலில் உழுது பயிரிட்டுத் தண்ணீர் பாய்த்துக் களைபறித்துப் பயிர்வளர்த்துக் கதிரறுத்து, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருவள்ளுவர் கூற்றின்படி வாழ்ந்தனர். ஆடு மாடு கோழி உள்ளிட்ட உயிர்களிடமும், நெல், புல், செடி, கொடி, மரம், தென்னை, பனை, ஈந்து, கமுகு உள்ளிட்ட பயிர்களிடமும் அன்புகாட்டினர். பயிர்கள் செழித்து விளைந்ததால் காக்கை, குருவி, மயில் உள்ளிட்ட பறவைகளும் அவற்றைத் தின்று மகிழ்ந்து வாழ்ந்தன. -ப.முகிலரசன்

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

மன்னுயிர் காக்கத் தேனீக்களைக் காப்போம்

தேனீ என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் ஏவல்வினையாகவும் விளங்குகிறது. தேன் இனிமைக்கோர் எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. தேனினுமினியது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் தேனினுமினியது ஒன்றுண்டா என்றால் இல்லையென்றே கூறவேண்டும். ஆகையால் தேனினுமினிய என்னுஞ்சொல்லை உயர்வு நவிற்சியாகவே கருதவேண்டும்.  

பூவில் தேனுறியும் தேனீக்கள்


தேனீ அதன் அளவையும் கூடுகட்டும் இடத்தையும் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. சிறுபுதர்களிலும் வேலிகளிலும் கூடுகட்டும் தேனீ சிறிதாக இருக்கும். பாறைகளிலும் பொந்துகளிலும் கூடுகட்டும் தேனீ சற்றுப் பெரிதாக இருக்கும். பாறைகளில் கட்டப்படும் கூடுகள் அடுக்கடுக்காக இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் நிறைய தேன் இருக்கும். மலைப்பகுதிகளிலும் உயரமான கட்டடங்களிலும் கூடுகட்டும் தேனீ மிகப்பெரிதாக இருக்கும். இவற்றின் கூடும் பெரிதாகவும் அகலமாகவும் இருக்கும். சமவெளிகளில் சிறுதேனீயும் பாறைத்தேனீயும் பரவிக் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில் மலையந்தேனீ காணப்படுகின்றது.
தேனீக்கள் தேடும் முதல் தேனும் மகரந்தப்பொடியுமாகும். தேன் மருத்துவக் குணம் மிக்கது. ஈக்களின் துணையின்றி மனிதனால் தேனைச் சேகரிக்க முடியாது. தேனில் சருக்கரைச் சத்து அதிகமுள்ளது. சித்த மருத்துவத்தில் பற்பங்களையும் சூரணங்களையும் குழப்பித் தின்ன உதவும் கூட்டுப்பொருளாகத் தேன், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் தேனுக்கே முதலிடம். அது கிட்டாதபோதே கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தச் சொல்கின்றனர். இஞ்சியைத் தோல்நீக்கிக் குறுக நறுக்கித் தேனில் ஊறவைத்துத் தின்றால் உடல் வலுப்பெறும். பேரீத்தம்பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தின்றால் உடலுக்கு இரும்புச்சத்துக் கிடைக்கும்.
சந்தையில் புட்டில்களில் அடைத்துத் தேன் என்று கூறி விற்கப்படுவதில் சருக்கரைப் பாகு கலந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆதலால் தூய தேன் வேண்டுமென்றால் நாமே காட்டுக்குச் சென்று தேடிப்பார்த்து எடுக்க வேண்டும்.
பொதுவாக இனிப்புச் சுவை மனத்தை மகிழ்விக்கும். உடலில் சூட்டை உண்டாக்கும். இதனால் உடல் சுறுசுறுப்பாகும். வேலைசெய்யும் திறன் கூடும். தேனையுண்ட வண்டும் ஈயும் எறும்பும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக் காரணம் இதுதான்போலும். தேனுண்டால் சளி, வாய்க்கசப்பு, சோர்வு, களைப்பு ஆகியன நீங்கும். தூய தேன் துளியைத் தண்ணீரில் விட்டால் அத்துளி கரையாமல் நீரின் டிப்பரப்புக்குச் செல்லும்.

விளம்பரம்


தேனீக்கள் சுறுசுறுப்புக்கும் உழைப்புக்கும் பகிர்ந்துண்ணும் கூட்டுவாழ்க்கைக்கும் பெயர்பெற்றவை, எடுத்துக்காட்டாகத் திகழ்பவை. உழைத்துத் தேடிய பொருளை ஓரிடத்தில் சேர்த்துவைத்துப் பகிர்ந்துண்பவை. எளியவன் உயர்ந்தவனிடத்தில் பொருளை இரக்கும்போது ஈயென்பான். தம்மையொத்தவர்களிடம் இரக்கும்போது தாவென்பான். தம்மினும் எளியவர்களிடம் இரக்கும்போது கொடுவென்பான். தேனீயிடம் நாம் தேனீ என்று கூறுவது எளியவன் உயர்ந்தவனிடத்தில் இரப்பதையொக்கும். தேனீக்களிடம் ஈயும் ஈயும் என்றால் அவை எளிதில் ஈயா. கம்பெடுத்துத் தட்டிக் கலைத்துவிட்டுவிட்டே தேனை எடுக்க முடியும். அது பிறருழைப்பைக் கவருஞ் செயலாகும். இருப்பினும் தேனைத் தேனீயிடமிருந்து நாம் இரந்ததாகக் கருதலாம்.
தேனீக்கள் தம் முதலை அடுத்தவர் களவாடவிடாமல் கடுமையாகக் கொட்டும். தம் பொருளை அடுத்தவர் கவர்ந்தால் யாருக்கும் சினமெழுவது இயல்பே. அப்படிக் கொட்டிவிட்டது என்றதும் சினங்கொண்டு நாயும்பேயும் போன்ற சில தீயவர்கள் தீயும் கையுமாய் வந்து தீக்கொளுத்திவிட்டால் ஈயும் தீயும். காடுகளும் எரியும். தீக்குள் சிக்குண்ட விலங்குகளும் கரியும். இப்படித்தான் தேனீக்கள் பேரழிவின் விளிம்பில் உள்ளன.
முப்பதாண்டுகளுக்கு முன்பு பனைகளிலும் உடைகளிலும் வேலிகளிலும் முட்கூட்டங்களிலும் மட்டைக்கூட்டங்களிலும் தேன்கூடுகள் நிறைந்திருந்தன. இப்போது அவைகளும் இல்லை. தேன்கூடுகளும் இல்லை. ஏனென்று வினவினால் பல விடைகள் கிட்டுகின்றன.

காடுகளை ஆட்கள் தீவைத்துக் கொளுத்துவது, மரங்களை வெட்டியழிப்பது, பயிர்களுக்குப் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது, தொலைத்தொடர்புக் கோபுரங்கள் நிறுவுவது போன்றவை தேனீக்களின் அழிவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. வயல்களில் பயிர்களுக்குப் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும்போது அந்த வாடையைக் கொஞ்சநேரம் மோந்தாலே நமக்குத் தலைச்சுற்றும் மயக்கமும் வருகிறது. ஐம்பது கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட மனிதருக்கே தலைச்சுற்றும் மயக்கமும் வந்தால் சிறு ஈயினமான தேனீ எப்படித் தாங்கும் பூச்சிகொல்லி மருந்து வாடையை? மருந்து தெளிக்கிறார்கள் என்றறியுமா வண்டினம்? தேனுறிய வந்து உயிர்விடுகின்றது. மருந்திலுள்ள நச்சு உடனடியாகப் பூச்சியினங்களை அழிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாகப் பயிர்களில் தங்கி அதில் வந்தமரும் பூச்சியினங்களையும் கொல்லும். பயிர்களுக்குத் தீங்குசெய்யும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கத் தெளிக்கும் மருந்து நன்மைசெய்யும் பூச்சிகளான சிலந்தி, பொறிவண்டு, எறும்பு, கடலை வண்டு, வண்ணத்துப்பூச்சி, பக்கி போன்றவற்றைக் கொல்கிறது. தேன்சிட்டு முதலிய பறவைகளும் இதனால் மாய்கின்றன.
பூச்சிக்கொல்லி மருந்தைப் பயிர்களுக்குத் தெளிக்கும்போது அது காற்றில் பரவி அதை மோக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பலவகை நோய்களையும் மரபணுக் குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களில் சிறார்ப்பருவத்திலேயே பருவமெய்துவதும் இளமையிலேயே மலடாவதும் போன்றவை நிகழ்கின்றன. மனிதர்களையே மலடாக்கும் மருந்து பூச்சியினங்களைப் பூண்டோடு அழித்துவிடாதா?
எண்டோசல்பான் மருந்து மனித உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று பட்டறிந்ததால் அதற்குத் தடைவிதிக்கும்படி அறமன்றத்தில் வழக்காடுகிறோம். நம்மைப்போல் பிறவுயிர்களையும் கருத வேண்டும். தேனீயைக் கொல்லக்கூடிய மருந்துகளை நாம் பயிருக்குத் தெளிக்காமல் இருக்க வேண்டும்.

பூச்சியினங்களின் அழிவு பல்லுயிர்களின் அழிவுக்கும் தொடக்கம். எப்படியெனில் உலகின் முதனிலை உணவு விளைவிப்பனவான புல், பூண்டு, செடி, கொடி, மர வகைகள் முளைத்துத் தளிர்த்துத் தழைத்துச் செழித்து வளர்ந்து பூத்துக் காய்த்து விளைந்தால்தான் விலங்குகளின் உணவான கிழங்கு, கரும்பு, கீரை, பூ, நெல், புல், காய், கனி, வித்துப் போன்றவை கிடைக்கும். இந்த உணவுகள் கிடைக்காதபோது விலங்குகள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் இறக்க நேரிடும்.  அந்த விலங்குகளை உண்டு வாழும் விலங்குக்கும் இரை கிடைக்காது. இந்த விலங்குகளின் கழிவுகள் இல்லாவிட்டால் மரஞ்செடிகொடிகளுக்கு உரம் கிடைக்காது. பூவிலுள்ள தேனையுறிந்து வாழும் வண்டினங்களும் ஈயினங்களும் மரம், செடி, கொடி போன்றவை இல்லாவிட்டால் மாளும். அவை தேனுறியாவிட்டால் மரம், செடி, கொடி போன்றவற்றில் அயல்மகரந்தச் சேர்க்கை நிகழவியலாமல் காய்ப்புக் குறையும். இப்படி உலகின் பல்லுயிர்களும் அழியும் நிலை உருவாகும்.

நிலைத்திணை(தாவரங்)கள் உயிரினப் பெருக்கத்திற்கு இடம்விட்டு இடம் நகர முடியாது. அதனால்தான் ஈ, எறும்பு, வண்டு, பூச்சி, பறவை ஆகிய இனங்கள் ஒவ்வொரு நிலைத்திணை(தாவரங்)களுக்கும் ஊர்ந்தும், தாவியும், ஆய்ந்தும், பறந்தும் சென்று அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
மா, கொய்யா, பலா, வாழை, பருத்தி, கத்தரி, தக்காளி, வெண்டை, சீனியவரை  போன்ற பயிர்கள் தன் மகரந்தச் சேர்க்கையால்  காய்ப்பன. ஆனால் பனை, பப்பாளி போன்றவை அயல்மகரந்தச் சேர்க்கையால் காய்ப்பன. தென்னையும் படர்கொடிப் பயிர்களும் ஆண்பூக்களையும் பெண்பூக்களையும் பெற்றிருந்தபோதிலும் அயல்மகரந்தச் சேர்க்கையால்தான் பூக்களில் கருப்பிடிக்கிறது. இவற்றின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கு ஈ, எறும்பு, வண்டு, பூச்சி, பறவை ஆகிய இனங்கள் உதவுகின்றன. ஏற்கெனவே அலகு(ஆண்)பனைகள் பெருமளவில் வெட்டப்பட்டுவிட்டதால் பருவப்(பெண்)பனைகள் ஊமங்காழிகளாகக் காய்க்கின்றன. ஊமங்காழிகள் என்பவை கொட்டையில்லாத மலட்டுக் காய்கள்.
நெல்லைத் தின்னும் மயில், சோளக்கதிரைத் தின்னும் கிளி, காக்கை, புறா போன்றவற்றைத் தவிர வேறெந்தப் பறவையும் பயிரினங்களை அழிப்பதில்லை. பயிர்களுக்குத் தீங்குசெய்யும் புழு, பூச்சி, பூஞ்சை முதலியவற்றை உண்ணவே எறும்பு, சிலந்தி, பறவை போன்றவை வருகின்றன. பூக்களிலுள்ள தேனையுண்ணவே வண்டும் ஈயும் வண்ணத்துப்பூச்சியும் வருகின்றன. நன்மை செய்பவையான இவற்றால் பூக்கள் கருப்பிடிக்கின்றன.
தீங்குசெய்யும் புழுக்கள் பயறுகளின் பரல்களைத் தின்றுவிடுகின்றன. புழுக்கள் காய்களினுள்ளே சென்று அவற்றைத் தின்று சூத்தையாக்குகின்றன. அவற்றைக் கொல்ல மருந்து தெளிக்கும்போது காய்களினுள்ளே ஒளிந்திருக்கும் இவை உடனடியாகச் சாவதில்லை. தப்பி விடுகின்றன. ஆனால் குற்றமற்ற, பயிருக்கு நன்மை செய்யும் இனங்கள் சாகின்றன. அதிலும் கொடிய சாவு தேனீக்களுக்குத்தான்.
தொலைத்தொடர்புக் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களாலும் தேனீ, வண்டு, பறவை ஆகிய இனங்கள் அழிவதாகக் கூறுகின்றனர்.

முந்தியெல்லாம் காடுகளில் பெரியபெரிய தேன்கூடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் சுளகு அகலம் இருக்கும். தேன்கூடுகள் கட்டுவதற்கு ஏற்றவிடங்களாகப் பனை, உடை, வேம்பு, மட்டைக்கூட்டம், பருத்திமாற்றுக்கட்டு, வாழ்முள்வேலி, இடுமுள்வேலி போன்றவை இருந்தன. இப்போதெல்லாம் வாழ்முள்வேலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இடுமுள்வேலியும் அமைக்கப்படுவதில்லை. முட்கம்பி வேலிகளே அமைக்கப்படுகின்றன. மட்டைகளையும் யாரும்  கூட்டமாக அடைவது கிடையாது. மட்டைகளைத் தீவைத்துக் கொளுத்திவிடுகின்றனர். பருத்தி, மிளகுசெடி போன்றவற்றின் மாறுகளை வயலில் உழவுக்காலுக்குள் மடக்கி உழுதுவிடுகின்றனர். இதனால் இப்போது தேன்கூடு கட்டுமிடங்களும் குறைந்துவிட்டன.
தேனீக்கள் பதநீர், பனம்பூ, மாம்பூ, வேப்பம்பூ, வாழைப்பூ, உடம்பூ, பருத்திப்பூ, கத்தரிப்பூ, தக்காளிப்பூ போன்றவற்றிலிருந்து தேனுறியும். இப்போது மரங்களையும் பனைகளையும் வெட்டியழித்துக் கொண்டிருப்பதால் தேனீக்களுக்குத் தேனுங்கிடைப்பதில்லை, கூடுகட்ட இடங்களுங் கிடைப்பதில்லை. தேனுறிய வயற்காட்டைத் தேடியலைய வேண்டியதாகிவிட்டது. வயற்காட்டுக்குப் புகலிடந் தேடிவந்த ஈக்களைச் சுடுகாட்டுக்கு அனுப்புவதற் கென்றே பூச்சிகொல்லி மருந்து தெளிக்கின்றனர் உழவர்கள்.
உலக வெப்பநிலை உயர்வு, மரஞ்செடிகொடிகள் குறைவு, காடுகள் தீவைத்துத் தீய்ப்பு, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பு, தொலைத்தொடர்புக் கோபுரங்களின் கதிர்வீச்சு ஆகியவற்றால் தேனீயினம் விரைவாக அழிந்துவருகிறது. அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்படுகின்றன. இதன் விளைவு உலக உயிரினச்சூழலில் சிக்கலை உண்டாக்கும். மரங்களுஞ் செடிகளும் பூக்கும். காயா. காய்த்தாலும் உதிரும். விளைச்சல் குறையும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும். மருந்துக்குக்கூடத் தேன் கிடைக்காது.
தேன்கூட்டைக் கட்டுவதற்குத் தேவையான மெழுகைச் சகதியிலிருந்து தேனீ எடுக்கும். முன்னர்க் குளங்கள், வாய்க்கால்கள், தோட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கூடுகட்டுவதற்குத் தேவையான மெழுகைத் தேனீக்கள் எடுத்தன. இப்போது வாய்க்கால் முதலியவை கற்களாலும் சாந்தாலும் கட்டப்படுகின்றன. கழிவுநீருக்குக்கூடக் கால்வாய்கள் கட்டப்படுகின்றன. இதனால் அவற்றில் மண்ணாலான சகதி இராது. இதனால் இப்போது மெழுகு எடுக்குமிடங்களும் குறைந்துவிட்டன.

உலகில் வாழும் பல்லுயிர்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. தேனீக்கள், பூக்கும் மரம், செடி, கொடிகளைச் சார்ந்திருக்கின்றன. மரம், செடி, கொடி ஆகியவை மண்ணையும் நீரையும் உரத்தையும் சார்ந்திருக்கின்றன. மனிதர்களும் விலங்குகளும் தங்கள் உணவுக்கு மரம், செடி, கொடிகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றனர். இந்த உயிர்த்தொடர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி அற்றுப்போனால் பிற கண்ணிகளும் அற்றுப்போகுஞ் சூழல் உண்டாகும். ஆகையால் பூச்சி, ஈச்சி என்று எளினமாய் எண்ணாமல் அவை உலகத்தின் உயிர்மூச்சு என்று எண்ண வேண்டும்.

தேனீக்களைக் காக்க வேண்டுமெனில் மரங்களை வளர்க்க வேண்டும். இப்போது இருக்கும் மரங்களையும் வெட்டாமல் காக்க வேண்டும். மரம், செடி, கொடி ஆகியவற்றின் கழிவுகளைத் தீக்கொளுத்தாமல் மட்கிப் போகச் செய்ய வேண்டும். பயிர்களைக் காக்கப் பூச்சிகொல்லி மருந்தைத் தெளிக்காமல் இருக்க வேண்டும். மருந்து தெளிக்காவிட்டாலும் பயிர் நன்றாக விளையும் என்னும் உண்மையை உழவர்கள் உணர வேண்டும். ஈக்களுக்கு நிகழும் இறப்பு அடுத்து நமக்கு என்பதை மனிதர்கள் உணர்ந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சூழல்காப்பில் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனங்களும் இந்த உண்மையை உழவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

உலகில் மனிதன் துய்க்க எத்தனையோ கோடி இன்பங்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து துய்க்க வேண்டுமானால் மரங்களை வளர்ப்போம்தேனீக்களைக் காப்போம்; பயிர்களை வளர்ப்போம்; உயிர்களைக் காப்போம்.

சே.பச்சைமால்கண்ணன்