புதன், 24 ஏப்ரல், 2024

மக்களவைத் தேர்தலில் மாற்றத்தின் அறிகுறி

தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் ஏப்ரல் 19ஆம் நாள் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்மக்கள் சட்டத்தை மதித்து மக்களாட்சியில் தங்கள் கடமையை அமைதியாகச் செய்துள்ளனர். இதனால் மட்டுமே இங்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.



தொழில், பணி, கல்வி ஆகியவற்றின்பொருட்டு வெளியூரில் தங்கியுள்ள மக்கள் அங்கிருந்து சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்து வரப் போதுமான போக்குவரத்து வசதிகளைத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமும், இந்திய தொடர்வண்டித்துறையும் செய்யவில்லை. தேர்தலுக்கு முந்திய நாளில் பிற்பகலில் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே. விருதுநகர், தென்காசி, வழியாக அந்த வண்டி திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடங்கள் நிரம்பிக் காத்திருப்போர் பட்டியலில் வரிசை நீண்டது.

வழக்கமான விரைவு ரயில்களில் முன்பதிவு இடங்கள் நிரம்பி, முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நிற்கக் கூட இடமில்லாமல் மூச்சு முட்டி மக்கள் துன்புற்றனர். சென்னை பூங்காநகரில் தலைமையிடத்தைக் கொண்டிருப்பது பெயருக்குத் தான் தெற்கு ரயில்வே. வட மாநிலத்தவரின் தேவைக்காகச் சிறப்பு ரயில்களை இயக்கும் இந்தத் தெற்கு ரயில்வே, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அதற்காகச் சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலும், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, தூத்துக்குடி, மதுரை, இராமேசுவரம், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கும் பத்துச் சிறப்பு ரயில்களையாவது இயக்கியிருக்க வேண்டும்.

நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரத்தில் மட்டும் சொன்னால் போதாது. அதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். தமிழ்மக்கள் ஒன்றும் பணங்கொடுத்துப் பயணச்சீட்டு வாங்காமல் இலவசமாகப் பயணிப்பவர்கள் இல்லை. உழைத்து ஈட்டிய பணத்தைச் செலவிட்டுச் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் மானமும் கடமையும் உள்ளவர்கள். 

வழக்கமான வண்டிகளில் ஏராளமானோர் நின்றுகொண்டு சென்ற பிறகும், சென்னை எழும்பூரில் கூட்டம் அலைமோதியது. இதனால் இரவு பத்துமணிக்கு மேல் மயிலாடுதுறை வழியாகத் திருச்சிக்கு முன்பதிவில்லாச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அது எழும்பூரிலேயே நிரம்பியது. தாம்பரத்தில் ஏறியவர்கள் நின்றுகொண்டு சென்றனர். இந்த ரயில் சென்னையில் இருந்து புறநகர்ப் பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்ளூர் ரயிலாகும். இதில் கழிப்பறைகள் இல்லை. வாயிலுக்குக் கதவுகள் இல்லை. வாயிலோரம் அமர்ந்திருந்தவர்கள் பாதுகாப்பின்றிப் பயணித்தனர்.

சிறப்பு ரயிலில் திருச்சிக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் ரயில்களில் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்றாலும் அங்கிருந்து ஊருக்குச் செல்வதற்கு வாக்குப்பதிவு நாளில் போதிய பேருந்துகள் இல்லை. திருநெல்வேலிப் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூரில் இருந்து வந்த மக்கள் கூட்டம் அலைமோதியது. திசையன்விளை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்துசேரக் கொடுத்த அதே அளவுக் கட்டணத்தை ஆட்டோவுக்குக் கொடுத்துச் சொந்த ஊருக்குச் சென்றனர்.

சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்லும் மக்களின் இன்னலைப் போக்கும் வழிகளில் ஒன்று. தமிழ்நாட்டில் இரு கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது. அடுத்த முறை சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும்போது இதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தது. பாஜக வேட்பாளர் நாகேந்திரனுக்காகச் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தனர். இதையே சாக்காக வைத்துத் தமிழ்நாடு முழுவதும் இந்த முறை வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது குறைந்துவிட்டது. ஒன்று வேட்பாளர்களே பணம் வழங்கவில்லை. அவர்கள் கொடுத்தாலும் முகவர்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மொத்தத்தையும் பதுக்கிக் கொண்டனர். எப்படியோ வாக்காளர்களுக்குச் சரியாகப் பணம் போய்ச் சேரவில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியைக் காரணங்காட்டி அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செலவைக் குறைத்துக் கொண்டனர்.

பெரிய அரசியல் கட்சிகள் பணம் வழங்காததால் அதிர்ச்சியடைந்த மக்கள், அந்தக் கட்சிகளைப் புறக்கணித்துத் தாங்கள் விரும்பிய சிறு கட்சிகளுக்கு வாக்களித்திருப்பது அரசியலில் ஒரு மாற்றம் வந்துள்ளதற்கான அறிகுறியாகும். வருங்காலத்திலும் இதேநிலை தொடர்ந்தால் ஊழல் கட்சிகள் ஒழியும். மக்கள் நலம் நாடும் கட்சிகள் அரசியல் அதிகாரத்துக்கு வரும்.

தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாகத் தருமபுரித் தொகுதியில் 81 விழுக்காடும், குறைந்த அளவாக மத்தியச் சென்னைத் தொகுதியில் 54 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 69 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் மூன்று, அண்டை மாவட்டங்களில் மூன்று என 6 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்ததற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

தொலைவான வெளியூரில் உள்ள வாக்காளர்கள் ஊருக்குச் சென்றுவரப் போதிய போக்குவரத்து வசதிகள் செய்யாமை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் பணம் கொடுக்காததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வாக்களிக்கச் செல்லாமை, மத்திய மாநில அரசுகளின் ஊழல், பெருநிறுவனங்களுக்குச் சார்பான அரசின் செயல்பாடு, ஊரக மக்களின் நலன்களைக் கண்டுகொள்ளாமை ஆகியன வாக்குப்பதிவு குறைந்ததற்குக் காரணங்களாகும். இவையனைத்துக்கு மேல் கோடைவெயில் சுட்டெரித்தது முதன்மைக் காரணம். ஊர்ப்புறங்களில் மாலை 4 மணிக்கு வெக்கை தணிந்த பிறகு 6 மணிவரை ஏராளமானோர் வாக்களித்தனர். அந்தக் கடைசி நேரத்திலும் தேர்தல் ஆணையம் வழங்கிய சீட்டைக் கொண்டு வாக்களிக்க வந்தவரிடம் அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள் எனக் கூறி வாக்குப்பதிவு அலுவலர்களும், அங்குக் காவலுக்கு நின்றவரும் திருப்பி அனுப்பியது தவறான போக்கு.

சென்னையில் இருந்து மூவாயிரம் ரூபாய் செலவழித்துக் கடும் இன்னலுக்கிடையே 700 கிலோமீட்டர் பயணித்துச் சொந்த ஊருக்குச் சென்றவரை அந்தப் பெயருக்குரியவர் அவர்தானா? எனச் சரிபார்த்து வாக்களிக்க விடுவதுதானே நன்முறை. அடையாள அட்டையை எடுத்துவிட்டு வா? என்று திருப்பி அனுப்புவது வன்முறை. அம்முறையை அடுத்த முறை கைவிட வேண்டும் என்று முறையிடுகிறோம்.

சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விழுக்காடு குறைந்துள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பணம் வழங்கவில்லை என்பதற்காகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளது வருந்தற்குரியது. அதே நேரத்தில் கழுத்திலும் கையிலும் சாரைப்பாம்பு போன்ற தங்கச் சங்கிலிகளை அணிந்துகொண்டு விலையுயர்ந்த கார்களில் வந்து இறங்கி வரிசையில் நின்று வெள்ள நிவாரணத் தொகை பெற்றவர்கள், அதே ஆர்வத்தில் வாக்களிக்க வரிசைக்கு வராதது பணத்தின் மீது மட்டும் பற்றுடையவர்கள் அவர்கள் என்பதைக் காட்டிவிட்டது.

பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க நிலம் எடுப்பதைக் கண்டித்துத் தேர்தலைப் புறக்கணித்தவர்கள் மீது வழக்குப்பதிந்துள்ளது கொடுஞ்செயலாகும். அப்படியென்றால் சென்னையில் வாக்களிக்காமல் புறக்கணித்தோர் மீதும் அதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? காலங்காலமாகப் பல தலைமுறையாகத் தொடர்ந்து குடியிருந்து வரும் ஊரைவிட்டு மொத்தமாக எழுப்பி விடுவதை யார்தான் மனமார விரும்புவர்? நாடு விடுதலை பெற்று 75ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட அந்த மக்கள், தங்கள் வாழ்வையே அழிக்கத் துடிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், தேர்தலைப் புறக்கணித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் மீது வழக்குப் பதிந்தது, இந்த நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நிலவுவதையே காட்டுகிறது. 

ச.பாலசெல்வி

புதன், 10 ஏப்ரல், 2024

சாலைப் பாதுகாப்பு

புவியில் உயிர்கள் தோன்றியது முதல் இன்றுவரை கால்நடைப் பயணம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஊர்வன, தவழ்வன, நடப்பன ஆகியவற்றுடன் மனிதர்களும் நடந்து வருகிறார்கள். என்னதான் பெரும் செல்வந்தராக இருந்தாலும் சொகுசு மகிழுந்து முதல் வானூர்தி வரை வைத்திருந்தாலும் சில இடங்களுக்கு நடந்துதான் சென்றாக வேண்டும்.

நீர்வாழ் உயிரினங்கள் நீரில் நீந்துகின்றன. நிலத்தில் வாழும் பறவைகள் சில அடிகள் மட்டும் நடந்து செல்லும் இயல்புடையன. அவை பெரும்பாலும் பறந்தே செல்கின்றன. நிலவாழ் உயிரினங்கள் அனைத்துமே அவற்றின் தோற்றக் காலத்தில் இருந்து இன்றுவரை ஊர்ந்தும், நடந்தும் செல்கின்றன.

இயற்கை மீது மனிதன் ஆதிக்கம் செலுத்தாக் காலத்தில் புவியெங்கும் அடர்ந்த காடுகளாக இருந்தன. அக்காலத்தில் ஓடைகளும் ஆறுகளுமே அக்காட்டின் நடுவே வழியாக அமைந்தன. அதனால்தான் ஆறு என்கிற சொல்லுக்கு வழி என்ற பொருளும் உண்டு. அது மட்டுமல்லாமல் இன்றும் நாட்டில் உள்ள பெருவழிகள் எல்லாம் ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ளதைக் காணலாம்.

கால்நடையாகப் பாதம் பதித்து மனிதனும் ஆடுமாடுகளும் நடந்துசென்ற வழியே பாதையாகும். அது பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையாக இருக்கும். சக்கரமும் வண்டியும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இரட்டை மாடுகளை வண்டிகளில் பூட்டிப் பயணம் மேற்கொண்டபோது, வண்டியின் இருசக்கரங்களும் மண்ணில் உருண்டு அந்த வழி இரட்டைத் தடங்கொண்ட பாதையானது.

நிலவாழ் உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனது அறிவால் சக்கரத்தையும் வண்டிகளையும் கண்டுபிடித்து முதலில் கால்நடைகளின் உதவியுடன் பயணம் மேற்கொண்டான். விளைபொருட்கள், கட்டுமானப் பொருட்கள், செய்பொருட்கள் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டுசென்றான். இப்போது எந்திர ஊர்திகள் மூலம் பயணம் நடைபெற்று வருகிறது.

எறும்புகள், கறையான்கள் சாரை சாரையாக ஊர்ந்து சென்றாலும் அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளவில்லை. ஆடுமாடுகள், காட்டுவிலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்றாலும் அவை சண்டையிடும்போது ஒன்றையொன்று முட்டிக்கொள்ளுமே தவிர இயல்பாக நடந்துசெல்லும்போதும் ஓடும்போதும் ஒன்றையொன்று இடிப்பதில்லை.

மனிதனும் நடந்துசெல்லும் காலம் வரை, உடன்செல்வோரையும் எதிரில் வருவோரையும் இடிக்கவில்லை. மிதமான வேகமும் பொறுமையும் இருந்தது அதற்குக் காரணங்கள்.

நேரத்தையும் தூரத்தையும் விரைவாகக் கடக்க முயல்வதே விபத்துக்கான முதற்காரணமாகும். மிதிவண்டிகள் பயன்படுத்திய காலத்தில்கூட அனைவரும் விரைந்து சென்றாலும் மோதல் இல்லை. மிதமான வேகத்தில் செல்வதும், கால் மிதியை விட்டதும் வேகம் குறைந்துவிடுவதும் அதற்குக் காரணம்.

மோட்டார் ஊர்திகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகே விபத்துக்கள் பெருகிவிட்டன. ஒரே தடத்தில் போக்கும் வரத்தும் இருந்த காலத்தில் கூட விபத்துக்கள் அரிதாகவே நிகழ்ந்தன. இப்போது போகவும் வரவும் தனித்தனித் தடங்கள், நால்வழிச்சாலை, ஆறுவழிச்சாலை, எட்டுவழிச்சாலை எனச் சாலையின் அகலமும் அதிகரித்துள்ளது.

பொறுமையாகச் சென்றாலே விரைந்து சென்றுவிட முடியும் என்ற சூழலிலும் சாலைச் சந்திப்புகள், பிரிவுகள், கூடல்கள், நடப்போர் சாலையைக் கடக்குமிடங்கள், தொடர்வண்டிக் கடவுகள் ஆகியவற்றில் பொறுமை காக்காமல் விரைந்து செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் நேர்ந்து விலைமதிப்பில்லா உயிர்கள் இறப்பதையும், உடல்கள் புண்ணாகி உறுப்புகளை இழந்து காலமெல்லாம் துன்பத்தில் அழுந்துவதையும் பார்க்கிறோம்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ரஷ்யா, அரபுநாடுகள், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடப்போருக்கும் மிதிவண்டிகளில் செல்வோருக்குத் தனித்தடமும் விபத்தில்லாப் பாதுகாப்பும் செய்துகொடுத்துள்ளனர். இந்தியாவில் மிதிவண்டிக்குத் தனித்தடமும் இல்லை, நடைபாதையும் இல்லை. அப்படியே நடைபாதை இருந்தாலும் அதில் கடைகள் வைத்தும் வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமித்திருப்பதால், மக்கள் சாலையில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சாலையில் போவதற்கு ஒருவழி, வருவதற்கு ஒரு வழி என்று விதி இருக்கிறது. ஒவ்வொரு வழியில் இருந்தும் செல்லும் வாகனங்களும் சந்திப்புகளில் மோதாமல் கடப்பதற்குச் சைகைகள் உள்ளன. இருப்பினும் எதிர்த்திசையில் செல்லும் வாகனங்களாலும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களாலும், சைகைகளை மதிக்காமல் மீறிச் செல்லும் வாகனங்களாலும், மற்ற வாகனங்களில் செல்வோரும், நடந்துசெல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.

வாகனத்தில் செல்லும் ஓட்டுநர்கள்,

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து என்பதை நினைவிற்கொண்டால் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

விதிகளை மீறுவோரிடமும் விபத்துக்குக் காரணமானவர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டுவிடும் போக்கே விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்க முதன்மைக் காரணம். அதிகாரம் மிக்கோர், பணம் படைத்தோர் தவறாக வண்டி ஓட்டி எளியவர் மீது ஏற்றிவிட்டால், எளியவர் மீதே தவறுள்ளதாகக் காட்டி வழக்குப் பதியும் போக்கும் இங்கு உள்ளது. இரவில் உறங்காமல் தொடர்ந்து வண்டி ஓட்டுவது, குண்டும் குழியுமான சாலைகள், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது, சாலையில் சாகசங்கள் செய்வது, சரக்கு வாகனங்களில் கொண்டுசெல்லும் பொருட்கள் சாலையில் விழுந்துவிடுவது, செல்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டுதல் ஆகியனவும் விபத்துக்கான காரணங்களாகும்.

இவற்றுக்கெல்லாம் மேலே பொறுமையில்லாததும் ஒரு காரணமாகும். ஒவ்வோரிடத்திலும் வைத்துள்ள கைகாட்டிகள், சைகைகள் ஆகியவற்றைப் பார்த்து அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துப் பொறுமையாகச் சென்றால் சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக விளங்கும்.

இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பொறுத்தவரை சாலைகள் வாகனத்துக்கானவை மட்டுமே, நடப்போர் அதில் குறுக்கே வரக்கூடாது என்ற தவறான எண்ணம் வண்டி ஓட்டிகளிடம் உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். வெளிநாடுகளில் சாலையைக் கடப்பதற்கான இடம் மட்டுமன்றி எந்தவோரிடத்திலும் நடப்போர் கடந்தால் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் தொலைவிலேயே வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் முழுவதுமாகச் சாலையைக் கடந்துசென்ற பிறகே வண்டியை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.

இந்தியாவில் அப்படி இல்லை. நடப்போருக்காக வெள்ளைக்கோடுகள் போட்ட இடத்திலும் கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. ஒருசிலர் சைகையை மீறி வாகனங்களில் விரைவாகச் செல்வதே அதற்குக் காரணமாகும். வெள்ளைக்கோடுகளும் சைகையும் இல்லாத மற்ற இடங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சைகையை மீறிச் செல்வோரும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரும், சாலைச் சந்திப்புகள், நடைபாதைக் கடவுகள் ஆகியவற்றில் வேகத்தைக் குறைக்காமல் செல்வோரும் சாலையில் நகரும் தற்கொலைப் படையாகவே உலவுகின்றனர். இவர்களால் நடப்போருக்கும் மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து நேர்கின்றது.

விருதுநகரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார், காலை ஆறரை மணிக்குச் சிவரக்கோட்டையில் கடவு உள்ள இடத்தில் வந்தபோது, வேகத்தைச் சற்றும் குறைக்காததுடன், அதனுடைய தடத்திலிருந்து விலகி, ஓரத்தில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன் பிறகு வலப்புறமாக விலகிச் சென்று சாலை நடுத்தடுப்பில் பின் சக்கரம் ஏறியதால் தறிகெட்டுப் புரண்டு, அதற்கு வலப்புறமும் உள்ள தடுப்பில் மோதி, அதன் அப்பால் உள்ள அணுகுசாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கொய்யாப்பழம் ஏற்றிச் சென்ற சிறுவணிகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நிகழ்விடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். வாகனத்தின் ஓட்டுநர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். பொறுமையின்மையும், அதிவிரைவுமே இந்த விபத்துக்குக் காரணம்.

சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும். இருந்தாலும் மனிதநேயமும், உயிர்களிடத்தில் அன்புகாட்டுவதும், பொறுமையுமே விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கும். நாட்டில் அத்தகைய ஒரு சூழலை உருவாக்க லஞ்சமும் ஊழலும் இல்லாத நல்லாட்சி அமைவதே தீர்வாக இருக்கும்.