ஞாயிறு, 13 நவம்பர், 2022

பரந்தூர் மக்களுக்குப் பங்கு கிடைக்குமா?

சென்னையின் இரண்டாவது வானூர்தி நிலையத்தைக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகச் செழிப்பான நன்செய் நிலங்கள், ஏரிகள், குடியிருப்புகள் உட்பட 4700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசிடம் கோரியுள்ளது.

பொருளியலில் உற்பத்திக்கான காரணிகளாக நிலம், உழைப்பு, முதல், அமைப்பாற்றல் ஆகியவற்றைக் கூறுவர். முதன்மைக் காரணியான நிலத்தின் மீதுதான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில், வணிகம் ஆகியன செய்யப்படுகின்றன. இவ்வகையில் சென்னையில் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு முதல் தேவை சென்னைக்கு அருகில் ஒரே இடத்தில்4700 ஏக்கர் நிலம். அதில் தொழிலாளர்கள், பொறிகளைப் பயன்படுத்திப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணியை வானூர்தி நிலையங்கள் ஆணையம் மேற்கொண்டாலும் கட்டுமானப் பணி முடிந்தபின் தனியார் நிறுவனத்துக்கே வானூர்தி நிலையம் கொடுக்கப்படும். நாட்டின் பெரும்பான்மையான நிலையங்கள் தனியாரிடம் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வானூர்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்களை ஊரைவிட்டு வெளியேற்றி அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் தரகுப் பணி மாநில அரசுக்குத் தரப்பட்டுள்ளது.

நிலத்தின் சந்தைமதிப்பைப் போல் மூன்றரை மடங்குத் தொகை இழப்பீடாக வழங்கப்படும். மாற்று இடத்தில் வீடு கட்டித் தரப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புத் தரப்படும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றெல்லாம் தமிழக அரசு உறுதிமொழி அளித்துள்ளது. இவை ஒன்றும் புதிதானவை அல்ல. இதற்கு முன் அரசு திட்டங்களுக்கு நிலம் எடுத்தபோதும் இதே உறுதிமொழிகளை அரசு வழங்கியுள்ளது. அவற்றைச் சரியாக நிறைவேற்றியதாக எங்காவது மக்கள் மனநிறைவடைந்ததாகச் சொல்ல முடியுமா?

எங்கள் நிலத்தைத் தவிட்டு விலைக்குக் கொடுத்தாற்போல் கொடுத்தோம். அடிமாட்டு விலைக்கு நிலத்தை எடுத்துக் கொண்டனர். கையில் ஒன்றும் வந்து சேரவில்லை. மிகக் குறைந்தவிலையே கொடுத்தனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பல ஆண்டுகளுக்குப் பின் ஏதோ ஓரளவு இழப்பீட்டைப் பெற முடிந்தது என்பவைதான் அரசு திட்டங்களுக்கு நிலங்கொடுத்து ஏமாந்தோரின் கருத்துக்களாக உள்ளன. நிலம் எடுத்த 20ஆண்டுக்குப் பிறகும் உரிய இழப்பீடு வழங்காதது குறித்த நீதிமன்ற வழக்குச் செய்திகளும், இழப்பீட்டுக்காக அரசு அலுவலக உடைமைகளைப் பறிமுதல் செய்யும் செய்திகளும் அடிக்கடி நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் வருவது அதை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் அரசின் உறுதிமொழிகளை மக்கள் நம்பவில்லை. அரசுக்கு நிலங்கொடுத்த குடும்பங்களில் வீட்டுக்கோர் ஆளுக்கு வேலை என்கிற உறுதிமொழியை நிறைவேற்றி இருந்தால் நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் முன் மக்கள் ஏன் போராட வேண்டும்? அரசின் பல திட்டங்களுக்கு நிலங்கொடுத்த மக்கள் ஏன் வீடின்றி உணவின்றி வறுமையில் வாட வேண்டும்.

மக்களுக்கு உறுதிமொழி அளிக்கும் அரசு பல்வேறு துறைகள், அலுவலர்கள் அடங்கிய சட்டப்படியான அமைப்பு. இன்று வாய்மொழியாக முதலமைச்சர் அமைச்சர் ஆகியோர் கூறும் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை எனப் பிற்காலத்தில் குறைகூறும்போது அவர்கள் பதவியில் இருக்க மாட்டார்கள். ஆட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் இடமாற்றம், பதவி உயர்வு, பணிஓய்வு ஆகியவற்றால் மாறிவிடுவர். உறுதிமொழிகள் நிறைவேறவில்லை எனச் சுட்டிக்காட்டி முறையிடும் காலத்தில் முதலமைச்சர் அமைச்சர் ஆட்சியர் வட்டாட்சியர் அனைவரும் மாறிவிடுவர். முந்தையோர் அளித்த உறுதிமொழிக்குத் தாங்கள் பொறுப்பில்லை எனப் புதியோர் பொறுப்பில்லாமல் பதில் சொல்வர். இதைக் கேட்கும் மக்களுக்குச் சினமும் வெறுப்பும்தான் வரும்.

தமிழ்நாட்டில் நடுவணரசின் நிறுவனங்களில் வடவரைப் பணியமர்த்துவதும், காலிப் பணியிடங்களுக்கு இங்கே ஆளெடுக்காமல் வடக்கில் இருந்து பணியிட மாற்றம் செய்வதும் நாமறிந்ததே. இந்நிலையில் வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு என்பது நிறைவேற்றக்கூடிய உறுதிமொழியா என்பதை நடுவணரசும் மாநில அரசும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவோருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றொரு புதிய உறுதிமொழி. நிலத்தை வீட்டை சொத்தை காலங்காலமாக வாழ்ந்த ஊரை இழந்து நீதிமன்றங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் அலையாய் அலைந்து வாழ்வது பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியா? இதற்கு முன் நிலங்கொடுத்தவர்களின் கதைகளைக் கேட்டால் இதுதான் விடையாகக் கிடைக்கிறது.

நிலத்துக்குச் சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்குத் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்கிற உறுதிமொழி குறித்துப் பல்வேறு ஐயங்கள் உள்ளன. வானூர்தி நிலையத் திட்டத்தின் அறிவிப்புக்கு முன்னுள்ள சந்தை மதிப்பா? வானூர்தி நிலையம் அமைக்க உள்ள பகுதியில் நிலம் பத்திரப்பதிவுக்குத் தடை விதித்துள்ள நிலையில் அறிவிப்புக்குப் பின்னுள்ள சந்தை மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது? அல்லது சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தின் சுற்றுப் பகுதிகளில் உள்ள நிலங்களின் சந்தை மதிப்பா? எது கணக்கிற் கொள்ளப்படும் என்பதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன.

பொதுவாக நில விற்பனை என்பது விற்போரின் விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்குவோர் வாங்க முடியும். அதில் சரியான விலைதர வாங்குவோர் முன்வராவிட்டால் விற்போர் நிலத்தை விற்காமல் இருக்க முடியும். அரசு திட்டங்களுக்கான நில எடுப்பில் இந்த முறை கிடையாது. அரசு குறித்த விலைக்கு மக்கள் தங்கள் நிலத்தைக் கட்டாயமாகக் கொடுத்தே ஆக வேண்டும். பணத்தைப் பெற்றுக்கொள்ளாதோருக்கு நீதிமன்றத்தில் பணம் கட்டப்படும். அதைக் குறித்த காலத்துக்குள் சென்று வாங்கிக் கொள்ளலாம். இதில் விற்போர் வாங்குவோரிடம் சமநிலை இல்லை. வாங்கும் அரசு வலுமிக்க அதிகாரமிக்க சட்டப்படியான அமைப்பாக உள்ளது. விற்போர் நிலத்தின் மதிப்பைத் தாங்களே கூற முடியாமலும், தர மாட்டோம் என மறுக்கும் உரிமை இல்லாமலும், எதிர்த்துப் பேசினால் சொல்லொணா அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் நிலையிலும் உள்ளனர். அவர்களுக்காகப் பரிந்துபேசுவோர் தேச விரோதிகள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுவர். அதிக வருமானம் தரும் 4700 ஏக்கர் பரப்பளவுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் குறைந்த குத்தகைக்கு நெடுங்காலத்துக்குப் பெற்ற நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றுவதாகக் கூறி விருதளித்துச் சிறப்பிக்கப்படும். அந்நாளில் இந்த வானூர்தி நிலையத்துக்கு நிலங்கொடுத்த மக்களின் சமூக பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அரசோ ஊடகங்களோ எடுத்துக்கூறவோ ஆராயவோ முடியாத நிலையிலேயே இருப்பர்.

வானூர்தி நிலையத்தைச் சட்டப்படியான ஒரு நிறுவனமாகக் கொண்டால் அதில் பெரும்பங்கை அதாவது 51 விழுக்காட்டை நிலம் கொடுத்தோருக்குக் கொடுப்பதே முறையாக இருக்கும். 4700 ஏக்கரில் தனியார் நிலம் போக அரசின் புறம்போக்கு நிலங்களும் இருக்கும். பெருமளவு நிலம் உள்ளோருக்கு அவர்களின் பங்கையும், குறைந்த அளவு நிலம் வைத்துள்ளோர் மற்றும் நிலமில்லா ஏழைகளுக்கு அரசின் பங்கையும் வழங்கலாம். இதனால் நிலமிழந்து வீடிழந்து ஊரிழந்து வெளியேறும் மக்களுக்கு மறுவாழ்வுக்கும் நீடித்த வருவாய்க்கும் வழிசெய்ய முடியும். வானூர்தி நிலையக் கட்டுமானம் தொடங்குமுன்னே மக்களுக்குச் சென்னையில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி அங்குக் குடியேற்றலாம். வானூர்தி நிலைய நிறுவனப் பங்குகளைப் பங்குச்சந்தையில் விற்று உடனடித் தேவைகளுக்கான பணத்தை மக்கள் பெறலாம்.

நிலமில்லா ஏழைகளும் அந்த ஊரில் காலங்காலமாக வாழ்வோர் என்பதும், முன்பு அவர்களுக்கு நிலவுடைமை இருந்து பல்வேறு காரணங்களால் அது கைவிட்டுப் போயிருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது. வானூர்தி நிலையத் திட்டத்தால் நிலக்கிழார்கள் நிலமிழப்பதுபோல், நிலமில்லாதோர் கூலிவேலை, கால்நடை வளர்ப்பு, விறகு வெட்டிப் பிழைப்பது உள்ளிட்ட வாய்ப்புக்களை இழப்பதும் இங்குக் கருதத் தக்கது.

மேற்கண்டவற்றை எல்லாம் ஆராய்ந்து அதன் அடிப்படையிலும், நேர்மையான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மக்களின் கருத்துக்களின்படியும் நிலங்கொடுப்போர் வாழ்விழந்து போகாமல், அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தைத் தரும் ஒரு விரிவான நேர்மையான இழப்பீட்டுத் திட்டம் வரைந்து அதன்பின் நில எடுப்புப் பற்றிப் பேசுவதே மக்கள்நல அரசுகளின் செயலாக இருக்க முடியும். இதற்கு முன் அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப் பல குடிகளை எழுப்பிய கதைகளைப் பார்த்தால் இப்படி இல்லாமல் தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதையாகத்தான் உள்ளது. அந்த நிலையை மாற்றி மக்கள்நலன் காக்கும் அரசுகளாக நடுவண் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும். (திருக்குறள் 388)

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக