செவ்வாய், 8 நவம்பர், 2022

இட ஒதுக்கீடா? இடப் பதுக்கீடா?

நடுவண் அரசு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பட்டியலினத்தவருக்கு 22.5 விழுக்காடும் ( இதில் பழங்குடியினர் 7.5%;பட்டியல் சாதியினர் 15% ) பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காகப் பட்டியலினத்தவருக்குப் பத்தாண்டுகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்தார். அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டும் அதை நீட்டித்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் அன்றைய சென்னை மாகாணத்தில் ஏற்கெனவே இருந்து வந்த வகுப்புவாரி ஒதுக்கீடு செல்லாமல் போனது. இதனால் பிற்படுத்தப்பட்டோரின் நலன் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் பெருந்தலைவர் காமராசரின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. இத்தகைய இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியது. இதனாலேயே நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் விகிதம் 40 விழுக்காட்டுக்கு மேல் இருந்தாலும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு 27 விழுக்காடாகவே உள்ளது. பட்டியலினத்தவருக்கு 22.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு என மொத்த இட ஒதுக்கீடு 49.5 விழுக்காடாக இருந்தது. பிற்படுத்தப்பட்டோரின் விகிதத்துக்கொப்ப அவர்களுக்கு அதிக ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெருந் தடைக்கல்லாக இருந்தது. இந்நிலையில்தான் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை 2019ஆம் ஆண்டு பாசக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு அரசியலமைப்பை மீறியதாகையால் செல்லாது என்றும், 10 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டால் ஒதுக்கீட்டு வரம்பு 59.5 விழுக்காடாகி 50 விழுக்காட்டு வரம்பைத் தாண்டிவிட்டதாகவும் வழக்குத் தொடுத்தோர் வாதிட்டனர். ஏற்கெனவே உள்ள இடங்கள் போகக் கூடுதலாக 10 விழுக்காடு இடங்களை உருவாக்கி விடுவதாகவும் இதனால் 50 விழுக்காடு என்னும் வரம்பு மீறப்படாது என்றும் நடுவணரசு சப்பைக்கட்டு கட்டியது.

இது மிகப்பெரிய ஏமாற்று என்பதை அறியச் சான்றுக்கு ஒரு கணக்கீட்டைப் பார்ப்போம். ஒரு கல்லூரியில் ஒரு படிப்புக்கு 90 இடங்கள் உள்ளன. இதில் ஒதுக்கீட்டுக்கு 45 இடங்களும், பொதுப்பிரிவில் 45 இடங்களும் என வைத்துக்கொள்வோம். இப்போது 50 விழுக்காடு வரம்புக்குள் இட ஒதுக்கீடு உள்ளது. முன்னேறிய வகுப்பில் பின்தங்கியோருக்காகக் கூடுதலாக அங்கு மேலும் 9 இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்போது மொத்த இடங்கள் 99 ஆகும். இதை 100 இடங்கள் என்றே வைத்துக்கொள்வோம். இப்போது ஏற்கெனவே உள்ள 45 இடங்கள், புதிதாக 10 இடங்கள் என மொத்தம் 55 இடங்கள் ஒதுக்கீட்டில் வருகின்றன. இப்போது மொத்த ஒதுக்கீடு 55 விழுக்காடாகி விட்டது. இந்தக் கணக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்குக் கூடத் தெரியும். ஆனால் நாட்டை ஆளும் சட்டம் இயற்றுவோருக்கும், அந்தச் சட்டத்தைக் காக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும், அத்தகைய சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தவருக்கும் தெரியவில்லையா? இல்லை தெரியாதது போல் பாசாங்கு செய்கின்றனரா?

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இரு வேறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளது. 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என மூவரும், செல்லாது எனத் தலைமை நீதிபதி உட்பட இருவரும் தெரிவித்துள்ளனர். ஐந்தில் மூன்று என்கிற பெரும்பான்மை அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பாகியுள்ளது. இது சரியென்றால் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் எனக் கூறி இதுநாள் வரையும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தாமல் தடுத்தது மிகப்பெரிய அநீதியாகும். அது சரிதான் என்றால் இப்போது வழங்கிய தீர்ப்பு அநீதியாகும்.

2019ஆம் ஆண்டு தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு மதிப்பீட்டின்படி பழங்குடியினர் 9 விழுக்காடு, பட்டியல் சாதியினர் 20 விழுக்காடு எனப் பட்டியலினத்தவர் மொத்தம் 29 விழுக்காடு உள்ளனர். முன்னேறிய வகுப்பினர் 30 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோர் 41 விழுக்காடும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

29 விழுக்காடுள்ள பட்டியலினத்தவருக்கு 22.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி அவர்களின் சமூக நீதி ஓரளவு நிலைநாட்டப்பட்டுள்ளது. மீதி 77.5 விழுக்காடு உள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் வழங்கப்பட்டன. பொதுப்பிரிவில் போட்டியிட்டுப் பெற முடியாத 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இந்த 27 விழுக்காட்டுக்குள் முட்டி மோதிக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் முன்னேறிய வகுப்பினர் பொதுப்பிரிவில் உள்ள 50 இடங்களில் பெருமளவைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதில் முட்டி மோத முடியாதவர்களுக்காகக் கூடுதலாக 10 விழுக்காடு இடங்கள் உள்ளன. இதில் மற்ற வகுப்புகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோர் நுழைய முடியாது. இங்குத்தான் ஏமாற்றுத் தந்திரம் உள்ளது. 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, 30 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 50 விழுக்காடு, அவர்களிலேயே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக 10 விழுக்காடு என மொத்தம் 60 விழுக்காடு வழங்கப்படுகிறது. இதை 110க்கு 60 என்று பார்த்தால்கூட 54.5 விழுக்காட்டுக்குக் குறையாமல் உள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க 50 விழுக்காடு வரம்பைக் கூறி முட்டுக்கட்டை போட்ட உச்சநீதிமன்றம், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு வழங்க அதே கட்டையை உடைத்து ஏணி செதுக்கிக் கொடுத்து ஏற்றி விட்டுள்ளது. அவர்களைத் தனிப் பிரிவாக உருவாக்கியது சரியானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மற்ற வகுப்பினரின் மக்கள் தொகையின் விகிதத்துடன் அவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு யானைக்குச் சோளப்பொரி வழங்குவதுபோலச் சிறு பங்காகும். அதே நேரத்தில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கும் 10 விழுக்காடு ஒதுக்கீடு ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழக்குலை வழங்குவதுபோலப் பெரும்பங்காகும். ஆக 10 விழுக்காடு இட ஒதுக்கீடா? இடப் பதுக்கீடா? என்கிற வினா எழுகிறது.

சே.பச்சைமால்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக