வியாழன், 28 டிசம்பர், 2023

தென்மாவட்ட வெள்ளப் பேரழிவுக்குக் காரணிகள்

கடந்த ஈராண்டுகளாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில் மழைக்கால முடிவான திசம்பர் மாதத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான புயலால் சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் அடைமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னையின் ஒருசில பகுதிகள் தவிரப் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஈருருளிகள், மகிழுந்துகள் என இலட்சக்கணக்கான வண்டிகள் தண்ணீருக்குள் மூழ்கின. வெள்ளம் புகுந்த வீடுகளில் அறைகலன்கள், மின்னணுக் கருவிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. ஒருசில பகுதிகளில் வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டன. தன்னார்வலர்கள் முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், பாதிக்கப்பட்டோருக்கு உணவு குடிநீர் பால் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கினர். செயலற்றிருந்த மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் அதிக மழை பெய்ததே வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்றும், தாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் தான் வெள்ளம் விரைவில் வடிந்ததாகவும் தற்பெருமை கூறிக்கொண்டனர். அவர்களின் அடிவருடிகளான ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. அதேநேரத்தில் அரசின் செயலற்ற நிலை, பொறுப்பற்ற விளக்கம் ஆகியன குறித்துச் சமூக வலைத்தளத்தில் கடுமையாகக் கருத்துக்களைத் தெரிவித்த மக்கள் தங்கள் சினத்தைத் தணித்துக் கொண்டனர். கொள்ளையடிப்பதில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சமாவது மக்கள் நலப் பணிகளில் காட்டக் கூடாதா என்றும் வினவினர்.

சென்னையில் பெய்து பேரழிவை ஏற்படுத்திய இந்தப் பெருமழை ஈராண்டுகளாக வறண்டுகிடக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வளங்கொழிக்கச் செய்யக் கூடாதா என்று அங்கு வாழும் மக்களும், சென்னையில் வாழும் அம்மாவட்ட மக்களும் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் சமூக வலைத்தளங்களில் கருத்துக் கூறினர். இந்த வேண்டுதல் இயற்கைக்குத் தெரிந்து, மக்களின் கவலையைத் தீர்க்கும் வகையில், திசம்பர் மூன்றாம் வாரத்தில் ஒரே நாளில் பெருமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தில் அதிக அளவாக 95 செண்டிமீட்டர் மழை பெய்திருந்தது. அதையடுத்துத் திருச்செந்தூர், கோவில்பட்டி, திருவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் 60 செண்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் 50 செண்டிமீட்டர் அளவில் மழை பெய்திருந்தது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கெனவே உள்மாவட்டப் பகுதிகளிலும் வரலாறு காணாப் பெருமழை பெய்திருந்ததால் ஒரே நாளில் குளங்கள் பெருகி மறுகால் பாய்ந்து அந்த நீரும் கால்வாய், ஓடை, ஆறு ஆகியவற்றில் சேர்ந்தது.



எப்போதும் வறட்சிக்கு இலக்கான இராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி, சாத்தான்குளம் வட்டங்களில் இந்தப் பெருமழை பெருவெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அப்பகுதிகளில் ஈராண்டுகளாக நிலவிய வறட்சியை ஒரேநாளில் போக்கி வளங்கொழிக்கச் செய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள், உயர்மட்டப் பகுதிகளிலும் பாதிப்பு இல்லை. தாமிரபரணி, மணிமுத்தாறு, பச்சையாறு, கடனா ஆறு, இராம ஆறு, கருப்ப ஆறு ஆகியவை திருநெல்வேலிக்கு மேற்கே ஒன்று சேர்ந்து திரண்டு வருகின்றன. சமவெளியாயும், முறையற்ற நகர்ப்பெருக்கத்துக்குச் சென்னையைவிடச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழும் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி வெள்ளத்தால் பேரழிவுக்குள்ளானது. ஆற்றிலும் ஊரிலும் ஒரே மட்டத்தில் வெள்ளம் பாய்ந்தது. தொடர்வண்டி நிலையத்திலே நடைமேடை உயரத்துக்கு வெள்ளம் இருந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சந்திப்பு பேருந்து நிலையம் வெள்ளத்துக்கான நிலையம் போல் இருந்தது. அப்பகுதியில் உள்ள கட்டடங்களில் தரைத்தளத்தில் உள்ள கடைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. கொக்கிரகுளம், வண்ணார்ப்பேட்டை, வீரராகவபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கழுகுப் பார்வைக் காட்சிகளில் ஆற்றுக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டதும், அதனால் செறுக்கப்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததும் தெரியவருகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றைத் தாண்டிச் சீவலப்பேரியில் தாமிரபரணியுடன் சிற்றாறும் சேர்கிறது. அதன்பின் ஆற்றில் வெள்ளத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது. இப்படிச் சென்ற வெள்ளம் மருதூர்க் கால்வாய்கள், திருவைகுண்டம் கால்வாய்கள் ஆகியவற்றின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணிச் சமவெளியைப் பேரழிவுக்குள்ளாக்கியுள்ளது. பெருமழை, ஆற்றுவெள்ளம் ஆகியன மட்டுமல்லாமல் பல குளங்கள் உடைந்து கடல்மடை திறந்ததுபோல் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால்தான் ஒவ்வொரு ஊரிலும் வீடுகள், தொழுவங்கள் இடிந்துள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் மழை வெள்ளப் பேரழிவால் முப்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழைநின்று மூன்று நாட்களுக்குப் பிறகும் மீட்புப் படையினரால் பல ஊர்களை அணுக முடியவில்லை. குளங்கள் உடைந்த ஊர்களில் சாலைகள் அரிக்கப்பட்டுத் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறு, கால்வாய்களில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு கரைகளை உடைத்து ஊருக்குள் பாய்ந்தது. ஏரலில் தாமிரபரணி ஆற்றில் உயரமான பாலத்தின் வடக்குக் கரையில் அணுகுசாலையும் உயர்மட்டச் சாலையும் அரிக்கப்பட்டு ஆறுபோல் வெள்ளம் பாய்ந்தது. இதனால் ஏரலுக்கும் திருச்செந்தூர் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் ஏரல் - முக்காணி, ஏரல் - திருவைகுண்டம் சாலைகளும் துண்டிக்கப்பட்டன. வாழ்நாளில் இப்படிப் பெருமழையையும் பெருவெள்ளத்தையும் பார்த்ததில்லை என்றே அனைவரும் சொல்கின்றனர். அதேநேரத்தில் அரசும் அதன் அடிவருடியான ஊடகங்களும் வரலாற்றில் இல்லா வகையில் பெருமழை பெய்ததால் பேரழிவு ஏற்பட்டுவிட்டது என்று தங்களுக்குள் ஏற்கெனவே பேசிக்கொண்டதைப் பிறழாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கின்றன. பெருமழை பெய்துவிட்டது, வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. எத்தகைய பெருமழையையும் பெருவெள்ளத்தையும் எதிர்கொள்ளும் வகையில் பாசனக் கட்டமைப்புகளையும், நகர்ப்புற உட்கட்டமைப்புகளையும் வடிவமைப்பதும் உருவாக்குவதும் அரசின் கடமை. அவற்றைச் சரியாகப் பேண உதவுவதுடன் அதைச் செய்ய அரசுக்கு வலியுறுத்துவது மக்கள் பொறுப்பு.

கருநாடக அணைகளில் இருந்து பெருமளவு நீர் திறந்து விட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அங்கிருந்து தண்ணீர் திறந்துவிட்டால்தான் காவிரியும் சோழமண்டலமும் உயிர்பெறும். பெரியாற்று அணையில் இருந்து நீர் திறந்து வைகை அணைக்கு வந்து அங்கிருந்து வைகையாற்றிலும் கால்வாய்களிலும் தண்ணீர் திறந்தால்தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்கள் உயிர்பெறும். ஆனால் தென்பாண்டி நாட்டில் மேற்குத் தொடர்ச்சிமலையில் பசுமைமாறாப் பகுதியில் உருவாகும் பொருநையெனும் தாமிரபரணி ஆறு 150 கிலோமீட்டருக்கும் குறைவான நீளத்தையே கொண்டிருந்தாலும் ஆண்டுமுழுவதும் நீர் பாய்வதால் தனது இருகரைப் பகுதிகளையும் செழிப்பாக்கி வருகிறது. இதனால்தான் பொருநையென்னும் தாமிரபரணி தமிழ்நாட்டில் உயிருள்ள ஒரே ஆறு எனக் கூறப்படுகிறது. அத்தகைய ஆற்றில் ஆண்டில் தென்மேற்கு, வடகிழக்கு என இருபருவக் காற்றுக் காலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் பிசானம், முன்கார், பின்கார் என மூன்றுபூ நெல் விளைந்தது. 1940களில் ஆங்கிலேயர் ஆட்சியில் பாபநாசம் அணையும், விடுதலைக்குப் பின் காமராசர் ஆட்சியில் மணிமுத்தாறு அணையும் கட்டப்பட்டன. இதனால் உடனடி வெள்ளப்பெருக்கு தடுக்கப்பட்டது. அதேநேரத்தில் தொடர்ந்து அடைமழை பெய்யும்போது அணைகள் நிரம்பி உடையும் நிலை ஏற்படுவதைத் தடுக்கத் திடீரெனப் பெருமளவு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. 1992ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பெருமழை பெருவெள்ளம் இத்தகையதே. அப்படியிருக்கையில் இப்போது பெய்தது வரலாறுகாணாத மழை என்றும், ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்ந்தது பெருவெள்ளம் என்று கூறுவது 1992 வெள்ளத்தைப் பற்றித் தெரியாதவர்களின் உழற்றல்தான்.

தாமிரபரணியில் சேர்வலாறு, பாபநாசம் அணைகள், மணிமுத்தாறு, கடனாறு, இராம ஆறு, கருப்ப ஆறு, பச்சையாறு ஆகியவற்றில் ஒவ்வொரு அணை எனப் பல அணைகள் கட்டப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் உடனடியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்பட்டது. அதேநேரத்தில் இத்தனை அணைகள் இருந்தாலும் என்றாவது ஒருநாள் அளவுகடந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதை இப்போது பெய்த பெருமழை மெய்ப்பித்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கு மேல் உள்ள நீர்தான் நான்குனேரி, திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்குச் சென்று பயனளிக்கும். இதற்கான கால்வாய் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கிப் புத்தன்தருவை முடியக் கடல் வரைக்கும் உள்ளது. இந்த ஒரு கால்வாயைத் தவிரத் தாமிரபரணி வடிநிலத்தில் உள்ள மற்ற துணையாறுகள், கால்வாய்கள் அனைத்தின் நீரும் பாசனத்துக்குப் பின் மீண்டும் தாமிரபரணியுடன் சேரும். இந்நிலையில் தான் அண்மையில் பெய்த ஒருநாள் அடைமழையில் தாமிரபரணியில் கட்டுக்கடங்கா வெள்ளம் பாய்ந்து திருவைகுண்டம் ஏரல் வட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழிவைக் கொஞ்சம் குறைக்கும் வகையில் கன்னடியன் கால்வாயில் ஒரு தடுப்பணை கட்டி அதிலிருந்து மற்றொரு கால்வாயை வெட்டிப் பச்சையாற்றையும் மணிமுத்தாற்றுக் கால்வாயையும் தாண்டிக் கருமேனியாற்றையும் இணைத்துக் கோவன்குளத்தில் நம்பியாற்றில் முடியும் வகையில் ஆறுகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கொஞ்சம் தண்ணீரைத் திருப்பி விட்டால் அந்த அளவுக்குத் தாமிரபரணிக் கரையில் அழிவு ஏற்படுவது குறையும். இந்தக் கால்வாயில் முதன்முறையாக இப்போது தண்ணீர் திறந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெருமழையால் செழிப்பான நான்குனேரி, சாத்தான்குளம், திசையன்விளை வட்டங்களில் ஆறுகள் இணைப்புக் கால்வாயில் சென்ற தண்ணீர் அப்பகுதிகளை மேலும் செழிப்பாக்கியுள்ளது.

சேரன்மாதேவியில் தாமிரபரணியில் இருந்து முப்பதாண்டுகளுக்கு முன்பே கட்டபொம்மன் கடற்படைத் தளத்துக்குக் குழாயில் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பின் கடந்த முப்பதாண்டுகளாகத் தாமிரபரணியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் எண்ணற்ற கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கங்கைகொண்டான், தூத்துக்குடி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் தாமிரபரணித் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் வறட்சிக்காலங்களில் ஆற்றின் நீரோட்டம் பெரிதும் குறைந்து வேளாண்மைக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எப்போதும் குளிர்ந்த நீரைக்கொண்ட ஏரல் தண்பொருநையில் 2023 மே மாதத்தில் ஒரு நாள் குளித்தபோது நீர்ப்பரப்பில் மேலே ஒருசாண் அளவுக்கு வெந்நீராகக் கொதித்தது. இதனால் தமிழ்நாட்டின் உயிருள்ள ஒரே ஆறு நம் காலத்திலேயே செத்துப்போகுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் அரசாலும் மக்களாலும் குற்றுயிராக்கப்பட்ட ஆறு மீண்டும் தனது முழு உருவத்தையும், நீரோட்ட வேகத்தையும் காட்டும் வகையில் ஒரு பெருவெள்ளமாகப் பாய்ந்து தனது இருப்பைக் காட்டித் தனக்குப் புத்துயிர் வந்துள்ளதை மெய்ப்பித்துள்ளது.

ஆற்றின் இருகரைகளிலும் நீர்பாயும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளைத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆண்ட திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசுகளும் செய்துகொடுத்துள்ளன. பேரளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தைத் தடுத்து ஊருக்குள் திசைதிருப்பும் அணைகள் போன்று விதிமீறி ஆற்றுநீரோட்டப் பகுதியிலும் ஆற்றுப் புறம்போக்கிலும் கட்டப்பட்ட வீடுகள் செயல்பட்டுள்ளன. இந்த உண்மையைத் திருநெல்வேலி வெள்ளத்தின் கழுகுப் பார்வைக் காட்சியில் காணலாம்.

1990ஆம் ஆண்டுக்குப் பின் கட்டுமானத்துறை வளர்ச்சியாலும், அந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாட்டின் எல்லா ஆறுகளிலும் கட்டுப்பாடற்ற மணற்கொள்ளையை அரசே செய்து வருகிறது. இதில் ஒருநாளில் ஆயிரம் லாரிகள் கணக்குக் காட்டி அரசுக்கு உரிமைத்தொகை கொடுத்தால், நாலாயிரம் லாரிகள் கணக்கின்றிக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இதன்மூலம் 4700 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் நடுவணரசின் அமலாக்கத் துறையே தெரிவித்துள்ளது. இந்த திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு என்றால் கடந்த முப்பதாண்டுகளாக எவ்வளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கும். அப்படி ஒட்டுமொத்தமாக மணல்வளம் சுரண்டப்பட்ட ஆறுகளில் தாமிரபரணி, நம்பியாறு ஆகியவை முதலிடத்தில் உள்ளன. இவ்விரு ஆறுகளிலும் மணல் துடைத்து அள்ளப்பட்டுவிட்டன. இதனால் ஆற்றுநீரைத் தூய்மைப்படுத்தல், நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்று நீரின் மாசுபாடும் அதிகரித்துள்ளது. வரைமுறையின்றி மணல் அள்ளிய பள்ளங்களில் நீரின் அளவுதெரியாமல் குளித்தபோது எண்ணற்றோர் மூழ்கி உயிரிழந்த செய்திகளும் உள்ளன.

ஆற்றுமணல் துடைத்தள்ளப்பட்டதால் வெள்ளக்காலங்களில் நீரோட்டத்தின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும். ஆற்றுநீர் நிலத்துக்குள் ஊடுருவி நிலத்தடிநீரைச் செறிவூட்டும் செயல்பாடு குறைவாக இருக்கும். அப்படி இருக்கும்போது மணல் அள்ளிய பரப்பின் வெற்றிடம் ஆற்றின் நீர்கொள்ளும் அளவையும், நீர்கொண்டுசெல்லும் திறனையும் அதிகரித்திருக்கும் என்றுதான் பலரும் நினைப்பர். ஆற்றுக்குள் மண்ணள்ளிய திருடர்கள் ஆற்றங்கரைகளில் உள்ள குறுமணலையும் விட்டுவைக்கவில்லை. இந்தக் குறுமணல் வெட்டி அள்ளப்பட்டதால் ஆற்றின் இருகரைகளும் தேய்ந்து போயின. இதனால் வெள்ளக் காலத்தில் ஆற்றின் இருகரைகளிலும் உள்ள வயல்வெளிகளின் வண்டல் மண் அரிக்கப்பட்டு ஆற்றில் படிவதும், ஏற்கெனவே மணல் லாரிகள் இரவும் பகலுமாகத் தொடர்ந்து ஊர்ந்ததால் தேய்ந்த கரைகள் மேலும் அரிக்கப்பட்டு ஆற்றுக்குள் மண் படிவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஆற்றில் மணல் இருக்கும்வரை அங்கு முட்புதர்களோ, புற்களோ முளைக்காது. முளைத்தாலும் கோடைக்காலத்தில் வெப்பத்தால் காய்ந்து பட்டுப் போய்விடும். மணல் அள்ளிய இடங்களில் படிந்துள்ள வண்டல் மண் முட்புதர்கள், சம்பு, நாணல் ஆகியன வளர்வதற்கு ஏதுவானது. கடும் வெயில் காயும் கோடைக்காலங்களில் கூட வண்டலில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு முட்புதர்கள், சம்பு, நாணல் ஆகியவை செழித்து வளரும். ஒரு கோடைக்காலத்தில் தாமிரபரணி ஆற்றை நாம் பார்த்தால் நீர் வடியும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் மணல் இல்லாமல் வண்டல் படிந்து முட்புதரும், சம்பும், நாணலும் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ளதை நாம் காணலாம்.

இத்தகைய சூழலில் இப்போது ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் தேய்ந்து கரைந்துள்ள கரைகளின் வழியாக ஆற்றின் இருபுறங்களுக்கும் பாய்ந்தோடியது என்பதே உண்மை. ஆக ஆற்றின் நீரோட்டப் பகுதியில் வீடுகள் கட்டடங்கள் கட்டியது, ஆற்று மணலை முற்றிலும் துடைத்தள்ளியது, மணல் அள்ளுவதற்காக வண்டிகள் சென்றதில் கரைகள் தேய்ந்தது ஆகியனவே வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட வழிவகுத்தன என்பதை நாம் உணரலாம்.

ஆற்றில் எப்படி மணற்கொள்ளை நடந்ததோ அதேபோல அதன் கால்வாய்களிலும் மணலும் மண்ணும் கொள்ளையடிக்கப்பட்டன. ஆற்றின் நீரோட்டப்பகுதியில் எவ்வாறு வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டதோ அதேபோல் கால்வாயையும் சுருக்கி வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதன் விளைவு கால்வாய்க் கரைகள் தேய்ந்தும் அரித்தும் போய் வலுக்குன்றி வெள்ளத்தின்போது உடையும் நிலைக்கு உள்ளாயின.

இந்தக் கால்வாய்களால் பாசனம்பெறும் குளங்களிலும் வரைமுறையின்றி மண்வளம் கொள்ளையடிக்கப்பட்டது. மட்பாண்டம் செய்யவும், வேளாண் நிலத்துக்கும் கரம்பை மண் எடுப்பதாகக் கூறி ஏமாற்றி ஒவ்வொரு குளத்திலும் பல்லாயிரம் லாரிகளில் மண்ணள்ளப்பட்டது. இதனால் குளங்கள் மிகவும் ஆழமாகி மடைக்குத் தண்ணீர் செல்லாமல் உள்ளேயே தங்கிவிடும் போக்கைப் பல இடங்களில் காணலாம். குளத்தங்கரைகளில் கண்டவிடங்களில் பாதைபோட்டு மண் எடுத்தவர்கள் சில இடங்களில் கரைகளை வலுப்படுத்தாமலே விட்டுச் செல்கின்றனர். அதன்பின் மழைக்காலத்தில் குளம் பெருகும்போது அவ்விடங்களிலே உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிக்குள்ளும் ஊருக்குள்ளும் வெள்ளம் பாய்கிறது. 2023 மேமாதத்தில் களக்காட்டில் ஒரு குளத்தின் அருகில் உள்ள சாலையில் நான் சென்று வந்த ஒரு மணி நேரத்துக்குள் 200, 300 டிராக்டர்கள் அங்கிருந்து மண்ணள்ளிச் சென்றிருக்கும். அந்த டிராக்டர் சென்ற தார்ச்சாலையில் முட்டளவுக்குக் கால் புதையுமளவு புழுதிமண் நிறைந்திருந்தது. அப்படியென்றால் பல மாதங்களாக இரவுபகலாக எத்தனை ஆயிரம் டிராக்டர்களில் மண்ணள்ளியிருப்பார்கள். இது பற்றித் தெரிந்தவர்களிடம் உசாவியபோது, மட்பாண்டத் தொழிலாளர்கள் பெயரில் உரிமம்பெற்று அப்பகுதியில் உள்ள செங்கற்சூளைகளுக்கு மண்ணள்ளப்பட்டதாகவும், ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் சேர்ந்து இதைச் செய்ததாகவும் தெரியவந்தது.

மேற்கூறிய மண்கொள்ளை களக்காடு வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தும். தாமிரபரணி பாசனப் பகுதிகளில் உள்ள குளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கு மற்ற வறண்ட பகுதிகளைவிடப் பெருமளவில் மண்கொள்ளை இருந்துள்ளது. இந்நிலையில்தான் கரைகள் தேய்ந்தும், மதகுகள் மடைகள் பேணுதலின்றியும் இருந்த பல குளங்கள் பெருமழை வெள்ளத்தின்போது ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காக உடைந்து ஊருக்குள்ளும் வயல்வெளிகளுக்குள்ளும் கடல்மடை திறந்ததுபோல் வெள்ளம் பாய்ந்துள்ளது. இதில் ஊரே மூழ்கிப் போனபோது பழைய வீடுகள் தொழுவங்கள் இடிந்துள்ளன. அதில் சிக்கிய மக்களும் கால்நடைகளும் உயிரிழந்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் மழை வெள்ளப் பேரழிவால் முப்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மரக்காணம் வட்டாரத்தில் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரக்கப்பட்ட முதலமைச்சர் ஆளுக்குப் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார் என்பது இங்குக் குறிப்பிட வேண்டிய செய்தியாகும். வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்கள் மீது அதே அளவு இரக்கம் அரசுக்கு வராது என்பது அனைவரும் அறிந்ததே. சட்டவிரோதமாக விற்கப்பட்ட சாராயத்தைக் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்குப் பத்து இலட்ச ரூபாய். அரசின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 5 இலட்ச ரூபாய். இந்த அறிவிலாச் செயலைச் சுட்டிக்காட்டி அரசை இடித்துரைக்க வேண்டிய ஊடகங்களும் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு வாயை அடைத்துக்கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் உள்ளன.  

தொடர்ந்த மணற்கொள்ளை, மண்கொள்ளை, மணல் அள்ளுவதற்கென்றே செயல்பட்டு மதகுகள், மடைகள், மறுகால்கள், மணல்வாரிகள் ஆகியவற்றைப் பேணாத பொதுப்பணித்துறை, (நீர்)மணல்வளத்துறை ஆகியவற்றின் பொறுப்பற்ற போக்கு இத்தகைய சூழலின் பின்னணியில்தான் இந்தப் பெருவெள்ளப் பேரழிவு நிகழ்ந்துள்ளது. குளங்கள் உடைந்த இடத்தின் அருகில் உள்ள சாலைகள் ஆள் உயரத்துக்குப் பள்ளமாக அரிக்கப்பட்டுள்ளன. மழைநின்று மூன்று நாட்களாகியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புக் குழுவினரும், மறுவாழ்வுக்கான பொருட்கள் கொண்டுசென்ற ஊர்திகளும் அடைய முடியாமல் போனதற்குச் சாலைகள் பள்ளமாக அரித்துச் செல்லப்பட்டதே முழுக் காரணமாகும். ஏற்கெனவே ஊர்ப்புறங்களில் திராவிட மாடல் சாலைகள் எந்தத் தரத்தில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய சாலைகள் இத்தகைய வெள்ளத்தின் அரிப்பைத் தாங்காது. இருந்தாலும் தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகியவற்றில் மணல் அள்ளி விற்க ஆற்றின் நடுவே கற்கள், சரள் போட்டுச் சாலை அமைத்துக் கொள்ளையடித்த வேகத்தில் ஆர்வத்தில் செயல்பாட்டில் நூற்றில் ஒரு பங்கையாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட சில மீட்டர் நீளச் சாலைகளில் கல்லும் மண்ணும் சரளும் தட்டி அவற்றைச் சீரமைப்பதில் இந்த அரசு காட்டவில்லை. இதனால் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைந்து செய்ய முடியாமல் மக்களின் துன்பம் மேலும் அதிகமானது என்றால் அது மிகையாகாது.

மணலைக் கொள்ளையடிப்பதற்கு விரைவாகச் சாலை அமைக்கும் அரசு வீடு ஆடு மாடு ஆகியவற்றை இழந்து வீதியில் நிற்கும் மக்களுக்கு உதவிப்பொருட்களை வண்டியில் கொண்டுசெல்வதற்காகத் துண்டுபட்ட சாலைகளை உடனடியாகச் சீரமைக்க முடியாதா என்ன?

இவர்களின் நோக்கம் மக்கள் நலம் இல்லை. மண்வளம், மலைவளம், கனிமவளம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது தான் இவர்களின் நோக்கம்.

ஐம்பதாண்டுக்கு மேலாக விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், அதற்காகக் கையூட்டுப் பெற்றுக்கொண்டதும் ஆற்றங்கரை, கால்வாய், ஓடை, குளங்கள், வயல்வெளிகள் ஆகியவற்றைப் பட்டா போட்டு இவர்கள் விற்றதும், நீர்நிலைகளிலும் அவற்றின் ஓரங்களிலும் மக்கள் வீடுகள் கட்டடங்கள் கட்டியதுமே தென்மாவட்ட வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம்.

போர்க்கால அடிப்படையில் ஆற்று மணலை அள்ளிக் கொள்ளையடித்தவர்கள், மக்களைக் காக்கப் போர்க்கால விரைவில் சாலைகளைச் சீரமைக்கவில்லை, ஊர்ப்புறங்களை உற்றுப் பார்க்கவில்லை என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பொருநை ( தாமிரபரணி ) ஆற்றின் வெள்ளப்பெருக்கு காட்டுவது என்ன?

ஆற்றுப் புறம்போக்கு நிலங்களைக் கைப்பற்றி மக்கள் வீடுகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளதைக் காட்டுகிறது. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் நீரின் போக்குக்குத் தடையாக மாறி ஆற்றுவெள்ளம் தடம்மாறி ஊருக்குள் புகுவதற்கு ஏதுவாக அணைக்கட்டு போல் செயல்படுகின்றன என்ற உண்மையைக் காட்டுகிறது. இந்த உண்மையை எடுத்துச் சொன்னால் தமிழ்நாட்டு அரசின் வல்லுநர் குழுவுக்கும், மணல்வளத்துறை அமைச்சர் மணல்முருகனுக்கும் அது விளங்காது. நீர்நிலையைக் கைப்பற்றிக் கட்டடங்களைக் கட்டினால் என்றேனும் ஒருநாள் அவர்களை இயற்கை ஒறுக்கும் என்பதை இந்த வெள்ளப் பேரழிவு காட்டுகிறது.

ஒரு நாட்டில் வறட்சி ஏற்படப் பல மாதங்கள் ஆகலாம். வறட்சியைப் போக்கி வளமாக்கவும், வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தவும் இயற்கைக்கு ஒருநாள் போதும் என்பதைப் பெருமழையால் ஏற்பட்ட பெருவெள்ளமும் பேரழிவும் காட்டுகின்றன.

சே.பச்சைமால் கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக