வியாழன், 28 டிசம்பர், 2023

முள்வேலியாகும் நெல்வேலி

நெல்வயல்கள் வேலிபோன்று அமைந்திருப்பதால் நெல்வேலியென்று சொல்லப்பட்டது திருவென்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுத் திருநெல்வேலியென்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச் சீமையென்று இலக்கியங்களில் பாடப்பெற்ற ஊர் இது. வெள்ளையர் தமிழகத்துக்கு வணிகம்செய்ய வந்தபோது இந்தச்சீமையின் மணற்பாடு, புன்னைக்காயல், தூத்துக்குடி ஆகிய இடங்களில் வணிகக்கூடங்களையும் குடியிருப்புக்களையும் நிறுவினர். அங்கு வழிபடக் கிறித்தவக் கோவில்களையும் கட்டிவைத்தனர்.


( திருநெல்வேலிப் பெருவெள்ளம் )

மதுரை நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் திருநெல்வேலிச்சீமைப் பாளையக்காரர்கள் ஆற்காட்டு நவாப்பின் மேலாண்மைக்குட்பட்டிருந்தனர். பாளையக்காரர்களிடம் இறையிறுக்கும் உரிமையை நவாப்பு வெள்ளையர்களுக்கு விட்டுவிட்டான். அன்றிலிருந்து வெள்ளையர்கள் திருநெல்வேலிச்சீமையின் அரசுரிமையில் தலையிட்டனர். வெள்ளையர்களுக்குப் பணியவும் இறையிறுக்கவும் மறுத்து நெற்கட்டான்செவ்வல் பாளையக்காரர் புலித்தேவனும் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களான கட்டபொம்மனும் ஊமைத்துரையும் கடும்போர் புரிந்தனர். ஆகையால் விடுதலைப்போராட்ட வரலாற்றிலும் மறஞ்செறிந்த மண்ணென்று குறிப்பிடப்படுகிறது இத் திருநெல்வேலிச்சீமை.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தகர்க்கப்பட்ட பின் வெளியேறிய ஊமைத்துரை சிவகங்கைச்சீமை உடன்பிறப்புக்களான மருதிருவரிடம் அடைக்கலம் புகுந்தார். ஆனைமுகனைப் பற்றிய கலி அரசமரத்தையும் பற்றியதைப்போல ஊமைத்துரையின் பகைவரான வெள்ளையரின் பகைக்கு ஆளாகி நட்புக்காகவும் தன்மானத்துக்காகவும் உயிரையும் நாட்டையும் இழந்தனர் மருதிருவர்.

கட்டபொம்மன் மீது வெள்ளையர் சுமத்திய முதற்குற்றச்சாற்றுத் திருவைகுண்டம் நெற்களஞ்சியத்தைச் சூறையிட்டதும் அதற்குக் காரணமான அமைச்சரைப் பிடித்துக்கொடுக்காததும். ஆக நெல்லிலிருந்தே விடுதலைப்போர் தொடங்குகிறது. வரியாக ஒரு நெல்மணியைக்கூடக் கட்டமாட்டேன் என்று சொன்னதால்தான் புலித்தேவனும் வெள்ளையருக்குப் பகைவரானார். தம்மை எதிர்த்த பாளையக்காரர்களைச் சூழ்ச்சியாலும் படைகொண்டும் அடக்கிய வெள்ளையர்கள், தமக்குப் பணிந்த பாளையக்காரர்களிடம் வரிபெற்றுக்கொண்டு திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு வருவாய் மாவட்டத்தை ஏற்படுத்தினர். அது இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செங்கோட்டை வட்டத்தைத் தவிர்த்த பகுதிகளை உள்ளடக்கியது. வெள்ளையர்கள் இங்குப் பாசன வசதிக்காகத் திருவைகுண்டம், பாவநாசம் ஆகிய இடங்களில் அணைகட்டினர். நாட்டு விடுதலைக்குப் பிறகு காமராசர் முதலமைச்சராக இருந்தபோது மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு மாவட்டத்தின் தென்பகுதியான நான்கூனேரி, சாத்தான்குளம் வட்டங்களுக்குத் தண்ணீர் திருப்பப்பட்டது. இப்போது ஏராளமான சிற்றணைகள் கட்டப்பட்டாலும் அவற்றால் விளையும் பயன் சிறிதளவே ஆகும். ஆனால் இச்சிற்றணைத் திட்டங்களால் ஒப்பந்தக்காரரும் அதிகாரிகளும் அரசியலாரும் பெற்றது பேரூதியம்.

ஐவகை நிலங்களைப் பெற்றிருந்த இம்மாவட்டம் நெல், வாழை ஆகியவை விளையும் செழிப்பான நன்செய் நிலங்களையும் சோளம், கம்பு, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்ற தவசங்களும் சிறுபயறு, பெரும்பயறு, பூனைக்கண் பயறு, காணம் போன்றவை விளையும் புன்செய் நிலங்களையும் எள் பருத்தி ஆகியவை விளையும் கரிசல் நிலங்களையும் கொண்டது.

வெள்ளையர் காலத்தில் தூத்துக்குடியிலும் விக்கிரமசிங்கபுரத்திலும் பருத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டுவந்தன. ஆறுமுகனேரி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் உப்பு விளைவிக்கப்பட்டது. இன்றும் தமிழகத்திலே வாழை பயிரிடுவதில் முன்னணியில் உள்ள பகுதி திருநெல்வேலிச்சீமைதான். ஆண்டுக்கு இருபூ நெல் விளைவதும் இங்குத்தான். இந்தப் பெருமையெல்லாம் பொதிகையில் பிறந்து புன்னைக்காயலில் கடலில்புகும் பொருநையாற்றைத்தான் சேரும். தமிழகத்திலே ஆண்டுமுழுவதும் நீரோடும் ஒரேயாறு இதுதான். இந்த ஆற்றங்கரையோரங்கள்தான் நெல் வாழை ஆகியவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் உள்ளன.  இங்குப் புரட்டாசியில் நாற்றுப்பாவித் தைமாதத்தில் அறுக்கும் பிசானம், ஆனியில் நாற்றுப்பாவிப் புரட்டாசியில் அறுக்கும் கார் என இருபூ நெல் பயிரிடப்படுகிறது. பிசான நெல்லறுத்த பிறகு தொளி உழுந்து விதைக்கப்படுகிறது. பின்பனிக்காலத்து ஈரத்தில் உழுந்து விளைகிறது.

சீமை முழுவதும் வள்ளியூர், நான்கூனேரி, சேரமாதேவி, முக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, திருவைகுண்டம், ஏரல், ஆழ்வார்த்திருநகரி, குறும்பூர், ஆறுமுகனேரி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் நன்செய் நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்பட்டுக் கல்நடப்பட்டு உடைவளர்ந்துள்ளன. நகராக்குதல் என்ற முறையில் நெல்வயல்களெல்லாம் முள்வயலாகவும் வீடுகளாகவும் முள்வேலி அமைக்கப்பட்டுப் பயிரிடத் தடுக்கப்பட்ட இடமாகவும் உள்ளது திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில்தான்.

பாளையங்கோட்டை, மேலைப்பாளையம், திருநெல்வேலி, தச்சநல்லூர் ஆகிய நான்கு நகராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதுதான் திருநெல்வேலி மாநகராட்சி. மாநகராட்சிக்குத் திருநெல்வேலிப் பெயரைச் சூட்டியதும் பாளையங்கோட்டைப் பெயர் கொஞ்சங்கொஞ்சமாக மங்கிவருகிறது. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்பெற்றதும் வானிலை ஆராய்ச்சி நிலையம், வானொலி நிலையம், மாவட்டத் தலைமையிடம், காவல்துறைத் தலைமையிடம், ஆங்கில மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, தலைமை அஞ்சலகம், நடுவண் சிறைச்சாலை, நெடுஞ்சாலைத்துறை அறநிலையத்துறை வணிகவரித்துறை வேளாண்துறை தொலைத்தொடர்புத்துறை அலுவலகங்கள் சீர்திருத்த, கத்தோலிக்கப் பேராயங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான பாளையங்கோட்டையின் பெயர் மங்குவது பழைமையின் மீது பற்றுக்கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். மேற்கண்டவை பாளையங்கோட்டையில் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் திருநெல்வேலியென்று எப்படிப் பெயர்சூட்டினார்கள் என்று தெரியவில்லை. மாநகராட்சியில் கிட்டத்தட்ட அரைப்பங்கு மக்கள்தொகை கொண்ட பாளையங்கோட்டையில் தொடர்வண்டி நிலையத்தைக்கூட விரிவாகக் கட்டாததற்கும் வேறேதும் உள்நோக்கம் இருக்குமென்றே தெரிகிறது. ஓராள்கூட ஏறியிறங்காத செங்குளம் நிலையத்தில் உள்ள வசதிகூட இந்நிலையத்தில் செய்யப்படாதது மனத்துக்கு வருத்தமளிக்கிறது.

நன்செய் நிலங்கள் எடுக்கப்படாமல் முதன்முதலில் மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்ட அரசுஅலுவலர் குடியிருப்புப் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்குத் தெற்கே அமைந்துள்ளதாகத்தான் இருக்கும். அகலமான நேரான தெருக்களோடு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. பிற பகுதிகளிலெல்லாம் குளத்திலும் குளத்துப்பற்றிலும் வயல்வெளிகளிலும்தான் குடியிருப்புக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பாளையங்கோட்டையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதைக்கு வடக்கும் கன்னியாகுமரி - காசி நெடுஞ்சாலைக்குக் கிழக்கும் திருச்செந்தூர் தென்காசி நெடுஞ்சாலைக்குத் தெற்கும் ஆயுதப்படை வீட்டுக்கு மேற்கும் உள்ள பகுதியில் ஒரு குளமும் குளத்துப் பற்றும் அரசு அலுவலகங்கள், வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள், குடியிருப்புக்கள் கட்டப்பட்டுச் சீரழிக்கப்பட்டிருக்கின்றன. இலந்தைக் குளமும் குளத்துப் பற்றும்தான் அவை.

பாளையங்கோட்டைத் தொடர்வண்டி நிலையத்துக்கு வடபுறம் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்திலிருந்தும் தூய சவேரியார் கல்லூரியிலிருந்தும் தொடர்வண்டி நிலையத்துக்கு வரும் வழியான ரயில்வே பீடர் சாலை இலந்தைக் குளத்தங்கரை மேல்தான் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இச்சாலைக்குக் கீழ்ப்புறம் குளத்தங்கரையில் உள்ள உயரமான பனைகள் வெட்டப்பட்டும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டும் குளத்தின் சங்கு நெரிக்கப்பட்டு வருகிறது. இலந்தைக் குளத்துப் பற்றென்று இப்போது கேட்டால் யாருக்குந் தெரியாது. பாளையங்கோட்டை இராசேந்திர நகர் என்று கேட்டால்தான் தெரியும்.

இப்படி நன்செய் நிலங்கள் நகராக்கப்பட்டதும் மேட்டுநிலத்தில் அழகான அரசு அலுவலர் குடியிருப்பு அமைக்கப்பட்ட அதே பாளையங்கோட்டையில்தான். இலந்தைக் குளத்தின் நீர்தேங்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் ஒன்றிரண்டல்ல, பத்துக்கும் மேற்பட்டவை. அவை திருச்செந்தூர் தென்காசி நெடுஞ்சாலையில் ஐம்பத்தைந்தாவது கிலோமீட்டரில் கிழக்கேயிருந்து மேற்காகக் காவல்துறை ஆயுதப்படை வளாகம், காவலர் பயிற்சிப் பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறைச் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், வணிகவரித்துறை அலுவலகம், இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறைக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம், மண்டல ஆய்வகம், ஆராய்ச்சி நிலையம், கோட்டப் பொறியாளர், நபார்டு ஊரகச்சாலைகள் திட்ட அலுவலகம் என அமைந்துள்ளன. அதற்கும் மேற்கே பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடம் இதில் கட்டட இடிபாடுகளைத் தட்டக்கூடாது என்றெழுதி வைத்திருக்கின்றனர். அவ்விடத்தில் கட்டட இடிபாடுகளும் கழிவுகளும் செடிசெத்தைகளும் தட்டப்பட்டு மலைபோலக் குவிக்கப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரிக்குத் தெரியவில்லையோ அது? மேற்கண்ட அரசு அலுவலகங்களுக்கு முன்னும் தூய சவேரியார் கல்லூரிக்குப் பின்னும் சாலையிலுள்ள பாலங்களில் 54/1 மட்டுமே அடைபடாமல் உள்ளது. 54/2, 3 ஆகியவை தண்ணீர் செல்லமுடியாத அளவு அடைபட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிகமழை பெய்யும் பகுதிகளில் ஒன்று பாளையங்கோட்டையாகும். இங்கு ஒரு மாநில நெடுஞ்சாலையிலே நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தருகிலே இப்படிப் பாலங்களையெல்லாம் அடைத்திருப்பது வியப்பளிக்கிறது. இங்கேயே இப்படியென்றால் பிறவிடங்களில் தண்ணீர் செல்லும் பாலங்கள் எப்பாடு பட்டிருக்கும்?

பாளையங்கோட்டை முருகன்குறிச்சிக்கு வடபுறமுள்ள மூளிக்குளத்துப் பற்றிலும் வயல்களில் மருத்துவமனையும் கல்வி நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. முருகன்குறிச்சிக்கு மேற்புறமுள்ள வயல்களில் பெரும்பாலானவை நெல் நட்டுவிடா வண்ணம் கல் நடப்பட்டுள்ளது. வண்ணார்ப்பேட்டைப் புறவழிச்சாலைக்குக் கிழக்கேயும் திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதைக்கு வடக்கேயும் உள்ள வயல்கள் இன்னும் ஓரிரண்டாண்டுகளில் நடாமல் விடப்படும் நிலை உள்ளது. வயல்களில் கட்டட இடிபாடுகளைத் தட்டி மேடாக்கும் போக்குத் தொடர்கிறது. வண்ணார்ப்பேட்டையில் வண்டி விற்பனையகங்களும் உணவகங்களும் பெருங்கடைகளும் கட்டப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டில் தச்சநல்லூர் - மேலைப்பாளையம் புறவழிச்சாலை வண்ணார்ப்பேட்டை வழியாக அமைக்கப்பட்ட பிறகு வண்ணார்ப்பேட்டையில் அச்சாலையையொட்டி ஏராளமான நன்செய் வயல்களில் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆக நன்செய் நிலங்கள் கட்டடங்கள் கட்டப்பட்டுச் சீரழிக்கப்படுவதற்கு அரசுதான் முதற் காரணம். நெல்விளைந்த வயல்கள் கல்நடப்பட்டு வளைக்கப்பட்டிருக்கின்றன. உழவர்களிடமிருந்த வயல்கள் பெரும் பணப்பூதங்களிடமும் வம்புக்காரர்களிடமும் கைமாறியிருக்கின்றன.

திருநெல்வேலிச் சந்திப்பையும் மேலைப்பாளையத்தையும் இணைக்கும் கொக்கிரகுளம் - குறிச்சிச் சாலையோரத்திலும் வயல்வெளிகளில் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் முன்னீர்ப்பள்ளம் மேலைப்பாளையம் குறிச்சி ஆகிய பகுதிகளில் பாளையங்கால்வாய்க்கு மேல்புறமும் வடபுறமும் கட்டடங்கள் கட்டப்படாமல் கட்டுப்பாட்டுடன் உள்ளது. மாநகராட்சியில் உள்ள பிற பகுதிகளை ஒப்பிடும்போது இங்கு வயல்வெளிகளைக் கட்டடமாக்கும்போக்கு அறவே இல்லை எனலாம். எனினும் மேலைப்பாளையம் தொடர்வண்டி நிலையத்தருகே நெல்லை நகருக்குச் செல்லும் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதன் வடபுறம் ஒரு மருத்துவமனை என்று மருந்துக்கு இரண்டு கட்டடங்கள் உள்ளன. மேலைநத்தம் கீழைநத்தம் போன்ற இடங்களிலும் வயல்வெளிகள் கட்டடமாக்கும் போக்குக் குறைவாகவே உள்ளது. வீடுகள் கட்டடங்கள் இல்லாவிடங்களில் பாளையங்கால்வாய் விரிந்தும் ஆழமாகவும் துப்புரவாகத் தூர்வாரப்பட்டும் உள்ளது. வீடுகள் கட்டடங்கள் உள்ள பகுதிகளில் இடிபாடுகள் தட்டப்பட்டும் செடிகள் தட்டப்பட்டும் சங்கு நெரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடைப்பாலங்கள் உள்ள பகுதிகளில் பாலித்தீன் தாள் தட்டப்பட்டுத் தண்ணீரைச் செறுத்துக்கொண்டுள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீரின் ஓட்டம் தடைபடுகிறது. கால்வாயிலிருந்து வயல்களுக்கு வாய்க்கால்கள் செல்லும் பாதைகளில் கட்டடங்கள் எழுப்பப்பட்டுத் தண்ணீர் பாய்வது தடுக்கப்பட்டுள்ளது. முருகன்குறிச்சியில் நெடுஞ்சாலையைத் தாண்டி வடபுறம் முதல் மதகிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வாய்க்கால் இவ்வாறு நெரிக்கப்பட்டு அடைபடும் நிலையிலுள்ளது. அதுவொரு கிருத்தவக் கல்வி நிறுவனத்துக்குக் கீழே செல்கிறது. அல்லது அதற்குமேல் ஒரு கிருத்தவக் கல்வி நிறுவனம் கட்டப்பட்டுவிட்டது. ஊருக்கே உயிரோட்டம் இந்தக்கால்வாயின் நீரோட்டந்தான் என்பது மக்களுக்கு இன்னுந்தெரியவில்லை. முழுவதும் அடைபடும்நிலை வந்தபிறகும் பொதுப்பணித்துறை பிணியிலுள்ளதோ என்னமோ? கால்வாயில் இடிபாடுகளைத் தட்டக்கூடாது என்று சொல்லவில்லை.

திருநெல்வேலிச் சந்திப்பிலிருந்து தென்காசிக்குச் செல்லும் இருப்புப்பாதையின் இருபுறமும் வயல்வெளிகள் பசுமையாய் இருந்தன. இப்போது வாய்க்கால்கள் அடைபட்டுப்போனதால் பல வயல்கள் நடமுடியாமல் இருக்கின்றன. சந்திப்பிலிருந்து சிக்கநரசையன்கிராமத்துக்குச் செல்லும் சாலையின் வடபுறமுள்ள வயல்கள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் வீட்டுமனைகளாக்கப்பட்டுள்ளன. இவ்வூரில் நிறைய வயல்கள் பயிரிடப்படாமல் உள்ளன. குறுக்குத்துறையிலிருந்து திருநெல்வேலி நகரத்துக்குச் செல்லும் மேலைப்பாளையம் திருநெல்வேலிச் சாலையின் இருபுறமும் ஓங்கியுயர்ந்த மருதமரங்கள் நிற்கின்றன. இச்சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் நடப்பட்டுள்ளன. நாகரிகத்தின் உச்சமென்று எண்ணிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கேடு விளைவிக்கும் பொருளான பாலித்தீன் தாள்கள் வயல்களில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. இவை காற்றால் பறந்து வயல்களுக்குப் போகின்றன. சாலையின் மேற்புறம் மாநகராட்சி நீரேற்று நிலையம் உள்ளது. இது நன்செய்நிலத்தில் கட்டப்பட்டதுதான். அதற்குக் கொஞ்சம் மேற்கில் நடுவயலில் ஒரு குடியிருப்புக் கட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி _ தென்காசி இருப்புப்பாதையும் மேலைப்பாளையம் _ திருநெல்வேலிச் சாலையும் சந்திக்குமிடத்தில் பள்ளி, கோவில் என வயல்வெளிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி நகரத்தின் தென்கிழக்கு முக்கில் ஒரு திரையரங்கம் கட்டப்பட்டுள்ளதும் வயலில்தான். அந்த முக்கிலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் தெற்கு மலைச்சாலைக்குத் தென்புறமுள்ள கட்டடங்களெல்லாம் வயல்களை மேடாக்கிக் கட்டப்பட்டவைதான். அதில் குறிப்பிடத்தக்கது துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் குடிசைமாற்று வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. அதன் எல்லையை அடியொற்றிப் பிறர் வயல்வெளிகளில் வீடுகட்டவும் கட்டடங்கள் கட்டவும் தொடங்கிவிட்டனர். திருநெல்வேலி நகரத்தின் தேரோடும் வீதியில் தென்கிழக்கு (வாகையடி) முக்கிலிருந்து தொடர்வண்டி நிலையத்துக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வயல்வெளிகளில் கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளிக்குத் தென்புறமும் நிலைமை இப்படித்தானுள்ளது.

திருநெல்வேலி - தென்காசி இருப்புப்பாதைக்குத் தென்புறம் வீடுகள் கட்டப்படாதது வியப்புக்குரியதன்று. இருப்புப்பாதைக்குத் தெற்கே வீடுகட்டினால் போக்குவரத்துக்கு ஏந்தாக இராது என்பதால்தான் வீடுகட்டப்படவில்லை. அப்படியும் எங்கெங்கே சாலைக்கடவு உள்ளதோ ஆங்காங்கே இருப்புப்பாதைக்குத் தென்புறமும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி நகரத் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்புறம் தென்பற்றுக்குச் செல்லும் சாலைக்கடவு உள்ளது. இந்தச்சாலையோரத்தில் வயல்கள் வீடுகளாக்கப்பட்டுள்ளதைத் தெற்கிலும் காணலாம். இருப்புப்பாதைக்கு வடபுறமுள்ள வயல்களெல்லாம் கிட்டத்தட்ட வீடுகளாக்கப்பட்டுவிட்டன. அந்தக்கொடுமையின் உச்சக்கட்டத்தை நகரத்தின் மேற்புறத்தில் சேரமாதேவிச் சாலைக்குத் தென்புறம் கோடீசுவரநகர் என்ற பெயரில் சொல்லப்படும் வயல்வெளிகளில் காணலாம். சாலையோரத்தில் நெருக்கமாக வீடுகள் காணப்படுகின்றன. தெற்கே செல்லச்செல்ல வீடுகள் அமைந்திருக்கும் நெருக்கம் குறைகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இருப்புப்பாதை வரைக்கும் உள்ள இடங்கள் வீடுகளாக்கப்பட்டுவிடும். இப்போது அப்பகுதியில் கால்பகுதி வயல்வெளியாக உள்ளது. சேரமாதேவிச் சாலைக்கும் தென்காசிச் சாலைக்கும் ஊடேயுள்ள வயற்காடும் வீடுகளும் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு மேற்புறமுள்ள குளம் நிரப்பப்படாததற்கு இப்பகுதி வீடுகளுக்குத் தண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கும் என்று எண்ணவேண்டியுள்ளது.

மாநகராட்சியின் மேலைக்கோடியான புதுப்பேட்டையின் மேற்றிசையில் அமைந்துள்ள பேட்டைக்குளம் மழைக்காலத்தில் மட்டுமே பெருகுமாம். அக்குளத்துப் பற்று எங்குள்ளது என்று தேடும் நிலையிலுள்ளது. பிசானத்தில் மட்டுமே நெல்விளையும் பற்றான அது வீடுகள் கட்டப்பட்டும் முட்கம்பி வேலி போடப்பட்டும் சரல் தட்டப்பட்டும் உடைமுள் பற்றியும் காணப்படுகிறது. ஒரு பள்ளிக்கூடங்கூட அந்தப்பற்றில் கட்டப்பட்டுள்ளது. புதுப்பேட்டையிலிருந்து பழைய பேட்டைக்குச் செல்லும் சாலைக்குக் கிழக்கேயுள்ள பள்ளிவாசல் பற்றும் உடைமுள் பற்றியே காணப்படுகிறது. அதில் நிறைய நிலம் முட்கம்பி வேலிபோட்டு வளைக்கப்பட்டுள்ளது. இந்தச்சாலையில் பழையபேட்டைக்கு அருகே சென்றதும் சாலையின் இருபுறமும் பாலித்தீன் தாள்கள் பறந்துகொண்டும் உடைகளில் தொங்கிக்கொண்டும் உள்ளன. நாம் சாலையில் சென்றால் நம் முகத்தில் வந்துவிழுந்துவிடும் என்ற அச்சம் நிறையவே உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் பகுதி இப்பகுதியாகத்தான் இருக்கும்.

பழையபேட்டைக்குக் கிழக்கேயும் திருநெல்வேலி நகரத்துக்கு வடக்கேயும் திருநெல்வேலி _ இராசபாளையம் சாலைக்கு மேற்கேயும் இராமையன்பட்டிக்குத் தெற்கேயும் பரந்துவிரிந்துள்ள கண்டியப்பேரிப் பற்றில் தெற்கேயும் தென்மேற்கிலும் வயல்கள் மேடாக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இராசபாளையம் சாலையின் மேற்புறத்தில் தனியார் பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. கல்விக்கூடமும் அது அமைந்திருக்கும் வயற்காட்டைப் பொறுத்தவரை ஒரு களைதான். இராமையன்பட்டிக்குத் தென்புறமும் தச்சநல்லூருக்கு மேற்புறமும் நயினார்குளத்துக்கு வடபுறமும் அமைந்திருக்கும் தேனீர்க்குளப்பற்றுக் கார்ப்பருவத்துக்குத் தண்ணீரில்லாமல் காய்ந்துகிடக்கிறது. திருநெல்வேலி நகரத்தின் வடபுறம் கண்ணுக்குக் குளிர்ச்சியாயும் நகரிலே பெரிதாயும் அமைந்திருப்பது நயினார்குளம். நயினார்குளத்தின் கரையை ஒட்டிய பகுதிகளில் காய்கறிச்சந்தையும் வண்டிப் பணிமனைகளும் கட்டப்பட்டுள்ளன. பொருட்காட்சித் திடல், வ.உ.சி. மணிமண்டபம், துணை மின் நிலையம் என நயினார்குளத்துப் பற்றில் வயல்களைக் கெடுத்துச் செய்யப்பட்டுள்ள நன்மைகள் ஏராளம். நெல்லையப்பர் நெடுஞ்சாலையிலிருந்து ஊருடையார்புரத்துக்குச் செல்லும் சாலையிலும் ஏராளமான வண்டிப் பணிமனைகளும் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சாலைக்குக் கிழக்கே தொடர்வண்டிப் பணியாளர் குடியிருப்புவரை வயல்வெளிகள்தான். இப்போது அந்தப்பற்றில் ஒரு வயல்கூட நடப்படவில்லை.

தொடர்வண்டிச் சந்திப்புக்கு வடக்கில் தச்சநல்லூருக்குக் கிழக்கில் உள்ள பற்றுக்காடு பாலபாக்கிய நகர் என்றபெயரில் குடியிருப்புப் பகுதியாகிவிட்டது. இப்பகுதியிலிருந்து புறவழிச்சாலைக்குக் கீழ்ப்புறத்து வயல்களுக்குச் செல்லும் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. கால்வாய்ப் பாலத்தை அடைத்த நகரென்று பெயர் சூட்டலாம். சந்திப்பிலிருந்து மதுரைக்குச் செல்லும் சாலையின் கீழ்ப்புறமும் சிந்துபூந்துறைக்கு வடக்குமுள்ள குடிதாங்கிக்குளம் சுற்றியும் நெருக்கப்பட்ட நிலையில் மூச்சுவிடத் திணறுகிறது. இன்னுங் கொஞ்சங் காலத்தில் கட்டட இடிபாடுகளால் இதை நிரப்பிவிடுவார்களென்று தெரிகிறது. இக்குளத்துப்பற்றில் இப்போது பயிரிடப்படுவதில்லை.

இராமையன்பட்டிக்குக் கிழக்கிலும் தச்சநல்லூருக்கு வடக்கிலும் மதுரைச்சாலைக்கு மேற்கிலுமுள்ள சத்திரம் புதுக்குளம் பற்றின் தென்பகுதி முழுவதும் மனைவணிகர்களின் பிடியில் சிக்கிச் சீரழிகிறது. இப்பற்றில் பாதியிடங்களில் வீடு கட்டப்பட்டுள்ளது. மீதியிடத்தையும் சரல்தட்டிச் சீரழித்துள்ளனர். ஒரு பூக்கூட விளைவிக்காமல் வயல்கள் உடைபற்றிக் காணப்படுகின்றன. சத்திரம் புதுக்குளம் பற்றின் வடபகுதி ஒரு பூ விளையுந் தகுதி பெற்றிருந்தாலும் அங்கும் மனை வணிகர்கள் கல் நட்டிருப்பது அப்பகுதியைப் பார்க்கும்போது

தெரிகிறது. நடுப்பற்றில் பெருவணிகர் ஒருவருக்கு உரிமையான பத்துக்குறுக்கத்துக்கும் மேற்பட்ட நிலம் பல்லாண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்படாமலும் பயிரிடுவோருக்குக் கொடுக்காமலும் உடைபற்றியுள்ளது. திருநெல்வேலி நகரத்தில் பொன்னகைக்கடை வைத்திருக்கும் தனியாரொருவர் மேலைக்கரை ஊருக்கும் மதுரைச்சாலைக்கும் மேற்கே அருகன்குளம் கால்வாயில் பொதுப்பணித்துறையின் அனுமதி பெறாமலே வயலை மனைகளாக்கப் பாலங்கட்டி வருகிறார். அகலமாக இருக்கும் கால்வாயைச் சுருக்கும் வகையில் குறைவான அகலத்தில் பாலங்கட்டப்படுவது அதைப் பார்ப்பவருக்குத் தெரியும். இந்தப் பற்றுக்கு வடக்கேயும் தாழையூற்றுக்குத் தென்புறமும் ஒரு வயற்காடு உடைபற்றிக் கிடக்கிறது. வயற்காட்டில் பாதியை ஒருவரே வளைத்திருப்பது முட்கம்பி வேலி அமைத்திருப்பதிலிருந்து தெரிகிறது.

உடையார்பட்டிக் குறுக்குச்சாலைக்குக் கிழக்கே கீழைக்கரைப்பற்று உடைபற்றிக் காணப்படுகிறது. இப்பகுதியில் இருப்புப்பாதைக்குக் கிழக்கே மனைவணிக நிறுவனமொன்று கால்வாயில் பாலங்கட்டி மனைகளுக்கிடையேயுள்ள பகுதியில் தார்ச்சாலை அமைத்து வைத்துள்ளது. நகரத்தில் எங்குமில்லாத அளவுக்கு இந்தப் பற்று உடங்காடாகக் காட்சியளிக்கிறது. மணிமூர்த்தீசுவரத்திலிருந்து சேந்திமங்கலத்துக்குச் செல்லும் சாலையில் ஐஸ்கிரீம் நிறுவனம், எரிவளி நிறுவனம் போன்றவை வயல்களை மேடாக்கித் தங்கள் கிட்டங்கிகளைக் கட்டியுள்ளன.

கன்னியாகுமரி - காசி நெடுஞ்சாலை இதுவரை மும்முறை தடம் மாறியுள்ளது. முதலில் பாளையங்கோட்டை திருநெல்வேலிச் சந்திப்பு தச்சநல்லூர் தாழையூற்று வழியாக வடக்குநோக்கிச் சென்ற சாலை பின் பாளையங்கோட்டைக்கும் மேலைப்பாளையத்துக்கும் ஊடே வடக்குநோக்கிச் சென்று வண்ணார்ப்பேட்டை உடையார்ப்பட்டி வழியாகத் தச்சநல்லூருக்கு வடக்கே சென்று தாழையூற்றுக்குச் சென்றது. இப்போது பாளையங்கோட்டைக்குத் தெற்கே சாலைப்போக்குவரத்து நிறுவனப் பல்தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலிருந்து வடகிழக்குத் திசைநோக்கித் திரும்பிப் பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் திருச்செந்தூர்ச் சாலை, தூத்துக்குடிச்சாலை ஆகியவற்றைத் தாண்டி வடக்குநோக்கிச் சென்று சீவலப்பேரிச் சாலையைத் தாண்டி ஆற்றையும் தாண்டி நாரணம்மாள்புரம் குறிச்சிக்குளம் வழியாகத் தாழையூற்று சிமெண்ட் ஆலைக்கு முன்பு பழைய சாலைசென்ற இடத்தில் இணைகிறது. இந்தச் சாலை அமைக்கத் திட்டமிட்டவர்கள் ஏராளமான நன்செய் நிலங்கள் வீணாகப்போவதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் உடையார்ப்பட்டிச் சாலையையே நால்வழிச்சாலையாக மாற்றியிருக்கலாம். பல்தொழில்நுட்பக்கல்லூரியிலிருந்து தாழையூற்று வரை இருபது கிலோமீட்டர் தொலைவுக்குப் புதிய நால்வழிச்சாலை அமைத்ததற்கு உடையார்ப்பட்டிச் சாலையையே மேம்படுத்தியிருந்தால் தொலைவும் ஆறு கிலோமீட்டர் வரை குறைந்திருக்கும். புதிய பாதை அமைத்ததில் சீவலப்பேரிச் சாலைக்குத் தெற்கேயுள்ள பகுதியில் நன்செய்நிலங்கள் கைப்பற்றப்படா விட்டாலும் சீவலப்பேரிச் சாலைக்கும் தாழையூற்றுக்கும் இடையே இரு பூ விளையும் பலநூறு ஏக்கர் நன்செய் நிலங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்குள் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் அடைபட்டு இன்னுஞ் சிலநூறு ஏக்கர் நிலங்கள் பயிரிட முடியாத நிலைமை உருவாகும் எனத் தெரிகிறது. நட்ட பகுதிகளில் தண்ணீர்காணாமல் நாற்றுக் காய்ந்து கிடப்பதைப் பார்க்கும்போது வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார்தான் நினைவுக்கு வருகிறார். இக்காலத்தில் பயிர் மட்டுமல்ல, மாநிலத்து உயிர்களெல்லாம் வாடினாலும் நான் ஆடிக்கொண்டிருப்பேன் என்று சொல்பவர்களே ஆட்சியிலிருப்பதால் பயிரைக் கண்டு நாம்தான் வாட வேண்டும். காக்க வேண்டியவர்கள் இன்னும் எங்கெங்கெல்லாம் சாலையமைத்து வயல்களைச் சீரழிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பார்கள்.

இதுவரை கூறிய பற்றுக்களில் பேட்டைக்குளத்துப் பற்றைத் தவிர மற்றெல்லாப் பற்றுக்களும் பிசானம் கார் என ஆண்டுக்கு இரு பூ விளையும் பகுதிகளாகும். ஒருமுறை உழுந்து பயிரிடப்படும். இவ்வாண்டு சரியாகச் சாரல் பெய்யாததால் ஆற்றிலும் நீர்வரத்துக் குறைவு. கால்வாய்களிலும் நீர்வரத்துக் குறைவு. ஆடிப் பதினெட்டாம் பெருக்குக்கு முன்னாலே வயல்களில் நீர்காய்ந்து சுருக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆற்றுக்கு வடபுறமுள்ள திருநெல்வேலிக் கால்வாயுடன் ஒப்பிடும்போது ஆற்றுக்குத் தெற்கேயுள்ள பாளையங் கால்வாயில் அடைப்புகளும் நெரிப்புகளும் குறைவு என்பதால் அதில் ஓரளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆகையால் தென்பகுதியில் கிட்டத்தட்ட எல்லா வயல்களும் நடப்பட்டுவிட்டன. மனை வணிகர்களால் வளைக்கப்பட்டுள்ள வயல்கள் மட்டும் நடப்படவில்லை.

ஆற்றுக்கு வடபுறமுள்ள பகுதிகளில் திருநெல்வேலி - தென்காசி இருப்புப்பாதைக்குத் தென்புறமுள்ள வயல்களில் கார் பயிரிடப்பட்டுள்ளது. வடபகுதியில் கோடீசுவரநகர் என்று சொல்லப்படும் பகுதியில் மட்டும் கொஞ்சம் நடப்பட்டுள்ளது. கண்டியப்பேரிப்பற்று, நயினார்குளப்பற்று, தேனீர்க்குளப்பற்று, இராமையன்பட்டிப் பற்று, சத்திரம்புதுக்குளம் பற்று, மேலைக்கரை கீழைக்கரைப் பற்றுக்கள், மணிமூர்த்தீசுவரம் பற்று, சேந்திமங்கலம் பற்றுப் போன்றவை கார்நடாமல் காய்ந்துகிடக்கின்றன.

திருநெல்வேலிக் கால்வாய் பெயருக்கேற்றாற்போல் திருநெல்வேலி நகர் வழியாகப் பாய்ந்து வருகின்றது. அதுதான் நகர்ப்பகுதிக்குள் அதன் அகலம் குறைவதற்கான காரணமும் ஆகும். மக்கள் கட்டட இடிபாடுகளைக் கால்வாய்க்குள் தட்டி விடுகின்றனர். கழிவுகள், பாலித்தீன் தாள்கள் போன்றவற்றையும் கால்வாய்க்குள்ளே தட்டி விடுகின்றனர். தச்சநல்லூரைக் கடந்தவுடன் கால்வாய் மீண்டும் அகலமாகிறது. இருந்தாலும் நகரத்தின் கழிவுகள் தண்ணீரில் அரித்துவரப்படுகின்றன. ஒருகாலத்தில் குடிக்கக் குளிக்கப் பயன்படுத்தப்பட்ட கால்வாய்த் தண்ணீர் இன்று துவைக்கக்கூடப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதிலிருந்து இதன் மாசுபாட்டை அறியலாம்.

வயல்வெளிகள் வீடாக்கப்படுவதற்குக் குறிப்பிடத்தக்க காரணம் உழவர்கள் வறுமை, மக்களின் படிப்பு, திருமணம் போன்றவற்றிற்காக வயலை விற்றுவிடுவதும் அவ்வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கத் தேவையான பணம் அரசு ஊழியர்களிடமும் வணிகர்களிடமும் குவிந்துகிடப்பதுமாகும். ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு இரு பூ நெல்விளைந்தால் ஐம்பது மூட்டை நெல் கிடைக்கும். இது அதிக விலைக்கு விற்றால் முப்பத்தையாயிரம் ரூபாய்க்கு விற்கும். இந்த நிலத்தை சென்று (cent) 1 இலக்கம் ரூபாய்க்கு விற்றாலும் ஒருகோடி ரூபாய்க்கு விற்றுவிடலாம். வங்கியில் வைப்புத்தொகையாக இதை வைத்தால் குறைந்த வட்டியென்று பார்த்தாலும் ஆண்டுக்கு எட்டரையிலக்கம் ரூபாய் கிடைக்கும். இதைவைத்துக்கொண்டு வாழ்க்கையை இனிமையாக வாழலாம் என்று உழவர்கள் கணக்கிடுகின்றனர். இவர்களின் கணக்கில் உழைப்புத் தோற்றுவிடுகிறது. பணக்காரர்களின் பணம் வென்றுவிடுகிறது. சுற்றுச்சூழல் சமன்பாடு தோற்றுவிடுகிறது. சீரழிவு வென்றுவிடுகிறது.

இருபதாண்டுகளுக்கு முன் நகரைச் சுற்றி வயல்கள் பச்சைப்பசேலென்று இருந்தன. இன்று கட்டடங்களாகவும் முட்காடுகளாகவும் நடுகல்காடுகளாகவும் இருப்பது நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள்ளாகக் குத்தத்தான் செய்கிறது. வயல்வெளிகளெல்லாம் கட்டடங்களாகும் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் முதற்குற்றவாளி அரசுதான். அரசின் தொலைநோக்கற்ற திட்டங்களால்தான் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சாலை அமைக்கப்பட்டது. சாலையமைத்தவுடனே சாலையையொட்டிய நிலப்பகுதியில் கட்டடங்கள் கட்டுகின்றனர். போக்குவரத்து வசதியுள்ளதால் அந்நிலம் சந்தைமதிப்பைவிடப் பன்மடங்கு விலைக்கு விற்கிறது. உரிமையாளரே கட்டடங் கட்டுகிறார். அல்லது மனை வணிக நிறுவனங்களிடமோ தொழில் நிறுவனங்களிடமோ விற்றுவிடுகிறார். உரிமையாளர் எளியவர் என்றால் வலியவர் மருட்டிப் பிடுங்குவதும் நடக்கிறது. உடையார்ப்பட்டி வண்ணார்ப்பேட்டை மேலைப்பாளையம் புறவழிச்சாலையை அரசு அமைத்தபோதுதான் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டப்பட்டன. வண்ணார்ப்பேட்டை வடக்குப் பகுதியில்தான் நிறையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

வயல்வெளிகளில் சாலை அமைப்பதென்றால் அரசுக்கும் சாலையோரங்களில் கட்டடம் கட்டுவதென்றால் மக்களுக்கும் இளக்காரமாய்ப் போய்விட்டது. இந்நிலை என்று மாறுமோ? திருநெல்வேலி முள்வேலியாவது தடுக்கப்படுமோ? பாளையங்கோட்டை மேட்டுத்திடல், பேட்டைக்கு மேற்கேயுள்ள பறம்பு, பொறியியல் கல்லூரிக்குத் தெற்கேயுள்ள செம்மண்பொட்டல் போன்ற இடங்களில் எவ்வளவு கட்டடங்கள் வேண்டுமென்றாலும் கட்டிக்கொள்ளலாம். ஆனால் எத்தனை கோடி ரூபாய் செலவிட்டாலும் அந்நிலங்களை நன்செய்யாக்க முடியாது. அதையுணர்ந்து நன்செய்களில் கட்டடங்கள் கட்டுவதை மக்களும் அரசும் தவிர்க்க வேண்டும்.

( 2011ஆம் ஆண்டு கோடையில் பாளையங்கோட்டை, மேலைப்பாளையம், திருநெல்வேலி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு செய்த பின் எழுதிய இந்தக் கட்டுரை பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழில் 2011 நவம்பர் மாதத்தில் வெளியானது. கட்டுரை எழுதி வெளியாகி 12ஆண்டுகளுக்குப் பின் 2023 திசம்பரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்ட நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இதை மீண்டும் தமிழ்ச் செய்திக்களத்தில் வெளியிட்டுள்ளேன் )

சே.பச்சைமால் கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக