புதன், 8 ஏப்ரல், 2026

மானமும் தொழிலும் காக்க அறிவும் அறுவாளும் உதவும்



சாத்தான்குளம் ஜெயராஜையும், அவர் மகன் பென்னிக்சையும் காவல்நிலையத்தில் ஈவிரக்கமின்றி அடித்துக்கொன்ற காவல்துறையைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்த செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளியைக் காவல் சைக்கோ கோழையன் துப்பாக்கியால் சுட்டு இரண்டு கால்களையும் முடமாக்கி அட்டூழியம் செய்துள்ளான்.

தமிழ்நாடு அரசு மரம் எனக் கூறப்படுவது பனை. அதன் வேர் முதல் ஓலை வரை அனைத்துமே மக்களுக்குப் பயன்படுவது. இந்த ஓலையில்தான் பழந்தமிழரின் சங்க இலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்த மருத்துவக் களஞ்சியங்கள், வானியல், கட்டுமானக் கலை நூல்கள், நிகண்டுகள் எழுதப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன.
நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவற்றைத் தின்றவர்களுக்கு அதன் சுவையும் நன்மையும் தெரியும்.
அதேபோல் பனையில் கிடைக்கும் அருமருந்தாகவும் தேவாமிர்தமாகவும் கருதப்படுவது பதநீர். தேவாமிர்தம் என்று சும்மா சொல்லிவிட முடியாது. அதைக் குடித்துப் பார்த்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். இத்தகைய பதநீரை இறக்குவது ஒரு நாள் இருநாள் வேலை இல்லை. சிறாயுள்ள பனையில் நெஞ்சுத்தோல் கிழிய ஏறிப் பாளைக்குக் கீழ் உள்ள மட்டைகளை அறுத்து மேல்மட்டைகளில் உள்ள கருக்குகளை இணக்கிவிட்டு மட்டையில் அமர்ந்துகொண்டே தலைகீழாகத் தொங்கிப் பாளையின் நுனியைச் சீவிக் கடிப்பைக் கொண்டு இடுக்கி, அதேநேரம் அது காய்ந்து போகாமல் ஓலையைச் சுற்றிக் கட்டினால் பாளையின் நுனியில் சொட்டுச்சொட்டாக விழுவது கள். ஆம். பனம்பாளையில் இருந்து எந்தக் கலப்படமும் இன்றிக் கலயத்தில் சேகரிக்கப்படுவதுதான் கள்.
கலயத்துக்குள் நீற்றுச்சுண்ணாம்புப் பொடியைக் கலக்குமட்டையால் தடவி வைத்தால் சொட்டுச் சொட்டாக விழும் கள் சுண்ணாம்புடன் வினைபுரிந்து இனிமையாகிறது. அதுதான் பதநீர். பெயருக்கேற்றாற்போன்று சுண்ணாம்பால் பதப்படுத்தப்பட்ட கள்தான் பதநீர். பாளையின் எண்ணிக்கை, பனையின் செழிப்பைப் பொறுத்து ஒரு பனையில் இரண்டு கலயங்கள் முதல் பத்துக் கலயங்கள் வரை கட்டிப் பதநீரைச் சேகரிக்கலாம். ஒரு நாளைக்குக் காலை மதியம் மாலை என மூன்று நேரமும் பனையில் ஏறிப் பாளையின் நுனியைச் சீவிவிட்டால்தான் பதநீர் சொட்டுப்போடும். இல்லாவிட்டால் காய்ந்து பதநீர் சுரப்பது நின்றுவிடும். இப்படி ஒரு நாள் முழுவதும் விழுந்த துளிகள் சேர்ந்து சில கலயங்களில் கால்வாசியோ அரைவாசியோ நிறைந்திருக்கும். ஒருசில கலயங்கள் நிறைந்து கீழே சிந்தியும் இருக்கும். இது பனையின் செழிப்பைப் பொறுத்தது.
கள் இனிப்பு புளிப்பு துவர்ப்பு ஆகிய மூன்று சுவையும் உடையது. பதநீர் காலையில் இறக்கியதும் இனிக்கும். நேரம் செல்லச் செல்லச் சளிக்கும். அப்படிச் சளிப்பதற்கு முன் அதைத் தாழியில் ஊற்றி இரண்டுமணி நேரத்துக்கு மேல் அடுப்பில் வைத்துக் காய்த்தால் கூழ்ம நிலையை அடையும். அது கூழ்ப்பதநீர். அதனுடன் சில ஆமணக்கு முத்துக்களை இடித்துத் தூவினால் பாகுநிலையாகி உறைநிலைக்கு வரும். உறைநிலைக்கு வருமுன் ஓட்டைச் சிரட்டைகளில் பாகை ஊற்றினால் அது உறைந்து கருப்பட்டியாகும். சர்க்கரை நோயாளிகளும் அச்சமின்றித் தின்னும் பண்டம் இந்தக் கருப்பட்டி. கரும்புச் சர்க்கரை வருமுன்னும் வந்த பிறகும் தமிழ்நாட்டில் பணியாரம், புட்டு, களி, அச்சுமுறுக்கு, அதிரசம், கொழுக்கட்டை என அனைத்துப் பண்டங்களுக்கும் இனிப்பூட்டியது இந்தக் கருப்பட்டி. எண்பதுகளிலும் தொண்ணூறு வரையும் கரும்புச்சீனியைவிடக் குறைந்தவிலைக்குக் கிடைத்த இந்தக் கருப்பட்டி இன்று அரிதாகிப் போன அரிய பண்டங்களில் ஒன்றாக உள்ளது. இன்று ஒரு கிலோ சீனி 45 ரூபாய், ஒரு கிலோ கருப்பட்டி 450 ரூபாய்.
இனிமையான கருப்பட்டியின் விலை இந்த அளவுக்கு உயரக் காரணம் அது கிடைத்தற்கரிய பொருளாக மாறிவிட்டதுதான். ஒரு காலத்தில் திருநெல்வேலி (இன்றைய தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் உள்ளடங்கிய) மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் பனங்காட்டில் கோடைக்காலத்தில் காலையிலேயே எங்குச் சென்றாலும் பதநீர் காய்க்கும் மணமும், கூழ்ப்பதநீர் மணமும் நிறைந்திருக்கும். இப்படி நிறைந்திருந்த செழித்திருந்த இந்தத் தொழில் அரிதாகிப் போனதற்குக் காரணம் தமிழ்நாடு அரசு தான்.
சாராய ஆலை முதலாளிகளிடம் கோடிகோடியாகப் பணம் பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளும், சாராய ஆலைகளையே வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசின் கொள்கையைத் தங்களுக்கு ஏற்றதாக மாற்றிக் கள்ளுக்குத் தடை விதிக்கச் செய்தனர். இது நிகழ்ந்தது இன்றைக்கு நாற்பதாண்டுக்கு முன்பு. 1987ஆம் ஆண்டு சனவரி முதல் நாளில் அப்போதைய அதிமுக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் தான் கள்ளுக்குத் தடை விதித்தார்.
அன்று முதல் இன்று வரை உலகிலேயே கள்ளுக்குத் தடை விதித்துள்ள ஒரே நாடு தமிழ்நாடுதான்.
பனங்கள் ஓர் உணவு, சித்தமருந்து, கோடைக்காலத்தில் உடலுக்குக்குக் குளிர்ச்சி தருவது என்பதையெல்லாம் உணர்ந்த பின் அறிந்த பின் இவ்வாறு தடை விதித்துள்ளதில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது. அது உள்நாட்டுத் தொழில்களை அழிப்பதும், பனையேறும் நாடார்குல மக்களின் பொருளாதாரத்தை வீழ்த்துவதும் என்பதே அது.
2003ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சில்லறை விற்பனைச் சாராயக் கடைகளை மாநில அரசே நடத்தி வருகிறது. இப்படிச் சாராயக் கடை நடத்தும், சாராய ஆலை நடத்தும் இழிவான ஆட்சியாளர்களுக்குக் கள்ளுக்குத் தடை விதிக்க என்ன தகுதி உள்ளது?
இதற்கு முன் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். பனையேறும் தொழிலாளி ஒருவர் முழுவதும் பதநீரை இறக்கியோ, முழுவதும் கள்ளை இறக்கியோ ஆண்டு முழுவதும் தொழில் செய்ய முடியாது. வடகிழக்குப் பருவமழை ஓய்ந்த பின் தைமாதத்தில் பனைகளில் பாளைகள் வரத்தொடங்கும். அப்போது தொடங்கும் பதநீர்ப் பருவம் ஆடி இறுதி வரை நீடிக்கும். ஆனால் ஒரே பனை இப்படி ஆறுமாதம் எட்டு மாதத்துக்குப் பதநீர் தராது. முதலில் பாளை வரும் பனையில் மூன்று நான்கு மாதங்கள் பதநீர் வரும். பிந்திப் பாளை வரும் பனையில் அந்த நாளில் இருந்து மூன்று நான்கு மாதங்கள் நீடிக்கும். இடையில் கோடையில் காற்று அதிகம் வீசும் காலத்தில் சீவிய பாளைகள் அடிக்கடி காய்வதாலும், வெப்பமும் காற்றும் நீராவிப்போக்கை உண்டாக்குவதால் பதநீர் அளவு குறையும். தென்மேற்குப் பருவமழை பெய்துவிட்டால் மழைநீர் கலயத்தில் நிறைந்து பதநீர் இனிப்பில்லாமல் குடிக்கவும் காய்க்கவும் முடியாமல் போகும்.
இதனால் பனைத்தொழிலாளர் ஐம்பது பனையேறினால் தங்கள் சொந்தப் பனையில் உள்ள பதநீர் எந்நாளும் தங்களுக்கே எடுத்துக்கொள்வர். அடுத்தவர் பனையை ஏறினால் ஒருநாள் உரிமையாளருக்கும் மறுநாள் பனை ஏறுபவருக்கும் என்று ஒருநாள் விட்டு ஒருநாள் பதநீர் கிடைக்கும். இதனால் அன்றாடம் குடித்தது, விற்றது போகக் கருப்பட்டி காய்ப்பதற்குக் குறிப்பிட்ட அளவு பதநீர் பயன்படுத்தப்படும். இதுபோக ஒன்றிரண்டு பனைகளில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் குடிப்பதற்காகக் கள் இறக்குவதுண்டு.
பத்தாயிரம் சாராயக் கடைகளையும், அதன் கிளைகளாக முப்பதாயிரம் குடி விடுதிகளையும் திறந்து வைத்துச் சாராயம் விற்கும் அரசுக்குப் பனையேறிகள் இறக்கும் கள்ளை நச்சுக்கள் என்று சொல்ல எந்தத் தகுதியும் கிடையாது. கள்ளை ஒருவன் பெரும்பாடுபட்டு இறக்குகிறான். அதைக் குடிக்கிறான். மீதமிருந்தால் இலவசமாகக் கொடுக்கிறான். காசுக்கே விற்றுவிட்டுப் போகிறான். நன்றாக இருந்தால் வருகிறவன் குடித்துவிட்டுப் போவான். தரமில்லை என்றால் புறக்கணிப்பான். இதுதான் சந்தைப் போக்கு. வணிக நிலைமை. இதை அறியாமல் நச்சுக் கள்ளென்று கூறுவது ஆட்சியாளர்களின் நச்சு மூளையில் உதித்த நயவஞ்சக உத்தி. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசும்போது அவைத் தலைவர் அப்பாவு உள்ளிட்ட நச்சர்கள் இப்படி நச்சுக்கள் என்றுகூறி நஞ்சைக் கக்கினர்.
இந்தக் கள்ளும் பதநீரும் பாளை இருக்கும் வரைதான். அதன்பின் பாளை காய்த்துவிடும். பெண்பனையாக இருந்தால் நுங்கு, பனம்பழம் காய்க்கும். பழங்கள் பழுத்து உதிர்ந்ததும் பனையேற்று முடிவுக்கு வரும். முன்பெல்லாம் வீட்டுக் கூரைகளுக்கு வேய்வதற்கு ஓலை வெட்டுவர். அந்த ஓலையைப் பணியவைக்க மிதித்திருக்கும்போது மட்டையில் இருந்து அகணிநார் உரித்துச் சேர்த்து வைப்பர். அந்த நார்தான் புகழ்பெற்ற நார்க்கட்டில் கட்டப் பயன்படுகிறது.
பெட்டிகள் முடைவதற்குக் குருத்தோலைகள் வெட்டுவர். இப்போது அதுவும் இல்லை. கூரைக்காக ஓலை வெட்டுவதும் இல்லை. இதனால் வரும் ஓலைகள் எல்லாம் பழுத்துக் காய்வோலைகளாக உதிர்ந்து விழுகின்றன. அவற்றை எடுத்து எரிபொருளாகப் பயன்படுத்தக் கூட ஆளில்லை. மட்கியும் கறையான் அரித்தும் மண்ணுக்கு உரமாகிறது.
பழுத்த பனம்பழங்களை வெட்டவும் ஆளில்லை. தானாக உதிர்ந்தால் எடுத்துக் குழியில் போட்டுக் கிழங்கு பிடுங்குகின்றனர். ஊருக்குப் பத்து இருபது பனையேறிகள் இருந்த நிலையில் அந்தத் தொழிலைப் பெரிதும் வளர்த்தெடுத்து உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கத் துப்பில்லாத திருட்டுத் திராவிடத் திமுக அதிமுகவினர், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று கூறி உள்நாட்டில் கொள்ளையடித்த பணத்தையே வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்து பெரும் ஆதாயம் அடைகின்றனர்.
இன்னொருபுறம் நலத்திட்டங்களுக்கான வருவாய் என்று கூறிப் பத்தாயிரம் சாராயக் கடைகளைத் திறந்து வைத்துத் தமிழர்களின் மூளையை மழுங்க வைத்துத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து ஊழல் செய்யும் திராவிட அரசுகள் பனைத் தொழிலை முற்றாக அழித்துவிட்டனர். அது ஒருநாள் இருநாள் கதையல்ல. நாற்பதாண்டுகளாக நாள்தோறும் நடைபெறும் நயவஞ்சகச் செயல். தமிழர்களும் சட்டத்தை மதிப்போம் என்ற பெயரில் அந்த வஞ்சக வலையில் வீழ்ந்து எதிர்ப்பின்றி மானமின்றித் தொழிலையும் பொருளாதாரத்தையும் இழந்து உழன்று வருகின்றனர்.
முன்பு சொன்னதுபோல் சுண்ணாம்பால் பதப்படுத்தப்பட்ட பதநீரும் காலை ஆறு மணிக்கு இறக்கினால் ஒன்பது மணிக்குள் குடிக்க வேண்டும், அல்லது காய்த்துக் கருப்பட்டியாக்க வேண்டும். இல்லாவிட்டால் பத்து மணிக்குச் சளிக்கும், 12 மணிக்குப் புளிக்கும், பிற்பகல் மூன்று மணிக்குக் கள்ளாகிவிடும். இந்த உண்மைகளைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் சட்டமன்றத்தில் அவைத் தலைவர் உட்பட இருவர் நயவஞ்சகத்துடன் நஞ்சை உமிழ்ந்ததைக் காணொலியில் நாம் பார்த்தோம்.
சமூக ஊடகங்கள் பெருகி எத்தகைய செய்தியென்றாலும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவும் தொழில்நுட்பமுள்ள இந்தக் காலத்திலேயே இப்படி நஞ்சைக் கக்குகிறார்கள் என்றால், எண்பதுகளின் இறுதியில் ஆட்சியாளர்களும் அவர்களின் ஏவல்நாய்களான காவல்துறையினரும் எப்படி இருந்திருப்பர் என்பதை ஊகித்துப் பார்த்தால் அதன் கொடுமனமும் கொடுங்கோன்மையும் தெளிவாக விளங்கும்.
மதுவிலக்குத் துறை என்ற பெயரை வைத்துக் கொண்டு மதுவிற்பனையைச் செய்யும் இந்த அரசுதான் காவல்துறையில் மதுவிலக்குப் பிரிவு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு ஊர்ஊராகச் சென்று பனையேறிகளைத் தொழில்செய்யவிடாமல் கள்ளிறக்கியதாகக் கூறிப் பிடித்துக்கொண்டு வண்டியில் முறுக்குத்தடி அறுவாள்பெட்டி, தளைநார், கலக்குமட்டை, குடுவை, கலயம், பானை ஆகிவற்றுடன் ஏற்றிக்கொண்டு செல்லும். நாலைந்து நாள் தொடர்ந்து பனம்பாளையைச் சீவாமல் விட்டால் பாளை வளர்ந்துவிடும் காய்த்துவிடும். அதன்பிறகு அதிலிருந்து பதநீர் இறக்க முடியாது. வழக்குகளில் பிடிபடும் பனைத்தொழிலாளி அதிலிருந்து மீண்டுவருவதற்குள் பனம்பாளைகள் காய்த்துவிடும்.
இதை உணர்த்தும் திருக்குறள் ஒன்றும் உள்ளது.
அது,
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் - திருக்குறள் (அதிகாரம் 104 உழவு, குறள் எண் 1039)
பனைத்தொழிலாளி கள்ளிறக்குவதாகக் கூறிப் பொய்வழக்கில் காவல்துறையினர் ஒருமுறை பிடித்துச் சென்று ஒருவாரம் சிறைவைத்தால் அவர் இந்தப் பனையேற்றுப் பருவத்தில் இதுவரை செய்த முயற்சிகள், உழைப்பு எல்லாம் வீணாகிவிடும். இனிப் புதிதாகப் பாளை வரும் பானையில் மட்டையை அறுத்துப் பாளையை அறுத்துப் பதப்படுத்திப் பதநீர் இறக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். இது எத்தகையதொரு புனிதமான வேலை. உயர்ந்த அரிய கலை. வறட்சிக்காலத்திலும் உலக உயிர்களுக்கு உணவளிக்கும் கலை. இந்த உலகின் மற்ற நாடுகளில் இந்தக் கலையும் தொழிலும் இருந்தால் பொன்போல் போற்றி மகிழ்ந்திருப்பர்.
கயவர்களும் முட்டாள்களும் வஞ்சகர்களும் ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் இருந்ததால் மதிப்பில்லாமல் அழிந்துபோகும் நிலையில் உள்ளது. அதைவிட வருந்தத் தக்கது இந்தத் தொழிலை மிகவும் இழிவாகப் பார்க்கின்றனர். சாராயம் விற்பது, கஞ்சா விற்பது, சிறுநீரகத்தைக் களவாடி விற்பது, கருமுட்டையைக் களவாடி விற்பது ஆகியவற்றை இழிதொழிலாகப் பார்க்கவில்லை. பனையேறி ஓலை வெட்டுவது, நுங்கு வெட்டுவது, பதநீர் இறக்குவது, கள் இறக்குவது இழிவாகப் பார்க்கப்படுகிறது. பிறகு இங்கே உள்நாட்டுத் தொழில் எப்படி வளரும்?
இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் நான் முன்பு கூறியதுபோல் ஒருவர் தான் குடிப்பதற்காக இறக்கிய கள்ளையே அவருக்கு எதிராகப் பயன்படுத்துவதுதான். தானே குடிப்பதற்கு இறக்கிய கள் எப்படி நச்சுக் கள்ளாகும்? இதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதுபோக அவர் இறக்கியது பதநீராகவே இருந்தாலும் அதை வண்டியில் ஏற்றிப் பல ஊர்களுக்கும் சுற்றிவிட்டுப் பிற்பகலில் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்தும்போது அது கள்ளாகிவிடும். அவர்களுக்குத் தேவையான சான்று கிடைத்துவிடுகிறது. இந்தக் கள்ளைக் குறைசொல்லக் காவல்துறையினரும் வருவாய்த்துறை நீதித்துறை அதிகாரிகளும், திராவிட ஆட்சியாளர்களும் ஒன்றும் திருவள்ளுவரும் காந்தியும் கிடையாது. காவல்துறையினர் சாராயக்கடைக்காரனிடமும், அதைப் பதுக்கி வைத்து விற்பவனிடமும் மாதந்தோறும் அல்லது அடிக்கடி என்ற வகையில் பணம் வாங்குபவர்கள். வருவாய்த்துறையினர் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராயக் கடைகளை ஆள்பவர்கள். சாராயக் கடைகளை அடைக்க வேண்டும், முழு மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும், கள்ளுக்கு விதித்த தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தால் அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்று கூறிச் சமூகப் பொறுப்பில் இருந்து விலகிப் போகிறவர்கள்தான் நீதித்துறையினர்.
திராவிட ஆட்சியாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். முதலில் சாராயக் கடைகளை ஏலம்விட்டுக் காசு பார்த்தனர். பின்னர் சாராயக் கடைகளையே நடத்தினர். பிறகு சாராய ஆலைகளில் கொள்முதலில் கமிசன் பெற்றனர். இப்போது சாராய ஆலைகளையே நடத்துகின்றனர். ஆலையில் உள்ள சரக்குகளை அரசுக்கே வருவாய் வராத அளவுக்கு அதே கடையிலேயே கள்ளத்தனமாக விற்று வருவாயைப் பல பிரிவினரும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தச் சாராயக் கடைகளுக்குக் கிளைக் கடைகளாகத் தமிழ்நாடு முழுவதும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத குடிவிடுதிகளும் சில்லறை விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை ஆளுங்கட்சியினரின் அடிவருடிகளுக்கும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வீசப்படும் எலும்புத்துண்டுகள். நாட்டின் ஒட்டுமொத்தக் கொலை, கொள்ளை, சாதி வன்முறை, பெண்கள் சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றுக்கு இந்தக் குடியே முதன்மைக் காரணமாகும்.
அதை ஒப்புக்கொள்ளாத எவரும் எளிதாகத் தாக்கும் ஒன்று கள். கள்ளுண்ணாமை என்ற ஓர் அதிகாரத்தையே வள்ளுவர் எழுதியுள்ளார் என்பர். அவர்கள் விடையளிக்க வேண்டிய பல வினாக்கள் உள்ளன.
டாஸ்மாக் என்கிற பெயரில் கடைகளைத் திறந்து சாராயம் விற்க வள்ளுவர் சொன்னாரா?
ஆற்று மணலை அள்ளி விற்க வள்ளுவர் சொன்னாரா?
மலைகளை உடைத்துக் கேரளத்தின் அதானி துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கு விற்கத் தமிழ்நாட்டுக் கனிமவளத்துறைக்கும் திமுகவின் கற்கொள்ளையர்களுக்கும் உரிமம் கொடுக்கத் திருவள்ளுவர் சொன்னாரா?
மீண்டும் கதைக்கு வரலாம். கள்ளுக்கு எதிரான வேட்டை என்று தொடங்கிய காவலர்களின் போக்கு ஏழைப் பனைத்தொழிலாளர்களிடம் அதிகார அத்துமீறலுக்கு வழிவகுத்தது. அதன் நீட்சியும் இப்போதைய ஒரு நிகழ்வும் தான் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நிகழ்ந்த காவல் வன்கொடுமை. இந்தக் கொடுமை இக்காலத்தில் தெரியவந்துள்ளது. பெரும்போராட்டத்துக்குப் பிறகு இந்தக் கொடுமை உலகறிய வந்த பிறகும் தமிழ்நாட்டு ஆளுங்கட்சி அடிவருடி ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. விஜய், திரிசா, ரஜினி, நயன்தாரா என்று நாளொரு விவாதமேடைகள் வைத்துள்ள முட்டாள் தலைமைச் செய்தி ஆசிரியர்களைக் கொண்ட தரகு ஊடகங்கள் இந்தக் கொடுமை பற்றிப் பேசவில்லை. அதனாலென்ன? நாம் அதைப் பற்றி விரிவாகப் பேசலாம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் சேட் மகன் மணிகண்டன். விவசாயியான இவர் பனையேறும் தொழிலும் செய்து வருகிறார்.
ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா. இவர் காக்கிச் சட்டையுடனும் பாயுந்துடனும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு தன்னை ரியல் ஹீரோவாகவே நினைத்துக்கொள்ளும் மனநோயாளியாக உள்ளார். இவர் பணியாற்றிய காவல்நிலையங்களில் எல்லாம் சட்டத்தை மீறிய சட்டவிரோதச் செயல்கள் நடக்கவில்லை போலும். அப்படி நடக்கும்போது அங்கே தோன்றித் தீயவர்களை வதம் செய்யும் சூரசங்கார நாயகனாகத் தன்னைச் சித்தரிக்கும் காட்சிகளையும் படங்களையும் இணையத்தளத்தில் ஏராளமாக உலவ விட்டுள்ளார். ஏற்கெனவே தென்மாவட்டத்தில் சாதி மோதல்கள் நிறைய உள்ளன. இல்லை என்று இரு திராவிடக் கட்சிகளும் ஆளும் போது சொல்லும். உண்டு என்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொல்லும். இத்தகைய சூழலில் இவன்போன்ற மனநோயாளிகள், சாதிவெறி பிடித்தவர்கள் காவல்துறையில் உள்ளது சட்டம் ஒழுங்கை மேலும் சிக்கலாக்குகிறது.
மணிகண்டன் கள் இறக்கினாரோ இறக்கவில்லையோ அதை இரண்டாவது பார்க்கலாம். தமிழ்நாடு அரசு பத்தாயிரம் கடைகளிலும், முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சில்லறை விற்பனையாளர்கள் வழியாகவும் விற்பது கோவிலில் கொடுக்கப்படும் புனிதத் தீர்த்தமா? அல்லது மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் சத்து டானிக்கா? நல்ல தெம்பும் அறிவும் உள்ளவனாக இருந்தால் தன் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் சாராயக்கடைகளை அடித்து நொறுக்கித் தீவைத்துக் கொளுத்திவிட்டு அதற்குப் பிறகு பனைபனையாகச் சென்று கள்ளைப் பிடிக்கிற வேலைக்குப் போயிருக்க வேண்டும்.
ஏழை எளியவர்கள், இயலாதவர்கள், தன்னுடைய அட்டூழியம் யாரிடம் செல்லும் என்று பார்த்துக்கொண்டு அத்தகையவர்களிடம் மட்டுமே அதைச் செய்யும் ஒரு கொடிய மனம் படைத்த அரக்கன் இந்த இசக்கிராஜா. இவன் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு மருதம்புத்தூருக்குச் சென்றுள்ளான். அப்போது பனைகளில் பதநீர் சேகரிப்பதற்காகக் கலயம் கட்டியுள்ளதைக் கண்ட இசக்கி ராஜா பனையின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று கள் இறக்குகிறாரா என்று விசாரணை நடத்தியுள்ளார்.
தொடர்ந்து மணிகண்டனையும் அவர் தந்தை பெருமாள் சேட்டையும் கலயம் கட்டப்பட்ட பனையுள்ள பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்றார். அந்த நேரத்தில் மணிகண்டனின் சகோதரரான சிவன் பொன்ராஜும், சிவனின் மகள், மகன் ஆகியோரும் தோட்டத்துக்குச் சென்றுள்ளனர். காவல்துறையினர் தனது தம்பியையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு வந்து விசாரித்ததைக் கண்ட சிவன் பொன்ராஜும் குடும்பத்தினரும் அருகில் சென்று என்னவென்று கேட்டுள்ளனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா அனைவரையும் சாதிப்பெயரைச் சொல்லி ஆபாச வசைச் சொற்களால் தரக்குறைவாக இழிவாக ஆணவத்துடன் ஏசியுள்ளார்.
மணிகண்டனைப் பனை மீது ஏறிக் கலயத்தை அவிழ்த்துக் கொண்டுவர வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்று மணிகண்டன் பனையில் மேலே ஏறிக் கொண்டிருக்கும்போது காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சாதிப்பெயரைச் சொல்லி ஆபாச வசைச் சொற்களால் பெருமாள் சேட்டையும் சிவனையும் தரக்குறைவாக ஆணவத்துடன் இழிவாக ஏசியுள்ளார்.
இதனைக் கண்ட மணிகண்டன் பனையிலிருந்து கீழே இறங்கி இசக்கிராஜாவிடம் நியாயம் கேட்டுள்ளார். நான் எப்படிப்பட்ட வீரப் பரம்பரையில் வந்தவன் பனையேறிப் பிழைக்கும் நீ என்னையா எதிர்த்துப் பேசுகிறாய் என்று ஆத்திரம் பொங்கியுள்ளது இந்த இழிந்த ராசாவுக்கு. இந்த ஆத்திரத்தில் இசக்கி ராஜா அருகில் கிடந்த கட்டையைக் கொண்டு மணிகண்டனை அடிக்க ஓங்கியுள்ளார். மணிகண்டன் அதை மடக்கிப் பிடித்ததில் இசக்கி ராஜாவின் தலையில் அடி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் மிக அருகில் நின்று நான்கு முறை மணிகண்டனை நோக்கிச் சுட்டதில் மணிகண்டனின் இரண்டு கால்களிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தன. தன் தோட்டம் வயல் பனை உழைப்பு வீடு என்று கள்ளமறியா உழைப்பாளியான அந்த இளைஞன் இனி எப்போதும் உழைக்கவே கூடாது. அவ்வளவு ஏன் எழுந்து நடமாடவே கூடாது என்ற தீய நோக்கில் மிகவும் வன்மம் கொண்டு செயல்பட்டுள்ளான் இந்த இழிந்த ராசா. வல்லநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் சென்று மணற்கொள்ளையர்கள் வெட்டிக்கொன்றபோது எங்கே போனது இவன் துப்பாக்கியும் வீரமும்?
பெரும்பற்றில் ஈனப்பையல்கள் ஒன்பது பேர் மூன்று வாகனங்களில் சென்று அப்பாவிகளை வெட்டிக்கொன்றபோது எங்கே போனது இவன் துப்பாக்கியும் வீரமும்? வேடநத்தத்தில் 12ஆம் வகுப்பு மாணவியைக் கொன்ற கயவனிடம் உன் வீரத்தைக் காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை.
இதையடுத்துக் காயமடைந்ததாகக் கூறி இசக்கி ராஜாவும் மருத்துவமனையில் உள்ளார். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்து இரண்டு கால்களும் நடக்க முடியாமல் போன மணிகண்டனையும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் அரசு உள்நாட்டுத் தொழிலை ஒழித்துக் கட்டும் முயற்சிகளில் ஒரு பகுதிதான் இது. ஆங்கிலேயர் காலத்தில் தீப்பெட்டிக்குள் அடைக்கும் வகையில் மெல்லிய மஸ்லின் துணிகளை நெய்த நெசவாளர்களின் பெருவிரலை வெட்டி அந்தத் தொழிலை அழித்ததாகக் கதை சொல்வார்கள். அதற்கும் இந்தப் பனைத்தொழிலாளியின் இரண்டு கால்களையும் துப்பாக்கியால் சுட்டு முடமாக்கிய இந்தக் கோழைத்தனமான கயவனின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
நாற்பதாண்டுக் காலத்தில் காவல்துறையின் பல்லாயிரக்கணக்கான அட்டூழியங்கள் வெளியுலகுக்கு வராமலே மறைந்தும் மறந்தும் போயிருக்கும். ஆனால் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடந்த காவல்துறைப் போர்வையில் உள்ள கயவனின் வன்கொடுமைச் செயல் மணிகண்டனின் உறவினர்களுக்கும் ஊர்மக்களுக்கும் தெரிய வரவே அவர்கள் ஆலங்குளம் முக்கூடல் சாலையில் காமராஜர் சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கேள்விப்பட்ட அகில இந்திய காமராஜர் ஆதித்தனார் கழகப் பொதுச் செயலாளர் சிங் நாடார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோசிடம் பேச்சு நடத்தினார்.
தேவை இல்லாமல் எளிய பனைத்தொழிலாளி மீது துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் சிங் நாடார் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் இரவு 7 மணி முதல் இரவு 1 மணி வரை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி கோட்டாட்சியர் வைஷ்ணவி பாலிடம் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வன்கொடுமை குறித்துக் கூறினார்.
அதனை அடுத்து இசக்கி ராஜா, காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இசக்கி ராஜா காவல்துறைப் பணியில் சேர்ந்த நாளில் இருந்து வேலை செய்த அனைத்துக் காவல் நிலையங்களிலும் சட்டத்துக்குப் புறம்பாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இதுபோன்ற செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், அதனால் இவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கே வேறொன்றையும் நாம் சொல்லியாக வேண்டும். மணிகண்டன் அவர் தந்தை பெருமாள் சேட், அண்ணன் சிவன் என மொத்தக் குடும்பத்தினரும் நினைத்திருந்தால் தங்கள் தோட்டத்தில் வந்து அட்டூழியம் செய்த இந்தக் கயவனைப் பாளை அறுவாளால் வெட்டி வீழ்த்தியிருக்க முடியும். சட்டத்தை மதிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தாலும் உயிர்களிடத்தில் ஈவிரக்கம் உள்ளதாலுமே அவர்கள் அதைச் செய்யவில்லை. ஈனப்பையலான இசக்கிராஜாவின் கையில் உள்ள துப்பாக்கி சுட்டால், உயரமான, அறுவாள் போன்ற கூர்மையுடைய கருக்குகள் உடைய பனையில் ஏறி வேலை செய்யும் பனையேறியின் பாளையறுவாள் வெட்டாதா என்ன? அது எதிர்த்து வெட்டும் நாளில் தான் காவல்துறையின் போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் இசக்கிராஜா போன்ற சாதிவெறியன்களின் கொட்டம் ஒடுங்கும் என்பது உண்மை.
பனை வளர்க்கிறோம் பனை வளர்க்கிறோம் என்று சொல்லிப் பொய்யான உறுதிமொழிகளைச் சொல்லிச் சாராயம் விற்று ஏமாற்றும் திராவிட ஆட்சியாளரும், திராவிட எதிர்க்கட்சியும் இதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதைத் தமிழர்களாகிய நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே இந்த வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தும் அதிகாரத்தைக் காவல்துறைக்குக் கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்துப் பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக கட்சியினர்தானே?" என்று சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் மக்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பனை வளர்ப்போம்! பயன்பெறுவோம்!!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!
தன்மானம் காக்கப் பாளை அறுவாள் எடுப்போம்!!!
- சே.பச்சைமால்கண்ணன், பனையேறியின் மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக